Last Updated : 07 Oct, 2023 03:34 PM

 

Published : 07 Oct 2023 03:34 PM
Last Updated : 07 Oct 2023 03:34 PM

Bigg Boss 7 Analysis 3: விசித்ராவின் அதிகாரமும், ஜோவிகாவின் அறியாமையும்!

பிக் பாஸ் 7-வது சீசன் ஐந்தவாது நாள் எபிசோடில் நடந்த ஒரு நீண்ட நெடும் பஞ்சாயத்துக்கு காரணகர்த்தாவாக இருந்தவர் விசித்ரா. சில தினங்களுக்கு முன்பு பவா செல்லதுரை கதை சொல்லியபோது ஏற்பட்ட தலைமுறை இடைவெளி பிரச்சினை இதில் இன்னும் பெரிதாக விரிவடைந்ததாக தெரிகிறது.

காலை குடிப்பதற்கு காஃபி கேட்ட தனக்கு இல்லையென்று சொன்ன விசித்ரா குறித்து பிக் பாஸிடம் தனியாக சென்று பிராது கொடுத்தார் பவா செல்லதுரை. கிச்சனில் இளைய தலைமுறைக்கு வழிவிடாமல் விசித்ரா ‘டாமினேட்’ செய்வதாக அடுக்கடுக்காக புகார்களை முன்வைத்தார். இது ஒருபுறமிருக்க, நாமினேஷன் குறித்து பொதுவில் டிஸ்கஸ் செய்யலாமா என்ற ஒரு விவாதம் எழ, இந்த சீசனில் டிஸ்கஸ் செய்யலாம் என்று அதற்கு முற்றுப் புள்ளி வைத்தார் பிக்பாஸ்.

இதனை ஒட்டி நடந்து கொண்டிருந்த விவாதத்தின் இடையே பேச எழுந்த விஜய் வர்மா, பிரதீப் தன்னை ஷூவால் இடித்துச் சென்றதாக புதிய பிரச்சினை ஒன்றை கிளப்பினார். சொன்னவர் அதோடு நிற்காமல், தான் பதிலுக்கு கோபத்தில் நான் உங்களை ‘டக்’ என்று தட்டினால் மூக்கு, வாய் உடைந்து ஆஸ்பத்திரி தூக்கிக் கொண்டு போகும் நிலை ஏற்படும் என்று மாஸ் ஹீரோ ரேஞ்சில் பேசிக்கொண்டே போனார். விஜய்யின் இந்தப் பேச்சுக்கு வீட்டில் இருக்கும் மற்றவர்களும் அதிருப்தி தெரிவித்த நிலையில், விஷ்ணு எழுந்து அதனை கண்டித்தது பாராட்டப்பட வேண்டிய செயல்.

அடுத்து தொடங்கியது அந்த நீ...ண்ட நெடிய பஞ்சாயத்து. தன்னுடைய டாட்டூ குறித்து விசித்ரா பேசிய விதம் தனக்குப் பிடிக்கவில்லை என்று அனன்யா சொல்லி முடித்ததும், பிறகு எழுந்த ஜோவிகா, தன்னுடைய படிப்பு குறித்து விசித்ரா பேசியதை நினைவுகூர்ந்து, இனி யாரும் அடுத்தவருடைய பர்சனல் விஷயங்களை பேசவேண்டாம் என்று அட்வைஸ் செய்து அமர்ந்தார்.

விசித்ரா ஸ்மால் பாஸ் வீட்டுக்குள் வருவதற்கு முன்பு கிச்சனில் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் சுமுகமாக இருந்ததாகவும், அவர் வந்த பின்பு தான் தினமும் பிரச்சினைகள் வருவதாகவும் நிக்சன் கூறியதும் விவகாரம் சூடுபிடித்தது. அதன்பிறகு பேசத் தொடங்கிய விசித்ரா, தன்னுடைய அனுபவம் குறித்தும், மற்ற போட்டியாளர்களை தன் குழந்தைகளாக பார்ப்பதாகவும் அந்த நீண்ட உரையை தொடங்கினார். மற்றவர்களை டாமினேட் செய்கிறார் என்று தன் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டை தன் பேச்சின் இடையே பல இடங்களில் உண்மைப்படுத்தினார் விசித்ரா. வார்த்தைக்கு வார்த்தைக்கு குழந்தைகளாக பார்க்கிறேன் என்பதையே மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருந்தார்.

