Last Updated : 30 Mar, 2023 06:24 PM

1  

Published : 30 Mar 2023 06:24 PM
Last Updated : 30 Mar 2023 06:24 PM

மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ மார்ச் 30 - ஏப்.5 வரை

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை - ராசியில் புதன், சுக்கிரன், ராகு - தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய் - சப்தம ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் சனி - விரைய ஸ்தானத்தில் சூரியன், குரு என கிரகநிலை அமைந்திருக்கிறது.

பலன்கள்: மேஷ ராசியினரே! இந்த வாரம் பல நன்மைகள் உண்டாகும். உங்கள் பேச்சு திறமை அதிகரித்து அதனால் பல காரியங்கள் சிறப்பாக நடந்துமுடியும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் அவர்களால் உதவி ஆகியவையும் கிடைக்கலாம். நீங்கள் செய்யும் காரியங்களுக்கு உதவுவதற்காக யாராவது ஒருவர் துணை நிற்பார். பகைகள் விலகும்.

தொழில் வியாபாரம் விரிவாக்கம் செய்ய எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். கடன் பிரச்சினைகள் தொல்லை தராது. போட்டிகள் விலகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உயர்ந்த நிலைக்கு வருவார்கள். உழைப்புக்கு பலன் கிடைக்கும். உங்கள் மீதான மதிப்பு உயரும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள், எதிர்ப்புகள் தீரும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் உங்களுக்கு பெருமை உண்டாகும்.

பெண்களுக்கு கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். கலைத்துறையினருக்கு தொழில் தொடர்பாக அலைச்சல் இருக்கும். அரசியல் துறையினருக்கு தேவையற்ற அலைச்சலை குறைத்துக் கொள்வது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெறவும், மேல்படிப்பு படிக்கவும் எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.

பரிகாரம்: செவ்வாய்க்கிழமையில் நவக்கிரகத்திற்கு தீபம் ஏற்றி வணங்கி வர சொத்து பிரச்சினை தீரும். குடும்ப குழப்பம் தீரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன், வெள்ளி

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்) கிரகநிலை - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் - ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - தொழில் ஸ்தானத்தில் சனி - லாப ஸ்தானத்தில் சூரியன், குரு - அயன சயன போக ஸ்தானத்தில் புதன், சுக்கிரன், ராகு என கிரகநிலை அமைந்திருக்கிறது.

பலன்கள்: ரிஷப ராசியினரே! இந்த வாரம் வாழ்க்கைக்கு தேவையான புதிய வசதிகள் கிடைக்கும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். ராசிநாதன் சுக்கிரன் புதிய ஆடை அணிகலன்கள் - ஆடம்பரப் பொருட்கள் வாங்க தூண்டுவார். வீடு, மனை வாங்க திட்டமிடுவீர்கள். சிலர் புதிய வாகனம் வாங்குவார்கள். எடுக்கும் காரியம் சிறிய முயற்சிக்குப் பின் நடைபெறும்.

தொழில் வியாபாரம் ஏற்ற இறக்கமாக இருந்தது இனி சீராகும். ஆனால் பழைய பாக்கிகளை வசூலிப்பதற்கு அலைய வேண்டியது இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக பணியாற்ற வேண்டி இருக்கும். குடும்பத்தில் உறவினர் வருகை இருக்கும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி நீடிக்கும். பிள்ளைகள் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள். தந்தையின் உடல்நலத்தில் கவனம் தேவை.

பெண்களுக்கு ஆடை ஆபரணம் வாங்குவீர்கள். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடிவரும். அரசியல் துறையினருக்கு சாதகமான காலகட்டமாக இருந்தாலும் புத்திக்கூர்மையுடன் செயல்களை ஆராய்ந்து செய்வது நன்மை பயக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த சிக்கல்கள் தீரும். ஆசிரியர்களின் ஆலோசனை கூடுதல் மதிப்பெண் பெற உதவும்.

பரிகாரம்: பெருமாளை வழிபட வாழ்வில் வளம் பெறும். குடும்ப ஒற்றுமை உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வெள்ளி

மிதுனம் (மிருகசிரீஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை - ராசியில் செவ்வாய் - பஞ்சம ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் சனி - தொழில் ஸ்தானத்தில் சூரியன், குரு - லாப ஸ்தானத்தில் புதன், சுக்கிரன், ராகு என கிரகநிலை அமைந்திருக்கிறது.

பலன்கள்: மிதுன ராசியினரே! இந்த வாரம் எதையும் சாதிக்கும் திறமை உண்டாகும். வீட்டில் இருந்து வெளியில் தங்கும் சூழல் ஏற்படும். எடுத்த காரியத்தை செய்யும் போது எது சரி, எது தவறு என்று தடுமாற்றம் ஏற்பட்டாலும் திறமையால் அதனை செய்து முடிப்பீர்கள். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். தொழில் வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்லும். நிதி உதவி கிடைக்கும். வாடிக்கையாளர் மத்தியில் மதிப்பு கூடும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கலாம். சம்பள உயர்வும் வரலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். கணவன் மனைவிக்கிடையே இதுவரை இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கி நெருக்கம் அதிகரிக்கும். பெண்களுக்கு மிக கவனமாக பேசுவதும், கோபத்தை குறைப்பதும் நன்மை தரும்.

கலைத்துறையினருக்கு நிலுவையில் உள்ள காரியங்கள் சிறப்பாக முடிய வழி பிறக்கும். அரசியல்வாதிகள் மக்கள் தொடர்பான பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் காணப்படும். எதிர்கால கல்வி பற்றிய சிந்தனை மேலோங்கும்.

பரிகாரம்: பெருமாளையும் தாயாரையும் வணங்கி வர வறுமை நீங்கும். கல்வியறிவு பெருகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன், வெள்ளி

கடகம் (புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்) கிரகநிலை - சுக ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஸ்தானத்தில் சனி - பாக்கிய ஸ்தானத்தில் சூரியன், குரு - தொழில் ஸ்தானத்தில் புதன், சுக்கிரன், ராகு - விரைய ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகநிலை அமைந்திருக்கிறது.

பலன்கள்: கடக ராசியினரே! இந்த வாரம் சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். பணம் வருவது அதிகரிக்கும். வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பதற்கான வாய்ப்புகள் வரும். வெளியூர் பயணங்கள் சாதகமான பலன் தரும். மற்றவர்களின் நலனுக்காக வாதாடி வெற்றி பெறுவீர்கள். கவுரவம், அந்தஸ்து உயரும்.

தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாகும். ஆர்டர்கள் வருவது திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் உண்டாகலாம். புதிய பொறுப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் சுக சவுக்கியம் உண்டாகும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சினைகள் தீரும். கணவன் மனைவிக்கிடையே அன்பான நிலை காணப்படும். பிள்ளைகளின் அறிவு திறமை வெளிப்படும்.

பெண்களுக்கு அடுத்தவர்கள் பிரச்சினையை தீர்த்து வைப்பீர்கள். கலைத்துறையினர் சற்று எச்சரிக்கையுடன் செயல்படுவது நன்மை தரும். அரசியல்வாதிகள் கவனமுடன் செயல்பட்டால் மேலிடத்தின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் திருப்தி உண்டாகும். கல்வி தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடலாம்.

பரிகாரம்: துர்க்கை அம்மனை வழிபட எதிர்ப்புகள் விலகும். காரிய தடை நீங்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வியாழன்

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்) கிரகநிலை - தைரிய வீரிய ஸ்தானத்தில் கேது - சப்தம ஸ்தானத்தில் சனி - அஷ்டம ஸ்தானத்தில் சூரியன், குரு - பாக்கிய ஸ்தானத்தில் புதன், சுக்கிரன், ராகு - லாப ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகநிலை அமைந்திருக்கிறது.

