Published : 08 Jan 2017 01:17 PM
Last Updated : 08 Jan 2017 01:17 PM

ஆஷாபூர்ணா தேவி 10

வங்க இலக்கியத்தின் தலைசிறந்த நாவலாசிரியர், கவிஞர், ‘ஞானபீட விருது’ பெற்ற முதல் பெண் எழுத்தாளரான ஆஷாபூர்ணா தேவி (Ashapoorna Devi) பிறந்த தினம் இன்று (ஜனவரி 8). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* கல்கத்தாவில் (1909) பிறந்தார். தந்தை புகழ்பெற்ற ஓவியர். மரச் சாமான்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் வடிவமைப்பாளராகப் பணியாற்றினார். பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்ட காலகட்டம் என்பதால், சிறுமி பள்ளிக்குச் செல்லவில்லை. ஆனால், இவரது சகோதரர்களுக்கு ஆசிரியர்கள் வீட்டுக்கு வந்து பாடம் கற்றுக் கொடுத்தனர்.

* அவர்களைப் பார்த்துப் பார்த்தே இவரும் எழுதப் படிக்கக் கற்றார். புத்தகங்கள் படிப்பதில் ஆர்வம் கொண்ட தாய், தன் குழந்தைகளுக்கு ராமாயண, மகாபாரதக் கதைகளைக் கூறினார். தாயைப் பார்த்து இவரும் கையில் கிடைத்ததை எல்லாம் படித்தார்.

* முறைப்படி கல்வி கற்காவிட்டாலும் வாசிப்பு பழக்கம் இவரது எழுத்து ஆர்வத்தை தூண்டியது. 13 வயதில் எழுதத் தொடங்கினார். தான் முதன்முதலாக எழுதிய கவிதையை ‘சிஷு சாதி’ என்ற இதழுக்கு அனுப்பிவைத்தார். அது பிரசுரமானதில் மிகவும் உற்சாகம் அடைந்தார். அதன் ஆசிரியரும் இவரை தொடர்ந்து எழுதி அனுப்புமாறு கூறி ஊக்கப்படுத்தினார்.

* எழுத்தாளர் என்ற அங்கீகாரம் கிடைத்ததில், நிறைய எழுதினார். வங்க இலக்கியத்துக்கு வளம் சேர்த்து, நாடு முழுவதும் புகழ்பெற்ற எழுத்தாளராக மலர்ந்தார். ஆரம்பத்தில் குழந்தைகளுக்காக மட்டுமே எழுதினார். போகப்போக இளைஞர்கள், பெரியவர்கள், பெண்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் எழுதினார்.

* திருமணத்துக்குப் பிறகு சிறிதுகாலம் எழுத்துப் பணி தடைபட்டது. பின்னர், மீண்டும் தன் பணியைத் தொடங்கினார். சமூக எதிர்ப்புகள், வறுமை, குடும்பச் சுமை, முறையான படிப்பறிவு இன்மை என அனைத்து தடைகளையும் எதிர்கொண்டு சமாளித்து, மாபெரும் எழுத்துப் போராட்டத்தையே நடத்தி வெற்றியும் கண்டார்.

* இவரது முதல் கதைத் தொகுப்பு 1940-ல் வெளிவந்தது. 1944-ல் ‘பிரேம் அவுர் பிரயோஜன்’ என்ற முதல் நாவல் வெளிவந்தது. அதுமுதல் தடையற்ற நீரோட்டம் போல இவரது எழுத்துப் பணி தொடர்ந்தது.

* வங்க இலக்கியத்தில் முன்னணி படைப்பாளியாகப் போற்றப்பட்டார். 70 ஆண்டுகாலம் நீடித்த இவரது படைப்புகளில் வங்க சரித்திரம், சமூக மாற்றங்கள், பெண்களைச் சுற்றிச் சுழலும் வரலாற்று நிகழ்வுகள், சமூக ஏற்றத் தாழ்வுகள், சமத்துவம், பெண்கள் சந்தித்த போராட்டங்கள் என இவரது படைப்புக் களம் விரிவடைந்தது.

* ஏறக்குறைய 250 நாவல்கள், 3 ஆயிரம் சிறுகதைகள், குழந்தைகளுக்கான 62 நூல்கள், ஏராளமான கவிதைகள், கட்டுரைகள், கடிதங்கள் என எழுதிக் குவித்தார். இவரது பல படைப்புகள் ஏறக்குறைய இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டன. இவரது ‘பாலுசோரி’ நாவல், ‘அபராஜிதா’ என்ற பெயரில் தொலைக்காட்சித் தொடராக வெளிவந்தது.

* பத்மஸ்ரீ விருது,கல்கத்தா பல்கலைக்கழகத்தின் ‘தி லைலா’ பரிசு, கிழக்கு வங்க அரசின் ரெயின்ட்ராப் நினைவுப் பரிசு, சாகித்ய அகாடமி விருது பெற்றவர். ‘பிரதம் ப்ரதிஸ்ருதி’, ‘ஸ்வர்ணலதா’, ‘பாகுல் கதா’ ஆகிய மூன்று நெடுங்கதைகளின் தொகுப்புக்காக ஞானபீட விருது பெற்றார்.

* தனது தனித்துவம் வாய்ந்த படைப்புகளால் வங்க இலக்கியத்தில் முத்திரை பதித்து, மகத்தான பங்களிப்பை வழங்கிய ஆஷாபூர்ணா தேவி 86-வது வயதில் (1995) மறைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x