Last Updated : 28 Jan, 2024 01:22 PM

 

Published : 28 Jan 2024 01:22 PM
Last Updated : 28 Jan 2024 01:22 PM

நாடு முழுவதும் வீடு, விவசாய பம்ப்செட் தேவை அதிகரிப்பு: மீளும் கோவை பம்ப்செட் நிறுவனங்கள்

கோவை பம்ப்செட் நிறுவனத்தில் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள்.(கோப்பு படம்)

கோவை: நாடு முழுவதும் வீடு மற்றும் விவசாய பணிகளுக்கு பயன் படுத்தப்படும் பம்ப்செட் தேவை அதிகரித்துள்ளதாக தொழில் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் மொத்த பம்ப் செட் தேவையில் கோவை மாவட்டத்தில் செயல்பட்டுவரும் பம்ப் செட் நிறுவனங்கள் 50 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளன. கோவையில் 500-க்கும் மேற்பட்ட பம்ப்செட் தயாரிப்பு நிறுவனங்களும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனங்களும் செயல்படுகின்றன. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் இத்தொழிலில் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். உலகளாவிய பொருளாதார மந்த நிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பம்ப்செட் தேவை கணிசமாக குறைந்தது. இந்நிலையில், தற்போது வீடு மற்றும் விவசாய பம்ப்செட் தேவை அதிகரிக்க தொடங்கியுள்ளதாகவும் எதிர்வரும் மாதங்களில் தொழில் வளர்ச்சி சீராக இருக்கும் என்றும் தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் ( சீமா ) தலைவர் விக்னேஷ் கூறியதாவது: பம்ப்செட் தொழில் தற்போது நெருக்கடியில் இருந்து மீள தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் வீடு மற்றும் விவசாய பணிகளுக்கு பயன்படுத்தப்படும் பம்ப்செட் தேவை அதிகரித்து வருகிறது. கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு ஒட்டுமொத்த பம்ப்செட் தேவை 10 சதவீதம் உயர்ந்துள்ளது. இதனால் எதிர்வரும் மாதங்களில் தொழில் சீரான வளர்ச்சியை தக்க வைக்கும் என நம்புகிறோம்.

குஜராத் மாநிலத்திலும் பம்ப் செட் தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வந்தாலும் கோவை மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் பம்ப்செட் பொருட்களின் தரம் வாடிக்கையாளர்கள் மத்தியில் இந்தியாவில் மட்டுமின்றி உலகளவிலும் மிகுந்த நம்பிக்கையை பெற்றுள்ளது. பல மாதங்களுக்கு பின்னர் பம்ப் செட் தொழில் நெருக்கடியில் இருந்து மீள தொடங்கியுள்ளது, தொழில் முனைவோர் மத்தியில் மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கோவை பம்ப்செட் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் (கோப்மா) தலைவர் மணி ராஜ் கூறும்போது, “வீடு மற்றும் விவசாய தேவைக்கான பம்ப்செட் தேவை அதிகரித்துள்ளது உண்மைதான். மூலப்பொருட்களின் விலை உயர்ந்தாலும் பெரிய நிறுவனங்கள் பம்ப்செட் பொருட்களின் விலையை உயர்த்தவில்லை. இதனால் குறுந் தொழில் நிறுவனங்களின் பம்ப்செட் மற்றும் பெரிய நிறுவனங்களுக்கு இடையே விலையில் 10 சதவீதம் மட்டுமே வித்தியாசம் காணப்படுகிறது.

இதனால் ‘பிராண்டட் பம்ப்செட்’ வாங்கவே வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்புகின்றனர். மின் கட்டண உயர்வை திரும்ப பெறவும், அரசுத் துறைகளுக்கான பம்ப் செட் கொள்முதலில் 50 சதவீதம் ‘எம்எஸ்எம்இ’ நிறுவனங்களிடம் இருந்து கட்டாயம் பெற வேண்டும் என்பதை உறுதிப் படுத்தவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x