Published : 24 Oct 2017 06:31 PM
Last Updated : 24 Oct 2017 06:31 PM
இந்தியப் பொருளாதாரத்தின் நிலை பற்றிய செய்தியாளர் சந்திப்பில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி இந்தியப் பொருளாதாரம் வலுவான அடித்தளங்களுடன் உறுதியாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
கடந்த 3 ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வரும் ஒரு பொருளாதாரமாக இருந்து வருகிறது, வரும் ஆண்டுகளில் வேகமான வளர்ச்சியைப் பராமரிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார் அருண் ஜேட்லி.
இந்தச் சந்திப்பில் உடனிருந்த பொருளாதார விவகாரச் செயலர் எஸ்.சி.கார்க் கூறும்போது, 2014 முதல் பணவீக்க விகிதம் சீராக குறைந்து வந்துள்ளது, நடப்பு நிதியாண்டில் இது 4%-ஐ தாண்டாது.
மேலும் நடப்பு ஆண்டில் நடப்ப்புக் கணக்குப் பற்றாக்குறை 2%க்கும் குறைவாக இருக்கும், அன்னியச் செலாவணி கையிருப்பு 400 பில்லியன் டாலர்களைக் கடந்துள்ளது.
நிதிப்பற்றாக்குறையை இந்த ஆண்டு ஜிடிபியில் 3.2% ஆக வைத்திருக்குமாறு இலக்கு வைக்கப்பட்டுள்ளது. டிசம்பரில் இது குறித்து மறு ஆய்வு மேற்கொள்ளப்படும்.
சர்வதேச நிதியம் சமீபத்தில் நாடு 8% வளர்ச்சியை விரைவில் எட்டும் என்று கூறியுள்ளது. முதலீட்டு விலக்கு இலக்கு இந்த ஆண்டு ரூ.72,500 கோடியைக் கடந்து விடும், என்றார்.
நிதிச்செயலர் அசோக் லவாசா கூறும்போது, மொத்த அரசு செலவினம் இந்த ஆண்டு இதுவரை ரூ.11.47 லட்சம் கோடியாகும். பட்ஜெட்டில் அரசு செலவினம் ரூ.21.46 லட்சம் கோடியாக இருக்கும் என்று கூறப்பட்டிருந்தது.
மூலதனச் செலவின இலக்கு ரூ.3.09 லட்சம் கோடியாகும், இதில் ஏற்கெனவே ரூ.1.46 லட்சம் கோடி செலவிடப்பட்டுள்ளது.
அடுத்த 5 ஆண்டுகளில் 83,677 கிமீ சாலை கட்டமைக்கப்படும், என்றார்.
வங்கித் துறையில் செயலில் இல்லாத சொத்துக்கள் மார்ச் 2015-ல் ரூ.2.75 லட்சம் கோடி என்பதிலிருந்து ரூ.7.33 லட்சம் கோடியாக ஜூன் 2017 வரை அதிகரித்துள்ளது என்று நிதிச்சேவைகள் துறை செயலர் ராஜீவ் குமார் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT