Published : 19 Jan 2018 10:33 AM
Last Updated : 19 Jan 2018 10:33 AM
சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் வி-டைட்டன் நிறுவனத்தில் ஸோகோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு ரூ. 60 கோடி முதலீடு செய்துள்ள்ளார். சென்சார் தொழில்நுட்பத்திலான மருத்துவ கருவிகள் ஆராய்ச்சியில் இந்த நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.
நேற்று இந்த நிறுவனம் `அக்குப்ளோ’ என்கிற சென்சார் அடிப்படையிலான இன்ஜெக்ஸன் பம்ப் கருவியை அறிமுகம் செய்தது.
நிகழ்ச்சியில் நிறுவனத்தின் தலைவர் பெரி கஸ்தூரி பேசுகையில், பிற துறைகளில் மிக எளிதாக புழங்கும் தொழில்நுட்பத்தை மருத்துவ கருவிகள் துறையில் கொண்டுவருவது, அதை அனைவருக்கும் ஏற்ற வகையில் கொண்டு செல்வதை இலக்காக வைத்துள்ளோம். சென்சார் அடிப்படையிலான `இன்ஜெக்ஸன் பம்ப்’ துறை இந்தியாவில் தற்போது ரூ. 520 கோடி சந்தை மதிப்பு கொண்டுள்ளது. 2020-ம் ஆண்டில் ரூ.746 கோடியாக வளரும் என எதிர்பார்க்கிறோம். இந்த சந்தை தற்போது சீன மற்றும் ஜெர்மன் நிறுவனங்களை நம்பி இருக்கிறது. ஆனால் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்படுவதால் விற்பனைக்கு பின்னரான சேவையை எங்களால் அளிக்க முடியும்.
எங்களது கருவிகளை தமிழ்நாட்டின் முன்னணி மருத்துவமனைகள் சோதித்து அங்கீகரித்துள்ளன. வெளிநாட்டு கருவிகளை விட விலைக் குறைவு என்பதால் மிகச் சிறந்த வளர்ச்சியை எட்டுவோம். இந்த ஆண்டில் முதற்கட்டமாக 3,300 கருவிகளை விற்க இலக்கு வைத்துள்ளோம். 2020-ம் ஆண்டுக்குள் தெற்காசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் சந்தையிலும் கால் பதிக்க திட்டமிட்டுள்ளோம் என்றார்.
நிகழ்ச்சியில் பேசிய ஸோகோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு ஆராய்ச்சி தேவைக்கு ஏற்ப மேலும் முதலீடுகளை மேற்கொள்ள உள்ளோம் என்று குறிப்பிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT