Last Updated : 23 Feb, 2016 09:07 PM

 

Published : 23 Feb 2016 09:07 PM
Last Updated : 23 Feb 2016 09:07 PM

யூடியூப் பகிர்வு: தஸ்தாயெவ்ஸ்கியும் குற்றமும் தண்டனையும்- எஸ்.ராமகிருஷ்ணனின் பேருரை

மொழி, இனம், கலாச்சாரங்களைக் கடந்த மனித உறவுகளைப் புரிந்துகொள்வதற்கு இலக்கியம் ஓர் அற்புதமான சாதனம். மனித உறவுகளின் உன்னதத் தருணங்களை இனங்காட்டிய படைப்புகள் காலத்தின் பொக்கிஷங்களாக கருதப்படுகின்றன. பொக்கிஷத்திற்குரிய எல்லா தகுதிகளும் கொண்ட ஒரு பெரும் இலக்கியப் படைப்பாக திகழ்கிறது 'குற்றமும் தண்டனையும்' நாவல்.

இந்நாவல் நெருக்கடி மிக்க மனித வாழ்வின் சிடுக்குகளை அதன் நியாயங்களைப் பேசுகிறது. உலகின் சிறந்த இலக்கிய ஆளுமைகளில் மிக முக்கியமானவர் தஸ்தாயெவ்ஸ்கி. அரிய பல படைப்புகளைத் தந்த தஸ்தாயெவ்ஸ்கி இந்நாவலிலும் சிக்கலான உணர்வுகளை திகிலான வாழ்வின் திருப்பங்களை மிகவும் நுட்பமாக ஆழமாக விவரித்துச் செல்கிறார். ரஷ்ய மொழியில் இந்நாவல் எழுதப்பட்டு 150 ஆண்டுகளைக் கடந்துவிட்டது. எங்கோ தூரதேசத்தில் இருக்கும் ஒரு வாசகனுக்கு இப்போதும் புதிய தரிசனத்தை தந்துகொண்டுதான் இருக்கிறது இப்படைப்பு.

'குற்றமும் தண்டனையும்' நாவலைப் பற்றிய முழுமையான அறிமுகக் கூட்டம் ஒன்று சமீபத்தில் சேலம் நகரில் பாலம் புத்தகக் கடையில் நடைபெற்றது. உள்ளார்ந்த வாசகர்கள் நிறைந்திருந்த இக்கூட்டத்தின் முக்கிய அம்சம் 'குற்றமும் தண்டனையும்' நாவலை அறிமுகப்படுத்தி பேசியவர் எஸ்.ராமகிருஷ்ணன் என்பதுதான்.

உலக இலக்கியங்களை, உலக திரைப்படங்களை எஸ்.ராமகிருஷ்ணன் தனக்கே உரிய நடையழகோடு அறிமுகப்படுத்தும்போது அதில் தங்களை மறந்து ரசிக்கும் எண்ணிலடங்கா தமிழ் நெஞ்சங்கள் இங்கே உண்டு.

ஆனால் எஸ்.ராவின் பேச்சின் சரளமான, நுட்பமான பேச்சுத் திறனை முன்பே அறிந்தவர்கள் பலரும் சேலம் நகருக்குச் சென்று அவரது 'குற்றமும் தண்டனையும்' பேச்சைக் கேட்டிருக்க வாய்ப்பில்லை.

அவரது பேச்சின் வழியே ஒவ்வொரு முறையும் திறந்துகொள்வதற்கு ஏதுவாக, மூடியே கிடக்கும் ஏதோ ஒரு சிந்தனைக் கதவு நம்மில் அழுந்திக்கிடப்பதுண்டு. '' 'குற்றமும் தண்டனையும்' தமிழிலும் புத்தகமாக வந்துவிட்டதே, அதனை நான் முழுமூச்சாக படித்துமுடித்துவிட்டேனே'' என்று கூறுபவரா நீங்கள்.. யூடியூப்பின் இந்தப் பதிவேற்றத்தைப் பாருங்கள். இந்த முறையும் புதிய திறப்பு ஒன்று எஸ்.ரா. திறந்துவைப்பதற்காகவே உங்கள் இதயத்தில் பாக்கியிருப்பது தெரியவரும்...