Published : 20 Feb 2024 06:04 AM
Last Updated : 20 Feb 2024 06:04 AM

தமிழக பட்ஜெட்: கோவை தொழில்துறையினர் கருத்து

கோவை: தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்புகள் குறித்து கோவை தொழில்துறையினர் வரவேற்பும், ஏமாற்றமும் தெரிவித்துள்ளனர். அதன் விவரம்:

இந்திய தொழில் வர்த்தக சபை, கோவை தலைவர் ஸ்ரீராமலு: பள்ளி, உயர் கல்வித்துறை வளர்ச்சிமற்றும் பள்ளி கட்டமைப்புகளுக்குநிதி ஒதுக்கீடு, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துறைக்கு ரூ.5 கோடி ஒதுக்கீடு உள்ளிட்ட நல்லஅறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரகதொழில்முனைவோர் சங்கத்தின்(காட்மா) தலைவர் சிவக்குமார்: சென்னையில் 2025-ல் புத்தொழில் மாநாடு, 4 புதிய பாலிடெக்னிக் கல்லூரிகள், தொழில் பயிற்சி மாணவர்களுக்கு கல்லூரி கட்டணத்தை அரசே ஏற்க நிதி ஒதுக்கீடு உள்ளிட்டபல கோரிக்கைகள் வரவேற்கத்தக்கவை. மின்கட்டணம் குறைப்பு, புதிய தொழிற்பேட்டைகள் உள்ளிட்ட அறிவிப்புகளை கூட்டத்தொடரில் வெளியிட வேண்டுகிறோம்.

தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தின்(சைமா) தலைவர் சுந்தரராமன்: நூற்பாலைகளை நவீனப்படுத்த 6 சதவீத வட்டி மானியத்தை அறிவித்து அதற்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாட்டில் நூற்பு இயந்திரங்களை நவீனப்படுத்த வட்டி மானியம் வழங்கிய முதல் மாநிலம் தமிழகம் தான். ஆடை உற்பத்திக்கான சிறப்பு திட்டத்தில் வழங்கப்பட்டு வந்த 15 சதவீத முதலீட்டு மானியத்தை 25 சதவீதமாக உயர்த்தியது உள்ளிட்டபல அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை.

இந்திய பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் கார்த்திக்: தமிழக அரசின் பட்ஜெட், பொருளாதாரத்தின் தன்மையை மாற்றக்கூடிய ஒன்றாக நிச்சயம் அமையும்.ஆராய்ச்சியில் தேர்வு பெற்றவர்களை உயர் திறன் பணியில் அமர்த்திதமிழக தொழில்துறை வெற்றி பெற ஊதியத்தில் 30 சதவீதம் மானியமாக வழங்குவது உலகளவில் புதுமையான திட்டம் ஆகும். அறிவுசார் மாநிலமாக தமிழகத்தை மாற்றும் வகையில் அறிவிப்புகள்அமைந்துள்ளன.

தமிழ்நாடு கைத்தொழில் மற்றும்குறுந்தொழில்முனைவோர் சங்கம் (டாக்ட்) மாவட்ட தலைவர் ஜேம்ஸ்: குறிச்சி, சிட்கோவில் 12 ஏக்கர் நிலப்பரப்பில் 4 அடுக்குமாடி தொழில்கூடம், தகவல் தொழில்நுட்ப பூங்கா வுக்காக ரூ.1,100 கோடி ஒதுக்கீடு உள்ளிட்டவற்றை வரவேற்கிறோம். உயர்த்தப்பட்ட மின்சார நிலை கட்டணம்திரும்ப பெறப்படும் என்ற எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படவில்லை.

மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு தலைவரும், தமிழ்நாடு தொழில்துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளருமான ஜெயபால்: விருதுநகர், சேலத்தில் ஜவுளிப்பூங்கா அமைக்க நிதி ஒதுக்கீடு. கரூர், விருதுநகர், ஈரோடு மாவட்டங்களில் சிறு ஜவுளி பூங்கா அமைக்க நிதி ஒதுக்கீடு உள்ளிட்டவை வரவேற்கத்தக்கது. குறைந்த கட்டணத்தில் மின்சாரம் வழங்கினால் தான் மற்றமாநிலங்களுடன் போட்டியிட முடியும். டிமாண்ட் கட்டண உயர்வு, மேற்கூரை சூரியஒளி ஆற்றல் திட்டத்தில் நெட்வொர்க் கட்டணம் ஆகியவை ரத்து செய்யப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது.

கோவை கம்ப்ரசர் தொழில் அமைப்பின்(கொசியா) தலைவர் ரவீந்திரன்: கடுமையான நிதிபற்றாக்குறை, இலவச திட்டங்கள் சுமைக்குமத்தியில் அனைத்து தரப்பினரையும் திருப்தி செய்ய முயலும் பட்ஜெட்டாக அமைந்துள்ளது.

இந்திய தொழில் முனைவோர் சங்கத்தின் தேசிய தலைவர் ரகுநாதன்: பல துறைகளிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. மூன்றாம் பாலினத்தவர் வாழ்வில் முன்னேற்றம் பெற வழி ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x