பலன்கள்: சிம்ம ராசியினரே! இந்த வாரம் நிதானமாக பேசுவது காரிய வெற்றிக்கு உதவும். மற்றவர்களின் காரியங்களில் ஈடுபடும் போது கவனம் தேவை. உழைப்பு வீணாகலாம். எனவே திட்டமிட்டு எதையும் செய்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வாடிக்கையாளர்களை அனுசரித்து நிதானமாக பேசுவது நன்மை தரும். கடனுக்கு பொருள்களை அனுப்பும் போது எச்சரிக்கை தேவை.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். மேல் அதிகாரிகளுடன் கவனமாக பேசுவது நல்லது. குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகலாம். பிள்ளைகளிடம் கோபத்தை காட்டாமல் அனுசரித்து செல்வது நல்லது. பெண்களுக்கு திட்டமிட்டு செய்யும் காரியங்கள் வெற்றிகரமாக முடியும்.

கலைத்துறையினருக்கு மிகவும் நன்மை பயக்கும் காலமாக இது அமையும். அரசியல்வாதிகளுக்கு உற்சாகமான காலமாக அமையும். கட்சிப் பணிகளுக்காக கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். மாணவர்களுக்கு சகமாணவர்களுடன் பழகும் போது கவனம் தேவை. கல்வியில் வெற்றி பெற கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.

பரிகாரம்: சிவபெருமானையும், நந்தீஸ்வரரையும் வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். குழப்பம் தீரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன், வியாழன்

கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2, பாதங்கள்) கிரகநிலை - தனவாக்கு ஸ்தானத்தில் கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி - சப்தம ஸ்தானத்தில் சூரியன், குரு - அஷ்டம ஸ்தானத்தில் புதன், சுக்கிரன், ராகு - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகநிலை அமைந்திருக்கிறது.

பலன்கள்: கன்னி ராசியினரே! இந்த வாரம் எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். உஷ்ண சம்பந்தமான நோய் ஏற்படலாம். எதிர்பார்த்த பணம் கைக்கு வர தாமதமாகும் அதனால் திடீர் பண நெருக்கடி வரலாம். இடம் பொருள் அறியாமல் பேசுவதால் அடுத்தவர்களிடம் மனஸ்தாபம் உண்டாகலாம். தொழில் வியாபாரத்தில் திடீர் செலவுகள் உண்டாகும். பணவசூல் தாமதப்படலாம். வீண் அலைச்சல் இருக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையற்ற பயணம் செல்ல நேரலாம். கூடுதல் பொறுப்புகள் அடுத்தவர் பணியை செய்வது போன்றவையும் வந்து சேரும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே மனம்விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தருவதாக இருக்கும். பெண்களுக்கு எதிர்பாராத செலவு உண்டாகும்.

கலைத்துறையினருக்கு சோதனைகள் மிகுந்த காலமாக இருக்கும். அரசியல்வாதிகளுக்கு முன்னேற்றத்தில் தடைகள் இருக்கும். பொறுமையாக கையாள்வதன் மூலம் பெரிய பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். மாணவர்களுக்கு எந்த ஒரு பாடத்தை படித்தாலும் கவனத்தை சிதறவிடாமல் படிப்பது அவசியம். விளையாடும் போது கவனம் தேவை.

பரிகாரம்: பைரவரை வணங்க திருமண தடை நீங்கும். செல்வம் சேரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு,புதன், வெள்ளி

துலாம் (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதங்கள்) கிரகநிலை - ராசியில் கேது - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனி - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூரியன், குரு - களத்திர ஸ்தானத்தில் புதன், சுக்கிரன், ராகு - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகநிலை அமைந்திருக்கிறது.

பலன்கள்: துலா ராசியினரே! இந்த வாரம் எதிலும் லாபமான நிலை காணப்படும். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணவரத்து அதிகரிக்கும். துணிச்சலாக எதிலும் ஈடுபட்டு பாராட்டு பெறுவீர்கள். எதிலும் தயக்கமோ பயமோ இருக்காது. தந்தையின் உடல்நிலையில் கவனம் தேவை. சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம்.

