Last Updated : 16 Apr, 2024 03:59 PM

 

Published : 16 Apr 2024 03:59 PM
Last Updated : 16 Apr 2024 03:59 PM

ரிஷபம் ராசி - குரு பெயர்ச்சி பலன்கள் 2024 - 2025 முழுமையாக

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருகசீரிஷம் 1, 2, பாதங்கள்) சுக்கிரனை ராசிநாதனாகக் கொண்ட ரிஷப ராசி அன்பர்களே! நீங்கள் வசீகரமாக பேசுவதில் வல்லவர்.கிரகநிலை: விரைய ஸ்தானத்தில் இருந்து ராசி ஸ்தானத்திற்கு மாறுகிறார். உங்களது பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானம் - சப்தம ஸ்தானம் - பாக்கிய ஸ்தானம் ஆகியவற்றைப் பார்க்கிறார்.

மேஷத்தில் இருந்து ரிஷபத்துக்கு: நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீகுரோதி வருஷம் உத்தராயணம் வஸந்த ரிது சித்திரை மாதம் 18-ம் நாள் இதற்குச் சரியான ஆங்கில தேதி 01.05.2024 அன்றைய தினம் கிருஷ்ணபக்‌ஷ அஷ்டமியும் - புதன்கிழமையும் - திருவோண நக்‌ஷத்ரமும் - சுப நாமயோகமும் - பவ கரணமும் - சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 28.22-க்கு - மாலை 05.01-க்கு துலாம் லக்னத்தில் குரு பகவான் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு மாறுகிறார்.

ரிஷபம் ராசியினருக்கான குரு பெயர்ச்சி பலன்கள்: இந்த குரு பெயர்ச்சியால் உங்களின் செய்தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். செல்வவளம் பெருகும். உங்கள் செல்வாக்கு உயரும். உங்களின் பெயரும், புகழும், அந்தஸ்தும் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றியை அடைவீர்கள். வழக்கு விஷயங்களில் வெற்றி உண்டாகும். அனைவரிடமும் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்வீர்கள். பெரியோரிடம் நல்லுறவை வளர்த்துக் கொள்வீர்கள். பிள்ளைகள் வழியில் ஏற்பட்ட கவலைகள் நீங்கும். மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து மீண்டு விடுவார்கள். அசையும், அசையாச்சொத்துக்களின் சேர்க்கை உண்டாகும். உங்களின் எண்ணங்களில் ஏற்பட்ட தடுமாற்றம் நீங்கும். மனக்குழப்பம் நீங்கி தெளிவுடன் காணப்படுவீர்கள். உங்களின் தேகத்தில் புதிய பொலிவு உண்டாகும். உங்களின் நகைச்சுவை உணர்வு அதிகரிக்கும். விலகிச் சென்றிருந்த உறவினர்கள் மீண்டும் வந்து இணைவார்கள்.

வருமானம் இரட்டிப்பாகும். பழைய கடன்களை வட்டியும் முதலுமாக திருப்பிச் செலுத்துவீர்கள். குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்வீர்கள். பூர்வீகச் சொத்துக்களில் பாகப்பிரிவினை உண்டாகி உங்களுக்கு உரிய பங்கு கிடைத்துவிடும். அதோடு கொடுத்த வாக்குறுதியை எப்பாடுபட்டாவது காப்பாற்றி புகழடையும் காலகட்டம் இதுவென்றால் மிகையில்லை. நண்பர்களுடன் இணக்கமாகச் செயல்படுவீர்கள். வெளியில் கொடுத்திருந்த பணம் திரும்பவும் கை வந்து சேரும். உங்களைப் பற்றிய தவறான அபிப்ராயங்களை நண்பர்கள் மறந்து விடுவார்கள். அதேநேரம் சில அனாவசிய செலவுகளையும் செய்ய நேரிடும்.

குடும்பத்தில் சில பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அவற்றை பெரியோர்களின் ஆலோசனைகளைக் கேட்டுத் தீர்த்துக் கொள்வீர்கள். உங்களுக்கென்று தனி பாணியை அமைத்துக்கொண்டு செயல்படுவீர்கள். திட்டமிட்ட காரியங்களில் சில தடுமாற்றங்கள் ஏற்பட்டாலும் நஷ்டங்கள் ஏற்படாமல் தப்பித்துக் கொள்வீர்கள். குடும்பத்தில் நிம்மதி நிலவும். உற்றார் உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். செய்தொழிலில் மாற்றம் செய்ய நினைக்கும்போது முன்கூட்டியே கூட்டாளிகளுடன் விவாதித்து சுமுகமான நிலைமையை ஏற்படுத்திக்கொள்வீர்கள். உடல் ஆரோக்யம் சீராக இருந்தாலும் அவ்வப்போது உஷ்ணம் சம்பந்தமான உபாதைகளுக்கு ஆளாவீர்கள். எனவே கவனம் தேவை.

நண்பர்களுக்கிடையே ஏற்படும் பிரச்சினைகளை நடுநிலையோடு இருந்து தீர்ப்பீர்கள். அதோடு தீயோரின் நட்பையும் தவிர்ப்பது நல்லது. இதனால் தேவையற்ற சூழ்நிலைகளையும் தவிர்க்கலாம். இந்தக் காலகட்டத்தில் எவருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம். உங்களின் பெயரில் பணம் வாங்கித் தரவும் வேண்டாம். உத்யோகஸ்தர்களுக்கு அலுவலகப் பணிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். எதிர்வரும் இடையூறுகளை சாதுர்யத்துடன் சமாளிப்பீர்கள். உங்களிடம் மேலதிகாரிகள் நட்புடன் நடந்துகொள்வார்கள். உங்களுக்கு சிறு தொல்லைகள் கொடுத்து வந்த சக ஊழியர்கள் அடங்கிவிடுவார்கள். பண வரவிற்கு எந்தக் குறைவும் இருக்காது.

