Last Updated : 20 Dec, 2017 10:37 AM

 

Published : 20 Dec 2017 10:37 AM
Last Updated : 20 Dec 2017 10:37 AM

அடுத்த ஐந்து ஆண்டுகளில் 40 சதவீத சந்தை: அமர ராஜா பேட்டரி நிறுவனம் எதிர்பார்ப்பு

இருசக்கர வாகனங்களுக்கான பேட்டரி சந்தையில் அடுத்த ஐந்தாண்டுகளில் 40 சதவீத சந்தையை கைப்பற்றுவோம் என்று அமர ராஜா பேட்டரி நிறுவனம் கூறியுள்ளது. இரு சக்கர வாகனங்களுக்கான பேட்டரிகளை தயாரிக்கும் புதிய ஆலையை ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் இந்த நிறுவனம் தொடங்கியுள்ளது. அமெரிக்காவின் ஜான்சன் கன்ட்ரோல் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து பேட்டரி தயாரிப்பில் அமர ராஜா ஈடுபட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் ஜான்சன் கன்ட்ரோல் நிறுவனம் 26 சதவீத பங்குகளை வைத்திருக்கிறது.

இந்த ஆலையின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. ஜான்சன் கன்ட்ரோல் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜார்ஜ் ஆலிவர் இந்த ஆலையை தொடங்கி வைத்தார். முதல் கட்டமாக இந்த ஆலையில் 50 லட்சம் பேட்டரிகளை தயாரிக்க முடியும். இந்த ஆலைக்காக மொத்தம் ரூ.700 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. முதல் கட்டத்துக்கு 400 கோடி முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. மொத்த பணிகளும் அடுத்த மூன்று ஆண்டுகளில் முடிக்கப்படும். அப்போது இந்த ஆலையின் முழு உற்பத்தி திறன் 1.70 கோடி பேட்டரிகளாக இருக்கும். இதன் மூலம் இந்தியாவின் மிகப்பெரிய பேட்டரி உற்பத்தி ஆலையாக இது இருக்கும் என நிறுவனம் தெரிவித்திருக்கிறது. தவிர இந்த நிறுவனத்துக்கு திருப்பதியில் பேட்டரி தயாரிக்கும் ஆலை இருக்கிறது. இந்த ஆலையில் இருந்து 1.2 கோடி பேட்டரிகளை தயாரிக்க முடியும்.

ஆலை தொடக்க விழாவில் அமர ராஜா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜெ.ஜெ.கல்லா கூறுகையில், ஆரம்பத்தில் கார், கனரக வாகனங்களுக்கான பேட்டரிகளை தயாரித்தோம். 2008-ம் ஆண்டு முதல் இரு சக்கர வாகனங்களுக்கான பேட்டரிகளை தயாரிக்க தொடங்கினோம். தற்போது இரு சக்கர வாகனங்களுக்காக பேட்டரி சந்தையில் 11 சதவீதத்தை வைத்திருக்கிறோம். அடுத்த ஐந்தாண்டுகளில் 40 சதவீத சந்தையை கைப்பற்றுவோம். இந்த பிரிவு ஆண்டுக்கு சராசரியாக 10 சதவீத வளர்ச்சி அடைந்து வருகிறது.

அரசு, பேட்டரி வாகனங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. ஆனால் அதற்குத் தேவையான பேட்டரி உருவாக்கும் ஆலை அமைப்பதற்கு அதிக முதலீடு தேவைப்படும். தேவையான சமயத்தில் இது குறித்து முடிவெடுப்போம்.

2030-ம் ஆண்டில் அனைத்தும் எலெக்ட்ரிக் வாகனங்களாக இருக்கும்பட்சத்தில் அப்போது உங்களை போன்ற நிறுவனங்களின் நிலைமை என்ன என செய்தியாளர்கள் கேட்டதற்கு, ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு வகையான இன்ஜின் தயாரிக்கப்படும். அப்போதைக்கு என்ன தேவையோ அதறகேற்ப எங்களுடைய திட்டங்கள் இருக்கும் எனக் கூறினர்.

ஹோண்டா, பஜாஜ் உள்ளிட்ட இரு சக்கர வாகன நிறுவனங்களுக்கும், மாருதி, ஹூண்டாய், போர்டு, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா உள்ளிட்ட கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கும் இந்த நிறுவனம் பேட்டரிகளை சப்ளை செய்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x