தொழில் வியாபாரத்தில் லாபம் கூடும். புதிய ஆர்டர்கள் கூடுதலாக உழைப்பதன் பேரில் கிடைக்கும். வாடிக்கையாளர்களை திருப்தி செய்ய முற்படுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேன்மை அடைவார்கள். குடும்பத்தில் இருப்பவர்கள் உங்கள் விருப்பத்திற்கு மாறாக எதையும் செய்வார்கள். கணவன் மனைவிக்கிடையே சில்லறை பிரச்சினைகள் ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் மூலம் மதிப்பு உயரும். நண்பர்கள் மூலம் நன்மை உண்டாகும்.

பெண்களுக்கு தன்னம்பிக்கையுடன் துணிச்சலாக எதிலும் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். கலைத்துறையினர் இரவு பகலாக உழைக்க வேண்டி இருக்கும். அரசியல்வாதிகளுக்கு மேலிடத்திலிருந்து சந்தோஷமான செய்தி வரும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். கல்விக்கான செலவு கூடும்.

பரிகாரம்: ஸ்ரீரங்கநாதரை வணங்குவது சுபிட்சத்தை தரும். இல்லறத்தில் இருந்த சச்சரவு தீரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், செவ்வாய், வெள்ளி

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை) கிரகநிலை - சுக ஸ்தானத்தில் சனி - பஞ்சம ஸ்தானத்தில் சூரியன், குரு - ரண ருண ரோக ஸ்தானத்தில் புதன், சுக்கிரன், ராகு - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய் - அயன சயன போக ஸ்தானத்தில் கேது என கிரகநிலை அமைந்திருக்கிறது.

பலன்கள்: விருச்சிக ராசியினரே இந்த வாரம் பலவிதத்திலும் பணவரத்து உண்டாகும். ஆனாலும் சுபச்செலவுகள் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியங்கள் நன்றாக நடந்து முடியும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் வரும். கொடுத்த வாக்கை காப்பாற்ற பாடுபடுவீர்கள். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். அடுத்தவர் பிரச்சினைகளில் தலையிடாமல் ஒதுங்கி செல்வது நல்லது. ஆரோக்கியம் சம்பந்தமான குறைபாடு வரலாம்.

தொழில் வியாபாரத்தில் வேகமான முன்னேற்றம் இருப்பது கடினம். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மற்றவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்காமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் சுபகாரியங்கள், மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள் இருக்கும். அதேநேரத்தில் கணவன், மனைவிக்கிடையே ஏதேனும் மனவருத்தம் ஏற்படலாம்.

பெண்களுக்கு தடைபட்ட காரியங்கள் தடைநீங்கி நல்லபடியாக நடந்து முடியும். கலைத்துறையினர் கடுமையாக உழைப்பின் மூலம் முன்னேற வேண்டி இருக்கும். அரசியல்வாதிகள் வெளியூர் பயணம் செல்ல வேண்டி இருக்கும். மாணவர்களுக்கு பாடங்களை கவனமாக படித்து கூடுதல் மதிப்பெண் பெற முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.

பரிகாரம்: மாரியம்மனை வணங்க எல்லா துன்பமும் நீங்கும். மனநிம்மதி கிடைக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், புதன், வெள்ளி

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம், 1ம் பாதம்) கிரகநிலை - தைரிய வீர்ய ஸ்தானத்தில் சனி - சுக ஸ்தானத்தில் சூரியன், குரு - பஞ்சம ஸ்தானத்தில் புதன், சுக்கிரன், ராகு - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் - லாப ஸ்தானத்தில் கேது என கிரகநிலை அமைந்திருக்கிறது.

பலன்கள்: தனுசு ராசியினரே! இந்த வாரம் பத்தாமிடத்தை ராசிநாதன் குரு பார்ப்பதால் சில குழப்பங்கள் நேர்ந்தாலும் இதுவரை நடக்காமல் இருந்த காரியத்தை சிறப்பாக செய்து முடித்து மனநிம்மதி அடைவீர்கள். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் நடந்து முடியும். முக்கிய நபர்கள் மூலம் எதிர்பார்த்த உதவியும் கிடைக்கும். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். ஆடம்பர செலவுகள் அதிகரிக்கும்.

