Published : 26 Jun 2023 11:56 AM
Last Updated : 26 Jun 2023 11:56 AM

தேசிய அளவில் ரூ.2 லட்சம் கோடியைக் கடந்தது கடன் அட்டை நிலுவைத் தொகை

பிரதிநிதித்துவப் படம்

மும்பை: ஏப்ரல் 2023 உடன் முடிவடைந்த காலகட்டத்தின் படி நாட்டில் முதன்முறையாக கடன் அட்டை நிலுவைத் தொகையானது ரூ.2 லட்சம் கோடியைக் கடந்துள்ளது. ரிசர்வ் வங்கி அண்மையில் வெளியிட்ட புள்ளிவிவரத்தின் வாயிலாக இது தெரியவந்துள்ளது. இது கடந்த 2022 ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் 29.7% அதிகம் ஆகும்.

நிலுவைத் தொகை அபாயம் அதிகமாக உள்ள பாதுகாப்பற்ற வங்கிக் கடன் தொடர்பாக ரிசர்வ் வங்கி தனியார் வங்கிகளை எச்சரித்திருந்தாலும் கூட அதிகரிக்கும் கடன் அட்டை நிலுவைத் தொகையால் எவ்வித ஆபத்தும் இல்லை என அவை கூறுகின்றன.

மேலும், கடன் அட்டை நிலுவைத் தொகை அதிகரிப்பது என்பது மக்களின் திருப்பிச் செலுத்த முடியாத திவால் நிலையைக் காட்டவில்லை மாறாக கடன் அட்டை வழியாக அவர்கள் செலுத்தும் கட்டணங்கள் அதிகரித்துள்ளதையும், பணவீக்கம் அதிகரித்துள்ளதையுமே பிரதிபலிக்கின்றன என்று விளக்குகின்றன. அதுமட்டுமல்லாது மக்கள் மத்தியில் கடன் அட்டையைப் பயன்படுத்தி செலவிடும் வழக்கம் அதிகரித்துள்ளது என்றும் தனியார் வங்கிகள் தெரிவித்துள்ளன.

இது ஒருபுறம் இருக்க, கடன் அட்டை வாயிலான பணப் பரிவர்த்தனைகள் வாடிக்கையாளர்களின் வாங்கும் சக்தியையும் அவர்களின் நம்பிக்கையையும் காட்டுவதாக இருந்தாலும்கூட வாடிக்கையாளர்கள் ஏற்கெனவே வாங்கிய அதே பொருட்களை இப்போது கூடுதல் செலவு செய்து வாங்க வேண்டியுள்ளதையும் இந்த நிலுவைத் தொகை காட்டுகிறது என்று நிதி மேலாண்மை நிபுணர்கள் கூறுகின்றனர்.

5 சதவீதம் பேர் மட்டுமே பயன்படுத்துகின்றனர்.. இதற்கிடையில், இந்திய மக்கள் தொகையில் வெறும் 5 சதவீதம் பேர் மட்டுமே கடன் அட்டையைப் பயன்படுத்துகின்றனர் என்ற சுவாரஸ்யத் தகவலும் வெளியாகியிருக்கிறது. இது பல்வேறு வளரும் நாடுகளை ஒப்பிடுகையில் மிகமிகக் குறைவு எனக் கூறப்படுகிறது.

அதிகரிக்கும் விநியோகம்: கடன் அட்டைகளை உபயோகித்து செய்யப்படும் செலவு அதிகரித்து வருவது போல கடன் அட்டைகள் விநியோகமும் அதிகரித்து வருகிறது என்பதையும் நிபுணர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். செலவு செய்துவிட்டு பின்னர் அதனை திருப்பிச் செலுத்துவதற்காக சம்பாதிக்கும் போக்கு அதிகரித்துள்ளதாகவும் கூறுகின்றனர். இதனை ஊக்குவிக்கவே கிரெடிட் கார்டுகளுக்கு போட்டியாக கவர்ச்சிகரமான BNPL (Buy Now Pay Later) என்கிற ‘இப்போது வாங்குகள் பிறகு செலுத்துங்கள்’ என்கிற திட்டமும் வாடிக்கையாளர்களை ஈர்க்க செயல்படுத்தப்படுகிறது. இதை வங்கிகள் மட்டுமல்லாமல் அமேசான் பே லேட்டர், பிளிப்கார்ட் பே லேட்டர், லேஸிபே (LazyPay), மொபிக்விக் ஸிப் (MobiKwik Zip), போஸ்ட்பே (PostPe) போன்ற பல நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. கடன் அட்டைகளைப் பயன்படுத்துவதில் மட்டுமல்ல பிஎன்பிஎல் பயன்பாட்டிலும் மிகுந்த புத்திசாலித்தனத்தைப் பின்பற்றாவிட்டால் தனிநபர் திவாலாவது உறுதி என்பதே வங்கித் துறை சார்ந்த நிபுணர்களின் எச்சரிக்கையாக உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x