Last Updated : 13 Apr, 2024 05:45 PM

 

Published : 13 Apr 2024 05:45 PM
Last Updated : 13 Apr 2024 05:45 PM

மகரம் ராசிக்கு தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் | குரோதி வருடம் எப்படி? - ஏப்.14, 2024 முதல் ஏப்.13, 2025 வரை

மகரம்: பிரச்சினையிலிருந்து பின்வாங்காமல் எதிர்த்து நிற்கும் நீங்கள், சமூக அவலங்களை தட்டிக் கேட்பவர்கள். குரோதி வருடம் சுக்ரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்லும் நேரத்தில் பிறப்பதால் சின்ன சின்ன சந்தர்ப்பங்களையும், வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்வீர்கள். உற்சாகமாக இருப்பீர்கள். சமையலறையை நவீனமாக்குவீர்கள். உறவினர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். பழைய நண்பர்களை சந்தித்து கடந்த கால சுகமான அனுபவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள்.

இந்த குரோதி வருடம் உங்களுக்கு 6-வது ராசியில் பிறப்பதால் சவால்களை சந்திக்க வேண்டி வரும். மறைமுக எதிர்ப்புகள் அதிகமாகும். பயணங்களும், செலவுகளும் உங்களை துரத்தும். சிலருக்கு வேற்றுமாநிலம் அல்லது வெளிநாட்டில் வேலைக் கிடைக்கும். பழைய கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள்.

30.04.2024 வரை குருபகவான் 4-ல் அமர்வதால் உங்களின் அடிப்படை நற்குணங்களும், நடத்தை கோலங்களும் மாறாமல் கொஞ்சம் பார்த்துக் கொள்ளுங்கள். ஓய்வெடுக்க முடியாதபடி அடுத்தடுத்த வேலைச்சுமையும் இருந்துக் கொண்டேயிருக்கும். வீடு, வாகனம் வாங்க வங்கிக் கடன் உதவி சற்று தாமதமாக கிடைக்கும். தாயாரின் உடல் நிலை பாதிக்கும். வாகன விபத்துகள் வந்து நீங்கும். சிலர் சொந்த ஊரிலிருந்து வேறு ஊருக்கு மாற வேண்டியது வரும்.

01.05.2024 முதல் வருடம் முடியும் வரை குரு உங்கள் ராசிக்கு 5-ல் நுழைவதால் ஓரளவு வசதி, வாய்ப்புகள் பெருகும். வருமானத்தை உயர்த்த அதிரடியாக சில திட்டங்கள் தீட்டுவீர்கள். வீட்டில் சந்தோஷம் பெருகும். கல்யாணம், காது குத்து, கிரகப் பிரவேசம் என வீடு களைகட்டும். குழந்தை பாக்கியம் உண்டாகும். பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறும். பூர்வீக சொத்துப் பிரச்சினை முடிவுக்கு வரும். தாயாருக்கு இருந்து வந்த நோய் குணமடையும்.

மனக்கசப்பால் ஒதுங்கியிருந்த நண்பர்கள், உறவினர்கள் இனி விரும்பி வந்து பேசத் தொடங்குவார்கள். குலதெய்வ கோயிலில் நேர்த்திக் கடனை செலுத்துவீர்கள். மகளுக்கு நீங்கள் எதிர்பார்த்தபடி நல்ல வரன் அமையும். திருமணத்தை சீரும், சிறப்புமாக நடத்துவீர்கள். மகனின் உயர்கல்வி, உத்தியோகம் சம்பந்தப்பட்ட முயற்சிகளும் சாதகமாக முடிவடையும். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.

இந்தாண்டு முழுக்க சனிபகவான் 2-ல் அமர்ந்து பாதச்சனியாக தொடர்வதால் வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து ஏமாற வேண்டாம். வெளிப்படையாக யாரையும் விமர்சிக்காதீர்கள். குடும்பத்திலும் அவ்வப்போது சச்சரவுகள் வரும். சிலர் உங்களை சீண்டிப் பார்ப்பார்கள். கொஞ்சம் பொறுமையாக இருங்கள். எதிர்மறை எண்ணங்களுடன் பேசுபவர்களின் நட்பை தவிர்ப்பது நல்லது.

கண் எரிச்சல், பார்வைக் கோளாறு, பல் வலி, காது வலி வந்துப் போகும். காலில் அடிப்பட வாய்ப்பிருக்கிறது. சிலர் கண்ணை பரிசோதித்து மூக்குக் கண்ணாடி அணிய வேண்டிய சூழ்நிலை வரும். நெருக்கடியான நேரத்தில் உங்களை பயன்படுத்தி விட்டு கறிவேப்பிலையாய் தூக்கி எறிந்துவிட்ட நண்பர்கள், உறவினர்களை நினைத்து ஆதங்கப்படுவீர்கள். யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம்.