தொழில் வியாபாரம் நன்கு நடக்க தேவையான உதவிகள் கிடைக்கும். வாடிக்கையாளர் தேவை அறிந்து பொருள்களை அனுப்பி அவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக பணிகளை செய்து முடித்து நிர்வாகத்தில் நல்ல பெயர் பெறுவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். கணவன் மனைவிக்கிடையே இருந்த பிரச்சினைகள் தீரும். பிள்ளைகள் விரும்பும் பொருள்களை வாங்கி கொடுத்து அவர்களை மகிழ்ச்சி அடைய செய்வீர்கள்.

பெண்களுக்கு இழுபறியாக இருந்த வேலைகள் சாதகமாக நடந்து முடியும். கலைத்துறையினருக்கு மிகவும் அனுகூலமான காலமிது. அரசியல்வாதிகளுக்கு இனிமையான செய்திகள் தேடி வரும். மாணவர்களுக்கு சகமாணவர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும்.

பரிகாரம்: தட்சிணாமூர்த்தி அஷ்டகம் படித்து தட்சிணாமூர்த்தியை வணங்கி வருவதால் பணகஷ்டம் தீரும். கல்வியில் வெற்றி உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன், வியாழன்


மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2 பாதங்கள்) கிரகநிலை - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி - தைரிய வீரிய ஸ்தானத்தில் சூரியன், குரு - சுக ஸ்தானத்தில் புதன், சுக்கிரன், ராகு - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய் - தொழில் ஸ்தானத்தில் கேது என கிரகநிலை அமைந்திருக்கிறது.

பலன்கள்: மகர ராசியினரே! இந்த வாரம் எல்லா வசதிகளும் உண்டாகும். நோய் நீங்கி ஆரோக்கியம் பெறுவீர்கள். மனதில் தைரியமும், தன்னம்பிக்கையும் பிறக்கும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நண்பர்கள், உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தந்தையுடன் மனஸ்தாபம் ஏற்படலாம். எதிர்பாராத காரிய தடைகள் வரும். வாகனங்களில் செல்லும் போது மிகவும் கவனம் தேவை.

தொழில் வியாபாரத்தில் சுமாரான போக்கு காணப்படும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நம்பிக்கையுடன் செயலாற்றுவதன் மூலம் நன்மை அடைவார்கள். அலுவலக பணிகளில் தாமதம் ஏற்படலாம். குடும்பத்தினருக்கு தேவையான பொருள்களை வாங்குவீர்கள். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை காணப்படும். பிள்ளைகளின் கல்வி அவர்களது செயல்களில் கவனம் செலுத்துவீர்கள்.

பெண்களுக்கு தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரிய வெற்றி அடைவீர்கள். கலைத்துறையினருக்கு நீண்டநாட்களாக இருந்த மன அழுத்தம் நீங்கும்படியான சூழல் உருவாகும். அரசியல்வாதிகளுக்கு மனம் மகிழும்படியான சுழ்நிலை உருவாகும். மாணவர்களுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கி நம்பிக்கையுடன் பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும்.

பரிகாரம்: சனிக்கிழமைகளில் சனி பகவானை வணங்கி காகத்திற்கு எள்சாதம் வைப்பது உடல் ஆரோக்கியத்தை தரும். கஷ்டங்கள் குறையும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி

கும்பம் (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை - ராசியில் சனி - தனவாக்கு ஸ்தானத்தில் சூரியன், குரு - தைரிய வீரிய ஸ்தானத்தில் புதன், சுக்கிரன், ராகு - பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய் - பாக்கிய ஸ்தானத்தில் கேது என கிரகநிலை அமைந்திருக்கிறது.

