Last Updated : 06 Nov, 2017 06:01 PM

 

Published : 06 Nov 2017 06:01 PM
Last Updated : 06 Nov 2017 06:01 PM

தவறான பாதையில் வந்த ஜீப்பை தடுத்து நிறுத்திய துணிச்சலான இளைஞர்: வைரலான வீடியோ

நம் தினசரிப் பயணத்தில் சாலை விதிமுறைகளை மீறுபவர்களை கண்டும் காணாதது போல் கடந்து வந்திருப்போம்.

அவசர வேலை, அலுவலக மன உளைச்சல், அலட்சியம் எனப் பல காரணங்களால் ரெட் சிக்னல் விழுந்த பின்னும் வாகனத்தைச் செலுத்துபவர்கள், வாகனத்தை தவறான பாதையில் செலுத்துபவர்கள், சிக்னல் விழுந்து எல்லைக் கோட்டை தாண்டி நிற்பவர்கள் என இந்தப் பட்டியல் நீளும்.

சாலை விதிமுறைகளை மீறுபவர்களின் தவறை சுட்டிக் காட்ட போலீஸார் இருக்கிறார்களே எனக் கடந்து செல்பவர்கள் மத்தியில் சிலர் தவறுகளை தட்டிக் கேட்டு கதாநாயகர்களாக மாறும் நிமிடங்களும் என்றாவது அரிதாக காணக் கிடைக்கும்.

அப்படி ஒரு சம்பவம்தான் மத்தியப் பிரதேச போபாலில் நடந்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை மத்தியப் பிரதேச தலைநகரமான போபாலின் முக்கிய சாலையில் மக்கள் வேகமாக வாகனத்தில் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். அப்போது பெரிய ஜீப் ஒன்று சாலையில் தவறான திசையில் வருகிறது. இதைக் கண்ட இளைஞர் ஒருவர் அந்த ஜீப்பின் முன் தன் இருசக்கர வாகனத்தை நிறுத்தி, ஜீப்பின் ஒட்டுநரை இடைமறிக்கிறார்.

ஜீப்பில் இருந்தபடியே அந்த ஓட்டுநர் அந்த இளைஞரை அங்கிருந்து நகரும்படி மிரட்டுகிறார். அந்த இளைஞரோ, நீங்கள் தவறான பாதையில் வருகிறீர்கள் என்று கூற, தொடர்ந்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. அந்த ஜீப் ஓட்டுநர் வழிவிடும்படி அந்த இளைஞரின் வாகனத்தின் மீது வேகமாக மோதுகிறார். ஆனால் அந்த இளைஞரோ சற்றும் கவலைப்படாமல், தனது இரு கைகளையும் கட்டிக் கொண்டு அவருக்கு வழிவிடாமல் அவரது இருசக்கர வாகனத்தில் நிதானமாக அமர்ந்து கொண்டு இருக்கிறார். பின்னர், தனது மொபைலில் அந்த ஜீப்பின் நம்பர் பிளேட்டை புகைப்படமாக எடுக்கிறார்.

நடக்கும் தவறை தட்டிக் கேட்காமல், மற்ற வாகன ஓட்டிகள் எல்லாம் கண்டுகொள்ளாமல் அங்கிருந்து புறப்பட்டு செல்கின்றனர். தொடர்ந்து அந்த இளைஞர் வழிவிடாமல் நிற்க.. ஜீப்பிலிருந்து இறங்கிய அந்த ஓட்டுநர் தனது மொபைலில் அந்த இளைஞரை புகைப்படம் எடுத்து மிரட்டுகிறார்.

அங்கிருந்து அந்த இளைஞர் நகராமல் இருக்க, அவரை அந்த ஓட்டுநர் அவரது வாகனத்திலிருந்து கீழே இழுத்து கண்மூடித்தனமாக அடிக்கிறார். அந்த இளைஞர் தடுமாறி ஒருகட்டத்தில் பதிலுக்கு அடிக்கிறார். தொடர்ந்து அங்கிருந்தவர்கள் அந்த இளைஞரை மீட்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். பின்னர் அங்கு வந்து போலீஸார் இளைஞரை மீட்டனர். இந்த மூன்று நிமிடக் காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சிசிடிவி பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது, சுமார் ஒரு கோடிக்கு அதிகமானோர் அந்த வீடியோ பதிவை பார்வையிட்டு, அந்த இளைஞரின் தைரியத்துக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

தவறிழைக்கும்போது, தட்டிக்கேட்ட அந்த இளைஞரின் வைரல் வீடியோ இதோ:

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x