Published : 20 Feb 2024 06:10 AM
Last Updated : 20 Feb 2024 06:10 AM

பசுந்தேயிலை கிலோவுக்கு ரூ.2,000 மானியம்: சிறு விவசாயிகள் வரவேற்பு

உதகை: நீலகிரி மாவட்டத்தின் பிரதான தொழில் தேயிலை விவசாயம். மாவட்டத்தில் சுமார் ஒரு லட்சம் ஏக்கரில் தேயிலை பயிரிடப்பட்டுள்ளது. 65 ஆயிரம் சிறு, குறு விவசாயிகள் தேயிலை விவசாயம் செய்து வருகின்றனர். மேலும், சுமார் ஒரு லட்சம் பேர் தேயிலை விவசாயத்தை சார்ந்துள்ளனர்.

மாவட்டத்தில் 180 தனியார் தேயிலை தொழிற்சாலைகள் உள்ளன. தேயிலை உற்பத்தியில் இண்ட்கோ சர்வ் 15 சதவீதம் பங்கு வகிக்கிறது. இந்நிறுவனமே, சிறு தேயிலை விவசாயிகளின் ஒரே நம்பிக்கை. அரசின் இண்ட்கோ சர்வ் நிறுவனத்தின் கீழ், 16 தேயிலை தொழிற்சாலைகள் உள்ளன.

இதில், எப்பநாடு தொழிற்சாலை இயங்காமல் உள்ளது. பிற 15 தொழிற்சாலைகளில் சுமார் 30 ஆயிரம் தேயிலை சிறு விவசாயிகள் அங்கத்தினர்களாக உள்ளனர். இவர்கள், தங்கள் தோட்டத்தில் விளையும் பசுந்தேயிலையை பறித்து, தொழிற்சாலைகளுக்கு விநியோகித்து வருகின்றனர். பசுந்தேயிலைக்கான விலையை அங்கத்தினருக்கு தொழிற்சாலைகள் அளிக்கின்றன.

இண்ட்கோ சர்வ் ஆண்டுக்கு சராசரியாக சுமார் 14 மில்லியன் கிலோ கிராம் தேயிலைத்தூளை உற்பத்தி செய்து, நீலகிரி மாவட்டத்தின் பொருளாதார மேம்பாட்டுக்கும், ஆயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்துக்கும் முக்கியப் பங்காற்றி வருகிறது.

இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் விளையும் தேயிலைக்கு ஆதார விலை நிர்ணயம் செய்யக் கோரி, கடந்த ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி முதல் விவசாயிகள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். ஆதார விலை நிர்ணயம் செய்யும் வரை மத்திய, மாநில அரசுகள் பசுந்தேயிலைக்கு மானியம் வழங்க வேண்டுமென வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், தற்போது பட்ஜெட்டில் நீலகிரி மாவட்டத்திலுள்ள இண்ட்கோ தேயிலை தொழிற்சாலைகளில் அங்கத்தினராக உள்ள விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் பசுந்தேயிலை கிலோவுக்கு ரூ.2 ஊக்கத்தொகை வழங்கப்படும், இதற்கு ரூ.9 கோடி நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்தது. இதன்மூலமாக, 27 ஆயிரம் விவசாயிகள் பயன்பெறுவார்கள் என அறிவித்துள்ளதை விவசாயிகள் வரவேற்றுள்ளனர்.

இதுதொடர்பாக சிறு தேயிலை விவசாயிகள் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜே.பி.சுப்ரமணியன் கூறும்போது, ‘‘அரசின் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் தேயிலை உள்ளதால், மத்திய அரசு பசுந்தேயிலைக்கு ஆதார விலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

படுக தேச பார்ட்டியின் ஒருங்கிணைப்பாளர் மஞ்சை வி.மோகன் கூறும்போது, ‘‘தமிழ்நாடு அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. ஆனால், இதன் மூலமாக இண்ட்கோ சர்வ் தொழிற்சாலைகளிலுள்ள அங்கத்தினர் மட்டுமே பயன்பெறுவார்கள். மாவட்டத்திலுள்ள அனைத்து தேயிலை விவசாயிகளுக்கும் அரசு மானிய திட்டத்தை விரிவுப்படுத்த வேண்டும்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x