Published : 12 Oct 2017 10:38 AM
Last Updated : 12 Oct 2017 10:38 AM

75 புதிய விமானங்கள் வாங்கஜெட் ஏர்வேஸ் திட்டம்: வினய் துபே தகவல்

அடுத்த ஆறு மாத காலத்துக்குள் 75 புதிய விமானங்களை வாங்குவதற்கு திட்டமிட்டுள்ளதாக ஜெட் ஏர்வேஸ் தலைமைச் செயல் அதிகாரி வினய் துபே தெரிவித்துள்ளார்.

சென்னையிலிருந்து பாரீஸ் செல்வதற்கு நேரடி விமானப் போக்குவரத்தை ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தொடங்கியுள்ளது. இதற்கான அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இந்தியாவுக்கான பிரான்ஸ் நாட்டுத் தூதர் அலெக்ஸாண்டர் ஜிக்லெர், ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி வினய் துபே, பாரீஸ் ஏர்போர்ட் நிறுவனத்தின் நிர்வாகத் துணைத்தலைவர் லாரே பாமே, பிரெஞ்ச் தூதரக அதிகாரி கேத்தரின் ஸ்வார்டு ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து ஜெட் ஏர்வேஸ் தலைமைச் செயல் அதிகாரி வினய் துபே கூறியதாவது: சென்னையிலிருந்து நேரடியாக பாரீஸுக்கு முதன் முதலில் விமானப் போக்குவரத்தை இயக்குவதில் மகிழ்ச்சியடைகிறோம். ஏர் பிரான்ஸ், கேஎல்எம், டெல்டா ஏர்லைன்ஸ் ஆகிய நிறுவனங்களோடு இணைந்து இந்த சேவையை இயக்க இருக்கிறோம். இதன் மூலம் பாரீஸிலிருந்து வெவ்வேறு நகரங்களுக்கு பயணிகள் பயணிக்க முடியும். தென் இந்தியாவில் பயணிகள் அதிகம் செல்வதால் இங்கு விரிவாக்கப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். அடுத்த ஆறு மாத காலத்துக்குள் 75 புதிய விமானங்களை வாங்க திட்டமிட்டிருக்கிறோம். புதிய வழித்தடங்களுக்கும் ஏற்கெனவே உள்ள வழித்தடங்களுக்கும் இந்த விமானங்கள் இயக்கப்படும் என்று தெரிவித்தார்.

சென்னை - பாரீஸ் நேரடி விமானப் போக்குவரத்து வரும் அக்டோபர் 29-ம் தேதியிலிருந்து தொடங்க இருப்பதாக ஜெட் ஏர்வேஸ் தெரிவித்துள்ளது.

இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் அலெக்ஸாண்டர் ஜிக்லெர் கூறியதாவது: இந்த புதிய விமானப் போக்குவரத்து பிரான்ஸ்க்கும் இந்தியாவுக்கும் உள்ள தொடர்பை அதிகப்படுத்தும். 2014-ம் ஆண்டு இந்தியாவிலிருந்து பாரீஸ் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை 3 லட்சமாக இருந்தது. தற்போது 5 லட்சமாக அதிகரித்துள்ளது. இது மேலும் உயரும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x