உண்மையான பெற்றோர் - குழந்தைகளுக்கும் இடையிலேயே தலைமுறை இடைவெளியினால் மனக்கசப்புகளும், புரிதலின்மையும் அதிகமாக இருக்கும் காலகட்டத்தில் ஒரு கேம்ஷோவில் வந்து சக போட்டியாளர்களை குழந்தைகளாக பார்க்கிறேன் என்று சொல்லி அவர்கள் மீது தன்னுடைய அதிகாரத்தை செலுத்த முயல்வது ஏற்றுக் கொள்ளமுடியாத ஒன்று.

தான் பேசும்போது ஜோவிகா கையை தூக்கியதை கூட விசித்ராவால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. தன் அனுபவத்தையும், வயதையும் அடிக்கடி உதாரணமாக கூறியவர் இந்த விஷயத்தில் அதற்கேற்ற நிதானத்துடன் செயல்பட்டிருக்கலாம். ஜோவிகா விஷயத்தில் அவர் சொன்ன கருத்துகள் சரி என்றாலும், அதை தன்னை விட பல வயது குறைந்த ஒரு சிறு பெண்ணிடம் சற்று பக்குவமாக சொல்லியிருக்கலாம். ஆனால், அதை மிகவும் அதிகாரத் தொனியுடன் கூறியதுதான் சிக்கலாகி விட்டது. விசித்ரா சொன்ன விஷயத்தின் சாரம் இதுதான். நம் அனைவருக்கும் வாழ்க்கையில் அடிப்படைக் கல்வி மிகவும் அவசியம். குறைந்தபட்சம் ஒரு டிகிரியாவது படித்திருக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதற்கு எதிர்வினையாற்றிய ஜோவிகா, கல்வி விஷயத்தில் தன்னுடைய தனிப்பட்ட முடிவில் யாரும் தலையிட வேண்டாம், எனக்கு படிப்பு வராததால் நான் இந்த முடிவை எடுத்தேன் என்று சொன்ன வரை சரிதான். ஆனால் அதன்பிறகு அவர் பேசிய கருத்துகள் அபத்தானவை. இதில் தனது கருத்துக்கு வலுசேர்க்க நீட் தேர்வை எல்லாம் இழுத்துக் கொண்டிருந்தது சிறுபிள்ளைத்தனமாக இருந்தது. ஏற்கெனவே சினிமாவில் புகழ்பெற்ற ஒரு குடும்பத்தில் பிறந்த ஜோவிகாவுக்கு கல்வியை கைவிட்டாலும், அது பொருளாதாரரீதியாக ஒரு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாமல் போகலாம். ஆனால், சமூகத்தில் பின்தங்கியிருக்கும், தாழ்த்தப்பட்ட சமூகங்களுக்கு கல்வி மட்டுமே ஒரே நம்பிக்கை.

பல தலைமுறைகளாக ஒருவேளை சோற்றுக்கே வழி இல்லாத குடும்பங்கள் கூட கல்வியால் மேலே வந்த நிகழ்வுகள் உண்டு. இதில் எல்லாருமே டாக்டர் ஆகிவிட்டால், யார் கம்பவுண்டர் ஆவது என்று அவர் கேட்பது அவரது அறியாமையை காட்டுவதாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. கம்பவுண்டர் ஆவதற்கும் கூட கல்வி அவசியம் என்பது அவருக்கு தெரியவில்லை.

ஜோவிகா இப்படி பேசியவதை விட, இலக்கியத் துறையில் இத்தனை ஆண்டுகாலம் இருக்கும் பவா செல்லதுரையும், அவருக்கு ஆதரவாக பேசியது ஆச்சர்யம் கலந்து அதிர்ச்சி. இதில் காமராஜர் முதல் கமல்ஹாசன் வரை உதாரணம் வேறு காட்டினார். படிக்காமல் மேலே வந்த ஆயிரம் பேரை காட்டினால், படிப்பால் பலனடைந்த கோடி பேரை உதாரணமாக காட்டமுடியும் என்பதை பவா மறந்தது சோகம். அதிலும் இத்தனை பேர் பார்க்கும் ஒரு நிகழ்ச்சியில் இப்படி கல்விக்கு எதிராக வைக்கப்படும் கருத்துகள் அவசியம் விமர்சிக்கப்பட வேண்டியவை என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

முந்தைய அத்தியாயம்: Bigg Boss 7 Analysis 2 - ஒரு ‘நேர்மை’யான கதையும், புரிதலில் பிரச்சினைகளும்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x