Published : 08 May 2016 01:18 PM
Last Updated : 08 May 2016 01:18 PM

ஜான் ஹான்றி டினான் 10

அமைதிக்கான முதலாவது நோபல் பரிசைப் பெற்றவரும், செஞ்சிலுவைச் சங்கத்தை உருவாக்கியவருமான ஜான் ஹான்றி டினான் (Jean Henry Dunant) பிறந்த தினம் இன்று (மே 8). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* ஸ்விட்சர்லாந்தில் பணக்காரக் குடும்பத்தில் (1828) பிறந்தார். ஆதரவற்றோர், ஏழைகளுக்கு பல்வேறு உதவிகளை செய்துவந்தனர் இவரது பெற்றோர். ஹான்றியும் சிறு வயதிலேயே ஜெனீவா சங்கத்தில் இணைந்து ஏழைகளுக்கு சேவையாற்றினார்.

* உயர்நிலைக் கல்வியை முடிக்கா மலேயே பள்ளியில் இருந்து வெளி யேறினார். ஜெனிவா வங்கியில் சிறிது காலம் பணிபுரிந்தார். சிறைகளுக்கு அடிக்கடி சென்று அங்குள்ள கைதிகளிடம் பேசி அவர்களை நல்வழிப்படுத்தும் பணியில் ஈடுபட்டார்.

* வர்த்தகத் துறையில் 26-வது வயதில் அடியெடுத்து வைத்தார். அல்ஜீரியா சென்றவர், அங்கு ஒரு நிலம் வாங்கி, விவசாயம் செய்து தந்தையைப் போலவே செல்வந்தராக விரும்பினார். இதுசம்பந்தமாக சால்ஃபரீனோ என்ற இடத்தில் போர்முனையில் இருந்த மன்னரை சந்திக்க விரும்பினார். விவசாய பண்ணைத் திட்டத்தை தொடங்க நிறைய பணமும் கொண்டு சென்றார்.

* வழியில் கொடூரமான போர்க்களக் காட்சிகளைக் கண்டார். அது இவரது மனதைக் கலங்கடித்தது. வந்த வேலையை மறந்தார். உள்ளூர் மக்களோடு இணைந்து, காயமடைந்த வீரர்களுக்கு உதவி னார். ஒரு மாத காலம் அங்கேயே தங்கினார். தன் பணம் முழுவதையும் வீரர்களின் மருத்துவ உதவிக்காகவே செலவழித்தார்.

* ஜெனீவா திரும்பிய இவருக்கு பண்ணை, விவசாயம் எல்லாம் மறந்துபோயின. போரும் அதன் அவலங்களும் மட்டுமே நினைவில் நின்றன. தனது அனுபவங்களை ‘எ மெமரி ஆஃப் சால்ஃபரீனோ’ என்ற நூலாக வெளியிட்டார்.

* ‘உலகில் எங்கு போர் நடந்தாலும், காயமடைந்த வீரர்களுக்கு பாரபட்சமின்றி உதவ சர்வதேச அளவில் ஒரு அமைப்பு உருவாக்கப்பட வேண்டும். அதற்கு உதவ முன்வரும் தொண்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, உலக அளவில் ஒப்பந்தம் உருவாக்க வேண்டும்’ என்று அதில் குறிப்பிட்டார்.

* முக்கியமான பலருக்கு இந்நூலை அனுப்பிவைத்தார். இதன் 3-வது பதிப்பில் போர்கள் மட்டுமின்றி, இயற்கைப் பேரிடர்கள், பெரிய அளவிலான விபத்துகளின்போதும் இந்த அமைப்பு சேவை செய்ய வேண்டும் என்ற தன் கருத்தை வெளியிட்டார்.

* ஐரோப்பா முழுவதும் பயணம் மேற்கொண்டு பல தலைவர்களிடம் இதுகுறித்து பேசினார். இவரது அயராத முயற்சியின் பலனாக 1864-ல் 12 நாடுகளை சேர்ந்த முக்கிய தலைவர்கள் ஜெனீவாவில் ஒன்றுகூடி ‘இன்டர்நேஷனல் கமிட்டி ஆஃப் தி ரெட் கிராஸ்’ அமைப்பை உருவாக்கினர். தொடர்ந்து பல நாடுகள் இதில் இணைந்தன.

* நோபல் பரிசு தொடங்கப்பட்ட ஆண்டான 1901-ல் இவருக்கு முதன்முதலாக அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. அப்போது வறுமையில் வாடிய ஹான்றி, பரிசுப் பணத்தையும் தனக்காக வைத்துக்கொள்ளாமல், அறக்கட்டளைகள் அமைத்து ஏழைகளுக்காக செலவிட்டார்.

*மனித நேயத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு உலகம் முழுவதும் பாரபட்சமின்றி உதவும் ‘செஞ்சிலுவைச் சங்கம்’ தோன்றக் காரணமாக இருந்த ஜான் ஹான்றி டினான் 82-வது வயதில் (1910) மறைந்தார். அவரது நினைவைப் போற்றும் வகையில் ஆண்டுதோறும், இவரது பிறந்த தினம் உலக செஞ்சிலுவை தினமாகக் கொண்டாடப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x