Published : 04 Feb 2024 01:08 PM
Last Updated : 04 Feb 2024 01:08 PM

1 பான் எண்ணில் 1,000+ கணக்குகள்: பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி ஆர்பிஐ நடவடிக்கைக்கு உள்ளானது எப்படி?

புதுடெல்லி: சரியான அடையாள ஆவணங்கள் இல்லாமல் நூற்றுக்கணக்கான கணக்குகளை பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி உருவாக்கி இருந்தது அதன் மீது ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்க முக்கியமான காரணமாகி இருக்கிறது என்று இந்த விவாகரம் குறித்து விபரம் அறிந்தவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தக் கணக்குகள் மூலமாக சரியான கேஒய்சி (Know-Your-Customer) இல்லாமல் கோடிக்கணக்கான ரூபாய் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டிருப்பது, பண மோசடி நிகழ்ந்திருக்கலாம் என்ற கவலையை உருவாக்கியுள்ளது.

ஆயிரத்துக்கும் அதிகமான பயனர்கள் ஒரே நிரந்தரக் கணக்கு எண்ணை (PAN) தங்களின் கணக்குகளில் இணைத்திருந்தனர். பேடிஎம் வங்கி சமர்பித்த ஆவணங்களை இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் தணிக்கையாளர்கள் சரிபார்த்த போது அது முறையாக இல்லை என்று கண்டறியப்பட்டது. இதனால் சில கணக்குகள் பண மோசடிக்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று ரிசர்வ் வங்கி கவலை தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில், இதுகுறித்து அமலாக்கத் துறைக்கு தகவல் கொடுத்த ரிசவர் வங்கி தனது கண்டுபிடிப்புகளை உள்துறை அமைச்சகத்துக்கும், பிரதமர் அலுவலகத்துக்கும் அனுப்பி வைத்துள்ளது. ஏதாவது சட்டவிரோத நடவடிக்கை நடந்திருப்பதற்கான ஆதாரம் கண்டுபிடிக்கப்பட்டால் பேடிஎம் பேமென்டஸ் வங்கி மீது அமலாக்கத் துறை விசாரணை நடத்தும் என்று வருவாய் செயலாளர் சஞ்சய் மல்கோத்ரா செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

பேடிஎம் குழு மற்றும் அதனுடன் தொடர்புடைய நிறுவங்களுக்கு நடந்த முக்கிய பரிவர்த்தனைகளை பற்றிய தகவல் வெளியிடப்படாதது குறித்த அறிக்கை, முறைகேடுகள் குறித்த கவலையை அதிகப்படுத்தின. அதேபோல், பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி மற்றும் அதன் தாய் நிறுவனமான ஒன்97 கம்யூனிகேஷன் லிமிட் ஆகிவைகளுக்கு இடையேயான தொடர்பின் நிர்வாக தரத்தில் உள்ள தவறுகளை ரிசர்வ் வங்கியின் ஆய்வு வெளிப்படுத்தி இருந்தது.

மேலும் பேடிஎம்-மின் தாய் செயலி மூலம் நடத்தப்படும் பணபரிவர்த்தனைகள் தனியுரிமை தகவல் குறித்த கவலையை அதிகப்படுத்தின. இவைகள் அனைத்தும் பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி மூலமாக பரிவர்த்தனை செய்வதை நிறுத்த ரிசர்வ் வங்கியின் உத்தரவுக்கு வழிவகுத்தன.

இதனைத் தொடர்ந்து பிப்ரவரி 29-ம் தேதியுடன் பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி சேவை சார்ந்த செயல்பாடுகளை நிறுத்துமாறு ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்தது. இதன் காரணமாக பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி சேவை மூலம் எந்த வாடிக்கையாளரும், எந்த கணக்கிலும் பணத்தை டெபாசிட் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்த உத்தரவினைத் தொடர்ந்து பேடிஎம்-ன் பங்குகள் 36 சதவீதம் சரிவினைச் சந்தித்தன. அதன் சந்தை மதிப்பு 2 பில்லியன் டாலர்கள் வரை குறைந்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x