Published : 19 Feb 2018 08:00 AM
Last Updated : 19 Feb 2018 08:00 AM

பொதுத்துறை வங்கிகளில் கடன்பெற்ற மும்பை தொழிலதிபர் ரூ.800 கோடி மோசடி

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரு11,360 கோடி அளவுக்கு மோசடி நடைபெற்றிருப்பது வெளிச்சத்துக்கு வந்திருக்கும் நிலையில் ரோட்டோமேக் பேனா நிறுவன உரிமையாளர் இந்திய பொதுத்துறை வங்கிகளில் ரூ.800 கோடி ரூபாய்க்கும் மேல் கடன்பெற்றுவிட்டு அதைத் திருப்பிச் செலுத்தாமல் தலைமறைவாகிவிட்டதாக தகவல் வெளிவந்துள் ளது.

ரோட்டோமேக் பேனா நிறுவன உரிமையாளர் விக்ரம் கோத்தாரி ஐந்து பொதுத்துறை வங்கிகளிலிருந்து ரூ800 கோடிக்கும் மேல் கடன் பெற்றுள்ளதாகத் தெரிகிறது. அலகாபாத் வங்கி, பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் பரோடா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட வங்கிகள் இவருக்கு கடன் வழங்கி இருக்கின்றன. தங்களது விதிமுறைகளில் மாற்றங்களைக் கொண்டுவந்து இவருக்கு கடன் வழங்கியதாகவும் தெரிகிறது.

அசல், வட்டி செலுத்தவில்லை

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவிலிருந்து ரூ485 கோடியும், அலகாபாத் வங்கியிலிருந்து ரூ352 கோடியும் விக்ரம் கோத்தாரி கடனாகப் பெற்றுள்ளார். ஒரு வருடத்துக்குப் பிறகும் கடன் மற்றும் வட்டியைக்கூட கோத்தாரி கட்டவில்லை. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக கான்பூரிலுள்ள விக்ரம் கோத்தாரியின் அலுவலகம் பூட்டிக் கிடக்கிறது.

கோத்தாரி எங்கே இருக்கிறார் என்ற தகவலும் இதுவரை தெரியவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்த அலகாபாத் வங்கி மேலாளர் ராஜேஷ் குப்தா கோத்தாரியின் சொத்துக்களை விற்பதன் மூலம் கடன் தொகையை ஈடு செய்யமுடியும் என நம்பிக்கை தெரிவித்தார்.

45 ஆண்டுகளாக தொழிலில் இருந்து வரும் விக்ரம் கோத்தாரி தற்போது தலைமறைவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x