வியாபாரிகளுக்கு கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சீராக இருந்தாலும் கூடுதல் அக்கறையோடு வியாபாரம் செய்யவும். சில நேரங்களில் கடும்போட்டிகளை சந்திக்க நேரிடும். இதனால் மறைமுக எதிர்ப்புகளையும் சமாளிக்க வேண்டிவரும். எதிலும் விழிப்புடன் இருப்பது நல்லது. நன்கு ஆலோசித்த பிறகே புதிய முதலீடுகளைச் செய்யவும். கால்நடைகளால் நன்மைகள் உண்டாகும். புதிய குத்தகைகளை நாடிச் செல்ல வேண்டாம். நெல் விளைச்சல் சாதகமாக இருக்கும்.

அரசியல்வாதிகள் தொண்டர்களின் ஆதரவுடன் செயற்கரிய செயல்களைச் செய்வீர்கள். எதிரிகளிடம் கவனமாக இருக்கவும். கட்சித் தலைமையிடம் நல்ல பெயரைக் காப்பாற்றிக்கொள்ளவும். சச்சரவுகள் ஏற்படுத்தும் விஷயங்களில் வாயைக் கொடுத்து மாட்டிக்கொள்ள வேண்டாம். கலைத்துறையினரின் எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும். அனைத்து செயல்களையும் நேர்த்தியுடன் முடிப்பீர்கள். புதிய நண்பர்களால் பலனடைவீர்கள். புதிய படைப்புகளை உருவாக்குவதில் முனைப்புடன் ஈடுபடுவீர்கள். சககலைஞர்களும் உங்களை அனுசரித்து நடந்துகொள்வார்கள்.

பெண்மணிகளுக்கு கணவரிடம் அன்பு, பாசம் அதிகரிக்கும். உறவினர்கள் உங்களை அனுசரித்து நடந்துகொள்வார்கள். புதிய ஆடை, அணிகலன்களை வாங்கி மகிழ்வீர்கள். மனதிற்கினிய செய்திகளைக் கேட்பீர்கள். மாணவமணிகள் கல்வியிலும் உள்ளரங்கு விளையாட்டிலும் நன்கு தேர்ச்சி பெறுவீர்கள். மேலும் அதிக மதிப்பெண்களைப் பெற போதிய பயிற்சி தேவை.

கார்த்திகை 2, 3, 4 பாதங்கள்: இந்த குரு பெயர்ச்சியின் மூலம் பொருட்களின் விற்பனை மிகவும் நன்றாகவே இருக்கும். உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் மிகப் பெரிய உதவிகளைச் செய்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு மேலிடத்திலிருந்து உங்களுக்கு சந்தோஷமான செய்திகள் வந்து சேரும். படிப்படியான வளர்ச்சியைக் காண்பீர்கள். வருமானம் நன்றாக இருக்கும். செலவும் அதிகமாகும். சக ஊழியர்களால் நன்மை அடைவீர்கள். புதிய வாகனங்களை வாங்கும் வாய்ப்பும் கிடைக்கும். வாழ்க்கையில் மேன்மை அடைய கூடுதல் கவனத்துடன் உழைப்பது அவசியம்.

ரோகினி: இந்த பெயர்ச்சியின் மூலம் வாகனங்களை உபயோகப்படுத்தும் போது கவனம் தேவை. பிரச்சினைகள் மற்றும் விவகாரங்களில் தீர ஆலோசனைகளை செய்து பக்குவமான அணுகுமுறையை கையாள்வது அவசியம். பணவரத்து அதிகரிக்கும். காரிய தடங்கல்கள் ஏற்படலாம். மனதில் ஏதாவது ஒரு கவலை உண்டாகும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கக் கூடும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக நடக்கும். நயமாக பேசுவதன் மூலம் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக செயல்படுவது நல்லது.

மிருகசீரிஷம் - 1,2 பாதங்கள்: இந்த குரு பெயர்ச்சியின் மூலம் வேலை பார்க்கும் இடத்தில் பொருள்களை கவனமாக பாதுகாப்பாக வைப்பது நல்லது. குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே உறவு பலப்படும். பிள்ளைகள் மகிழ்ச்சியடைய தேவையானவற்றை செய்வீர்கள். மனதில் ஏதாவது கவலை இருந்து வரும். இஷ்ட தெய்வத்தை வழிபட கவலை குறையும். ஆன்மீக நாட்டத்தை அதிகரித்துக் கொள்வதன் மூலம் மன நிம்மதி ஏற்படும். உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கும். மனதுக்கு சந்தோஷமான காரியங்கள் நடக்கும்.

சிறப்பு பரிகாரம்: மல்லிகையை கட்டி அருகிலிருக்கும் அம்மன் கோவிலுக்கு அர்ப்பணித்து அர்ச்சனை செய்து வணங்கவும் | சொல்ல வேண்டிய மந்திரம்: “ஓம் ஸ்ரீமாத்ரே நமஹ” என்ற மந்திரத்தை தினமும் 9 முறை சொல்லவும் | அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9 | அதிர்ஷ்ட ஹோரைகள்: சந்திரன், செவ்வ்வாய், சுக்கிரன், குரு | அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, வடக்கு | அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், செவ்வாய், வியாழன், வெள்ளி

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x