Published : 27 Jan 2024 06:06 AM
Last Updated : 27 Jan 2024 06:06 AM

400 ஊழியரை வேலைநீக்கம் செய்கிறது ஸ்விக்கி நிறுவனம்

பெங்களூரு: உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி அதன் 400 ஊழியர்களை வேலைநீக்கம் செய்ய உள்ளது.

நிறுவனச் செயல்பாட்டில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இதன் ஒரு பகுதியாக 380 ஊழியர்களை வேலையிலிருந்து நீக்க முடிவு செய்திருப்பதாகவும் கடந்தஆண்டு ஸ்விக்கி அறிவித்தது.இந்நிலையில், தற்போது 2-ம் கட்டமாக 400 ஊழியர்களை பணி நீக்கம்செய்ய முடிவு செய்துள்ளது. ஸ்விக்கியில் தற்போது 6,000ஊழியர்கள் உள்ளனர். இவர்களில் தொழில்நுட்பம், வாடிக்கையாளர் சேவை, நிர்வாகம் உள்ளிட்ட பிரிவுகளில் 400 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட உள்ளனர்.

ஸ்விக்கி நிறுவனம் பொதுப் பங்கு வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் நிறுவனத்தின் நிதி நிலையை மேம்படுத்த செலவுக் குறைப்பை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக வேலைநீக்கம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு இறுதியில் பேடிஎம் நிறுவனம் 1,000 ஊழியர்களை வேலைநீக்கம் செய்தது. அதன் தொடர்ச்சியாக, பிளிப்கார்ட் நிறுவனமும் 1,000 ஊழியர்களை வேலைநீக்கம் செய்ய இருப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது ஸ்விக்கி நிறுவனமும் இணைந்துள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளில்அமேசான், கூகுள், மைக்ரோசாஃப்ட், மெட்டா உள்ளிட்ட பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களும் ஆயிரக்கணக்கான ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கின. தற்போது மீண்டும் சர்வதேச அளவில் வேலைநீக்கம் தொடங்கியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x