Published : 15 Dec 2016 09:39 AM
Last Updated : 15 Dec 2016 09:39 AM

ஒரு நிமிடக் கதை: யானை

மன்னரின் கை நாடியைப் பிடித்துப் பார்த்த அரண்மனை வைத்தியர் முகத்தில் தெரிந்த அதிர்ச்சியை அமைச்சர் நல்லசிவம் உணர்ந்தார்.

“வைத்தியரே... மன்னர்..”

உதட்டைப் பிதுக்கினார் வைத்தியர்.. தலையை இருபக்கமும் அசைத்தார்.

“துடிப்பு குறைகிறது.. தாங்காது.”

திரைக்கு அப்பால் அறையின் வெளியே தளபதி, ராஜகுரு, பிரதானி கள், பிரபுக்கள், நிலக்கிழார்கள், ஜமீன்தார்கள்.

“சரி விஷயம் நம்முடன் இருக்கட்டும்.. வெளியே கசிய வேண்டாம்.”

திரைக்கு வெளியே வந்த அமைச்சர்.. “மன்னர் நலமாக இருக்கிறார்.. கவலை வேண்டாம்..ஆனால் ஒரு வாரத்துக்குள் புதிய மன்னரைத் தேர்ந்தெடுத்து விடுவது நல்லது” என்றார்.

“நாட்டுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்... திருமணம் செய்து கொள்ளாது அல்லும் பகலும் உழைத்தவர்.. வாரிசு என வும் யாரும் இல்லை.. இப்போது என்ன செய்யலாம்?” என்றார் தளபதி.

அமைச்சர், “வழக்கம் போல யானை தும்பிக்கையில் மாலை கொடுக்க வேண்டியதுதான்..இவரும் அப்படி மன்னர் ஆனவர் தானே” என்றார்.

யானைப் பாகன் வரவழைக்கப்பட்டான்.

நிறைந்த பவுர்ணமியன்று மாலையை யானையிடம் தந்தனர்.

முரசு அடித்து அறிவித்தபடி கூட்டத்தில் நின்ற ஒரு இளைஞனின் கழுத்தில் யானை மாலையைப் போட, மக்களின் வாழ்த்து கோஷத் துடன் அரண்மனைக்கு அழைத்து வரப்பட்டான் புதிய மன்னன்.

இரவு இருட்டியதும், அமைச்சர் மாளிகையில், “சரி போய் வா.. இந்தா பத்தாயிரம் காசுகள். நான் சொன்ன ஆளை சரியாக அடையாளம் வைத்து மாலை போட யானையைப் பழக்கியதற்கு உனக்குப் பரிசு” என்று கூறி பொற்கிழியை வழங்கினார் அமைச்சர். அவரை வணங்கி விடைபெற்றான் பாகன்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x