எதிர்தரப்பு வாய்தாவால் வழக்குத் தள்ளிப் போகும். அரசு காரியங்கள் தாமதமாகி முடியும். உயர்கல்வி, உத்தியோகத்தின் பொருட்டு பிள்ளைகளை பிரிய வேண்டிய சூழ்நிலை உருவாகும். மகனின் நட்பு வட்டத்தை கண்காணிப்பது நல்லது. கூடாப்பழக்கம் தொற்ற வாய்ப்பிருக்கிறது. நீங்கள் யதார்த்தமாகப் பேசுவதைக் கூட சிலர் வேறு அர்த்தத்தில் புரிந்துக் கொள்வார்கள். பணப்பற்றாக்குறை அதிகமாகும். மறதியால் விலை உயர்ந்தப் பொருட்களை இழக்க நேரிடும். அவ்வப்போது சோர்வு, களைப்பு வந்துச் செல்லும். பூர்வீக சொத்தை சரியாகப் பராமரிக்க முடியவில்லையேயென வருத்தப்படுவீர்கள். பேருந்துகளில் செல்லும் போது படிக்கட்டுகளில் நின்று பயணிக்க வேண்டாம்.

ராகு 3-ம் வீட்டிலேயே இந்த வருடம் முழுக்க முகாமிட்டிருப்பதால் தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். நீங்கள் உழைத்த உழைப்பு, சிந்திய வியர்வைக்கெல்லாம் நல்ல பலன் கிடைக்கும். பழைய பிரச்சினைகளை புதிய கோணத்தில் அணுகி வெற்றி காண்பீர்கள். பங்குச் சந்தை மூலமாக பணம் வரும். தடைப்பட்ட காரியங்கள் எல்லாம் நல்ல விதத்தில் முடிவடையும். மாற்று மதம், மொழி, மாநிலத்தவர்களால் உதவிகள் உண்டு. இளைய சகோதர வகையில் ஆதரவுப் பெருகும். மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். பழைய இனிய அனுபவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். வெளியூர் பயணங்களால் உற்சாகமடைவீர்கள்.

கேது 9-ம் இடத்திலேயே நீடிக்கயிருப்பதால் தந்தையாருக்கு சின்ன சின்ன அறுவை சிகிச்சை, மூச்சுத் திணறல், வாயுக் கோளாறால் நெஞ்சு வலி வந்துப் போகும். அவருடன் மனவருத்தங்களும் வரக்கூடும். பிதுர்வழி சொத்துப் பிரச்சினை தலை தூக்கும். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை இருந்துக் கொண்டேயிருக்கும். திடீரென்று அறிமுகமாகுபவரை நம்பி வீட்டுக்கு அழைத்து வர வேண்டாம். சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தைப் புரிந்துக் கொள்வீர்கள்.

வியாபாரத்தில் சில நுணுக்கங்களைக் கற்றுக்கொள் வீர்கள். சந்தை நிலவரத்தை அவ்வப் போது உன்னிப்பாக கவனித்து அதற்கேற்ப செயல்படப்பாருங்கள். வேலையாட்களின் குறை, நிறைகளை சுட்டிக் காட்டி அன்பாக திருத்துங்கள். தொலைக்காட்சி, வானொலி விளம்பரங்களின் மூலம் உங்கள் தொழிலை விரிவுபடுத்துவீர்கள். தரமானப் பொருட்களை விற்பனை செய்வதன் மூலமாக புது வாடிக்கையாளர்கள் வருவார்கள். முக்கிய பிரமுகர்களின் அறிமுகத்தால் பெரிய நிறுவனத்தின் ஒப்பந்தம் கிடைக்கும்.

தெரியாத தொழிலில் இறங்க வேண்டாம். மூலிகை, கட்டிட உதிரி பாகங்கள், துணி, புரோக்கரேஜ் வகைகளால் லாபமடைவீர்கள். பங்குதாரர்களுடன் வளைந்துப் போகவும். ஐப்பசி, தை, பங்குனி மாதங்களில் பழைய பாக்கிகள் வசூலாகும்.

உத்தியோகத்தில் உண்மையாக இருப்பது மட்டும் போதாது, உயரதிகாரிகளுக்கு தகுந்தாற்போலும் பேசும் வித்தையையும் கற்றுக் கொள்ள வேண்டுமென்ற முடிவுக்கு வருவீர்கள். உங்களின் கடின உழைப்பை மூத்த அதிகாரிகள் புரிந்துக் கொள்வார்கள். சக ஊழியர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். இழந்த சலுகைகளையும், மதிப்பு, மரியாதையையும் மீண்டும் பெறுவீர்கள். உங்களுக்கு எதிராக செயல்பட்ட அதிகாரி வேறுயிடத்துக்கு மாற்றப்படுவார். வருடத்தின் பிற்பகுதியில் தள்ளிப் போன பதவி உயர்வு, சம்பள உயர்வு தடையில்லாமல் கிடைக்கும்.

இந்த குரோதி வருடம் அவ்வப்போது உங்களை கோபப்படுத்தி முணுமுணுக்க வைத்தாலும் அனுபவ அறிவால் முன்னேற வைக்கும்.

பரிகாரம்: கோயம்புத்தூர் மாவட்டம், கொழுமம் எனும் ஊரில் வீற்றிருக்கும் ஸ்ரீகல்யாண வரதராஜரை சென்று வணங்குங்கள். புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள். ஆடை, ஆபரணங்கள் சேரும்.

-வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x