Published : 13 Feb 2021 07:56 PM
Last Updated : 13 Feb 2021 07:56 PM

ஹாட் லீக்ஸ்: பூனைக்கு மணி கட்டிய சுந்தரேசன்!

சென்னை

கட்சிக்குள் தனது மகன் கம்பனை முன்னிலைப்படுத்துவதாக திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக செயலாளரான முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு எதிராக நெடுநாள் புகைச்சல் உண்டு. இருந்தாலும் இத்தனை நாளும் பூனைக்கு யாரும் மணி கட்டவில்லை. இந்த நிலையில், வேலுவின் குடும்ப அரசியல் குறித்து மாவட்ட துணைச் செயலாளர் சாவல்பூண்டி சுந்தரேசன் பேசிய செல்போன் பேச்சு இப்போது வைரலாகி வருகிறது.

அதில், வேலு எந்தெந்த தொழில்களில் எல்லாம் எவ்வளவு கோடிகளை முதலீடு செய்து சொத்துச் சேர்த்திருக்கிறார் என்பதை பட்டியல் போடும் சுந்தரேசன், “கட்சிக்காக ரத்தம் சிந்தி உழைத்தவர்கள் எல்லாம் செத்துக் கிடக்கிறார்கள். ஆனால், அப்பனும் பிள்ளையும் அனைத்தையும் அனுபவிக்க துடிக்கிறார்கள். கட்சிக்கு உழைக்கும் யார் வேண்டுமானாலும் மேலே வரலாம். அது கலைஞரா இருந்தாலும் சரி, கலைஞர் பிள்ளையாக இருந்தாலும் சரி” என்று காட்டமான கருத்துகளை பதிவு செய்திருக்கிறார்.

சுந்தரேசனின் இந்தப் பேச்சு மாவட்ட திமுகவில் பெரும் சர்ச்சையைக் கிளப்பி இருக்கும் நிலையில், கடந்த 4-ம் தேதி திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக அவரசர ஆலோசனைக் கூட்டம் எ.வ.வேலு தலைமையில் கூடியது. இதில் பேசிய பலரும், “கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாகப் பேசிய சுந்தரேசன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என ஆவேசப்பட்டார்கள். திமுக கிச்சன் கேபினெட்டின் அனுக்கிரஹம் பெற்றவர் எ.வ.வேலு என்பதால் சுந்தரேசன் எந்த நிமிடமும் கட்சி யிலிருந்து கட்டம் கட்டப்படலாம் என்கிறார்கள்.

மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த ஹாட் லீக்ஸ் செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x