பலன்கள்: கும்ப ராசியினரே! இந்த வாரம் கடும் முயற்சிக்கு பிறகு நீங்கள் எடுக்கும் காரியம் வெற்றி பெறும். வீண் வழக்குகள் வரலாம். உஷ்ணம் சம்பந்தமான நோய் உண்டாகலாம் கவனம் தேவை. சுக்கிரன் சஞ்சாரத்தால் அலைச்சலை சந்திக்க நேரிடும். பயணம் செல்ல வேண்டி இருக்கும். எதிர்பாலினத்தாரிடம் பழகும் போது கவனம் தேவை. விருப்பத்திற்கு மாறான சம்பவங்கள் நடக்கலாம்.

தொழில் வியாபாரத்தில் குறிப்பாக கூட்டு தொழிலில் ஈடுபட்டு இருப்பவர்கள் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது வியாபார மேன்மைக்கு உதவும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும். முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் மறையும். கணவன், மனைவிக்கிடையே நீடித்து வந்த மனவருத்தம் நீங்கி சந்தோஷமான சூழ்நிலை ஏற்படும். யாரிடமும் வாக்குவாதத்தை தவிர்ப்பது நன்மை தரும்.

பெண்களுக்கு மனக்கவலை ஏற்படலாம். கலைத்துறையினருக்கு உடனிருப்பவர்களுடன் சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்பட்டு நீங்கும். அரசியல்வாதிகளுக்கு நீண்ட நாட்களாக வரவேண்டி இருந்த பணம் வந்து சேரும். மாணவர்களுக்கு மிகவும் கவனத்துடன் சந்தேகங்களை தெளிவாக தெரிந்து கொண்டு பாடங்களை படிப்பது நல்லது. விளையாட்டு போட்டிகளில் ஈடுபடும் போது கவனம் தேவை.

பரிகாரம்: விநாயக பெருமானை வணங்குவதால் காரிய அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன், வெள்ளி

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) கிரகநிலை - ராசியில் சூரியன், குரு - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் புதன், சுக்கிரன், ராகு - சுகஸ்தானத்தில் செவ்வாய் - அஷ்டம ஸ்தானத்தில் கேது - விரைய ஸ்தானத்தில் சனி என கிரகநிலை அமைந்திருக்கிறது.

பலன்கள்: மீன ராசியினரே! இந்த வாரம் பணவரத்து அதிகரிக்கும். அறிவு திறமை வெளிப்படும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு உண்டாகும். அடுத்தவர்களின் குற்றச்சாட்டுக்கு ஆளாக நேரிடலாம் கவனம் தேவை. அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் இருக்கும். வாடிக்கையாளர்களிடம் சாமர்த்தியமாக பேசுவதன் மூலம் வியாபாரம் வளர்ச்சி பெறும்.

அடுத்தவர்கள் கூறும் ஆலோசனைகளை ஏற்கும் போது கவனம் தேவை. அவற்றை ஆராய்ந்து பார்த்து செய்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு வேலை கிடைக்கலாம். குடும்பத்தில் வாக்குவாதத்தையும், கோபத்தையும் தவிர்ப்பது நல்லது. வாழ்க்கை துணையுடன் அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை. விருந்தினர்கள் வந்து செல்வார்கள்.

பெண்கள் எந்த ஒரு காரியத்தையும் செய்து முடிக்க கூடுதல் நேரம் உழைக்க வேண்டி இருக்கும். கலைத்துறையினருக்கு மகிழ்ச்சியான காலகட்டம். அரசியல்வாதிகளுக்கு லாபமான காலமாக அமையும். மாணவர்கள் மற்றவர்களை அனுசரித்து செல்வது நன்மைதரும். விளையாட்டுகளில் கவனம் செலுத்துவதுடன் கல்வியிலும் கூடுதல் கவனம் நன்மை தரும்.

பரிகாரம்: குலதெய்வத்தினை வழிபடுவது வெற்றிக்கு உதவும். கடன் பிரச்சினை குறையும். கல்வியில் வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, திங்கள், வியாழன்

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x