Published : 22 Apr 2024 04:25 PM
Last Updated : 22 Apr 2024 04:25 PM

குருப் பெயர்ச்சி: கடகம் ராசியினருக்கு எப்படி? - 01.05.2024 முதல் 13.04.2025 வரை

எதையும் இலவசமாக பெற்றுக் கொள்ள விரும்பாதவர்களே! கடந்த ஓராண்டு காலமாக உங்களுடைய ராசிக்கு 10-ம் வீட்டில் அமர்ந்து உங்களுக்கு பல விதங்களிலும் அவமானங்களையும், தோல்வியையும் கொடுத்த குருபகவான் இப்போது 01.05.2024 முதல் 13.04.2025 வரை லாப வீட்டில் நுழைகிறார். உங்கள் ஆழ்மனதில் இருக்கும் தாழ்வு மனப்பான்மை நீங்கும். பிரிந்திருந்த கணவன் - மனைவி ஒன்று சேருவீர்கள். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். பிள்ளை பாக்கியமும் கிடைக்கும்.

நெடுநாள் ஆசையான வீடு, மனை வாங்குவது, வீடு கட்டுவது போன்ற முயற்சிகளும் பலிதமாகும். புது வேலைக்கு முயற்சி செய்த இடத்தில் இருந்து நல்ல பதில் வரும். அயல்நாட்டில் வேலை கிடைக்கவும் வாய்ப்பிருக்கிறது. சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். பார்த்தும் பார்க்காமல் சென்றுக் கொண்டிருந்த சொந்த - பந்தங்க ளெல்லாம் வலிய வந்துப் பேசு வார்கள். முன்கோபம் குறையும்.

எதிர்பார்த்து காத்திருந்த தொகை கைக்கு வரும். ஷேர் மூலமாகவும் சம்பாதிப்பீர்கள். புதுத் தொழில் தொடங்குவீர்கள். கணவர் மனம் விட்டுப் பேசுவார். கணவர்வழி உறவினர்களும் மதிப் பார்கள். மாமனாரின் உடல் நிலை சீராகும். மச்சினருக்கு வேலைக் கிடைக்கும். குரு உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டை பார்ப்பதால் புது டிசைனில் நகை வாங்குவீர்கள். இளைய சகோதரருக்கு திருமணம் முடியும். தைரியம் பிறக்கும்.

குரு 5-ம் வீட்டை பார்ப்பதால் குழந்தை பாக்கியம் உண்டு. பூர்வீக சொத்துப் பிரச்சினை தீரும். வழக்கு சாதகமாகும். குரு 7-ம் வீட்டை பார்ப்பதால் பிரபலமாவீர்கள். அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். மகன் மற்றும் மகளின் கல்யாண முயற்சிகள் பலிதமாகும். உங்களிடமிருந்த கற்பனைத் திறன், கலைத் திறனை வெளிப்படுத்தவும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும்.

குருபகவானின் நட்சத்திர பயணம்: 1.5.2024 முதல் 13.6.2024 வரை உங்களின் தனாதிபதியான சூரியனின் கார்த்திகை நட்சத்திரத்தில் குரு பயணிப்பதால் திடீர் பணவரவு உண்டு. பிரபலங்கள் உதவுவார்கள். சமாளிக்க முடியாத பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும். வழக்கில் வெற்றியுண்டு. கண் வலி குறையும். தந்தை வலி உறவினர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். சிலருக்கு அரசு வேலை கிடைக்கும்.

13.6.2024 முதல் 19.8.2024 வரை மற்றும் 28.11.2024 முதல் 10.4.2025 வரை உங்கள் ராசிநாதனான சந்திரனின் ரோகிணி நட்சத்திரத்தில் குரு செல்வதால் பிரபலமாவீர்கள். வருமானம் உயரும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். சொந்தம் பந்தங்களின் வருகையால் வீடு களைகட்டும்.

குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். அடிக்கடி பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். பெரிய பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப் படுவீர்கள். முக்கிய பிரமுகர்களின் வீட்டு விசேஷங்களில் முதல் மரியாதை கிட்டும். வீடு, மனை அமையும்.

20.8.2024 முதல் 27.11.2024 வரை மற்றும் 10.4.2025 முதல் 13.4.2025 வரை உங்களின் பிரபல யோகாதிபதியான செவ்வாயின் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் குரு செல்வதால் நினைத்த காரியங்களை முடிப்பீர்கள். உங்களின் அந்தஸ்து உயரும். பணப்புழக்கம் அதிகரிப்பால் வருங்காலத்துக்காக சேமிப்பீர்கள். சொத்துப் பிரச்சினை சுமுகமாகும். தள்ளிப் போன வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். பிள்ளை பாக்கியம் உண்டு. பிள்ளைகளால் புகழடைவீர்கள்.

வியாபாரத்தில் இழந்த செல்வாக்கையும், லாபத்தையும் பெறுவீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் அதிகமாகும். வேலையாட்களின் பிரச்சினையும் குறையும். உத்தியோகத்தில் கடந்த ஓராண்டு காலமாக பட்ட அவஸ்தைகள், நெருக்கடிகள், அவமானங்கள் அனைத்தும் நீங்கி பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும்.

இந்த குரு மாற்றம் ஒதுங்கி ஒடுங்கியிருந்த உங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வருவதுடன் சமூகத்தில் பெரிய அந்தஸ்தையும் தருவதாக அமையும்.

பரிகாரம்: சென்னை பூந்தமல்லியில் இருந்து தக்கோலம் செல்லும்வழியில் 40 கிமீ தொலைவில் உள்ள இலம்பையங்கோட்டூரில் உள்ள சிவாலயத்தில் ஸ்ரீதட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி வணங்குங்கள். பழைய பள்ளிக்கூடங்களை புதுப்பிக்க உதவுங்கள். வெற்றிகள் தொடரும்.

(நிகழும் குரோதி வருடம் சித்திரை மாதம் 18-ம் நாள், புதன்கிழமை, 01.05.2024 கிருஷ்ண பட்சத்து, அஷ்டமி திதி, திரு வோண நட்சத்திரம், சுபம் நாமயோகம், பாலவம் நாமகரணத்தில், நேத்திரம் ஜுவனம் நிறைந்த சித்தயோக நன்னாளில் பிரகஸ்பதியாகிய குருபகவான் சர வீடான மேஷ ராசியி லிருந்து ஸ்திர வீடான ரிஷப ராசிக்குள் மதியம் 1 மணிக்கு பெயர்ச்சியாகிறார்.)

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x