புதுடெல்லி: ஈரான் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சியுடன் மீண்டும் தொலைபேசியில் பேசியதாகவும், இரு தரப்பு உறவு குறித்து விவாதித்ததாகவும் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஈரான் மீது கடந்த பிப்.28-ம் தேதி தாக்குதலை நடத்தின. இதையடுத்து, இஸ்ரேல் மீதும், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க நிலைகள் மீதும் ஈரான் தாக்குதலை தொடங்கியது. இரு தரப்புக்கும் இடையேயான மோதல் 14-வது நாளாக நீடித்து வருகிறது.
இந்தத் தொடர் மோதல் காரணமாகவும், ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டதன் காரணமாகவும் இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றன.
ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்திய எண்ணெய் கப்பல்கள் பாதுகாப்பாக வருவதை உறுதிப்படுத்துவது தொடர்பாகவும், இந்தியாவின் எரிபொருள் பாதுகாப்பு தொடர்பாகவும் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், ஈரான் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சியுடன் பேசி வருகிறார்.
இது தொடர்பாக டெல்லியில் நேற்று (மார்ச் 12) செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால், “வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரும், ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சியும் சமீப நாட்களில் மூன்று முறை தொலைபேசி மூலம் பேசியுள்ளனர்.
கடைசியாக நடந்த உரையாடலில் கப்பல் போக்குவரத்தின் பாதுகாப்பு மற்றும் இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு தொடர்பான விவகாரங்கள் விவாதிக்கப்பட்டன. இதற்கு மேல் தற்போது நான் ஏதேனும் கூறினால், அது பொருத்தமானதாக இருக்காது” என்று தெரிவித்தார்.
மேலும் அவர், “ஈரானில் தற்போது சுமார் 9,000 இந்தியர்கள் உள்ளனர். இவர்களில் பலர், ஈரானை விட்டு வெளியேறி இந்தியாவுக்கு திரும்பியுள்ளனர். தெஹ்ரான் நகரில் இருந்த சில இந்தியர்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக நாட்டின் பாதுகாப்பான பிற நகரங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அங்கிருந்து அஜர்பைஜான், அர்மீனியா வழியாக வெளியேற விரும்பும் இந்தியர்களுக்கு விசா மற்றும் நில எல்லையை கடப்பதற்கான உதவிகள் வழங்கப்படுகின்றன” என்று தெரிவித்தார்.
இந்நிலையில், ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சியுடன் நேற்றிரவு மீணடும் தொலைபேசியில் பேசினேன். இரு தரப்பு உறவுகள் குறித்தும் பிரிக்ஸ் தொடர்பாகவும் நாங்கள் விவாதித்தோம்’ என தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானுடன் நேற்று பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடினார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், ‘பிராந்தியத்தில் நிலவும் தீவிரமான சூழல் குறித்து விவாதிக்க ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானுடன் உரையாடினேன். பதற்றங்கள் அதிகரித்து வருவது குறித்தும், பொது மக்களின் உயிர்கள் பலியாவது குறித்தும், பொது கட்டமைப்புகளுக்கு ஏற்படும் சேதங்கள் குறித்தும் ஆழ்ந்த கவலையைத் தெரிவித்தேன்.
இந்தியக் குடிமக்களின் பாதுகாப்பு, நலன், பொருட்கள் மற்றும் எரிசக்தியின் தடையற்ற போக்குவரத்துக்கான அவசியம் ஆகியவை இந்தியாவின் முதன்மையான முன்னுரிமைகளாகத் தொடர்ந்து திகழ்கின்றன. அமைதி மற்றும் நிலைத்தன்மைக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியதுடன், பேச்சுவார்த்தை மற்றும் தூதரக அணுகுமுறைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தினேன்’ என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.