நியூயார்க்: எழுத்தாளர், நாவலாசிரியர் சல்மான் ருஷ்டி மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதலின் விளைவாக அவர் ஒரு கண்ணில் பார்வையை இழக்கக் கூடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அறுவை சிகிச்சைகளுக்குப் பின்னர் தற்போது வென்டிலேட்டர் எனப்படும் உயிர்காக்கும் கருவி பொருத்தப்பட்டுமருத்துவ கண்காணிப்பில் இருக்கிறார்.
சல்மான் ருஷ்டியின் புத்தக முகவரான ஆண்ட்ரூ வில்லி இது தொடர்பாக ஒரு மின்னஞ்சலைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர், "இது நல்ல செய்தி அல்ல. சல்மான் ஒரு கண் பார்வையை இழக்கும் சூழலில் உள்ளார். அவர் கை நரம்பு துண்டிக்கப்பட்டுள்ளது. அவருடைய ஈரல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.
சல்மான் ருஷ்டி மீதான தாக்குதலுக்கு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் உள்ள முற்போக்கு எழுத்தாளர்கள் பலரும் அதிர்ச்சியும், கண்டனமும் தெரிவித்துள்ளனர்.
யார் இந்த சல்மான் ருஷ்டி? இந்தியாவின் மும்பை நகரில் பிறந்தவர் அகமது சல்மான் ருஷ்டி. பின்னாளில் அவரது குடும்பம் பிரிட்டனுக்கு புலம் பெயர்ந்தது. ‘மிட்நைட்ஸ் சில்ட்ரன்’ படைப்புக்காக புக்கர் பரிசை வென்றவர். 1988-ல் வெளிவந்த இவரது ‘தி சாட்டனிக் வெர்சஸ்’ படைப்பு, உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
உலகம் முழுவதுமே இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் நாடுகளில் இந்தப் புத்தகம் இன்றளவும் தடை செய்யப்பட்டுள்ளது. இஸ்லாம் மதத்தை, முஸ்லிம்களின் இறைத்தூதரை, இறை நம்பிக்கையை இந்தப் புத்தகம் அவமதித்துவிட்டது என்பதே சல்மான் ருஷ்டி மீதான குற்றச்சாட்டு.
தலைக்கு விலை நிர்ணயித்துள்ள ஈரான்: இந்தப் புத்தகத்திற்கு தடை விதிக்கப்பட்ட பின்னர் ஈரானின் அப்போதைய தலைவர் அயோதுல்லா ருஹல்லா கொமேனி, சல்மான் ருஷ்டி மற்றும் அவரின் தி சாட்டனிக் வெர்சஸ் புத்தகத்தை பிரசுரம் செய்ய உதவிய அனைவரையும் படுகொலை செய்ய வேண்டும் என்று பகிரங்கமாக அறிவித்தார். இந்த அறிவிப்புக்குப் பின்னர் சல்மான் ருஷ்டி 10 ஆண்டுகளுக்கும் மேல் தலைமறைவாகவே வாழ்ந்தார். 1991ல் இந்தப் புத்தகத்தை மொழிபெயர்த்த ஜப்பானிய எழுத்தாளர் ஹிட்டோஷி இகராஷி படுகொலை செய்யப்பட்டார். ஈரானின் பல்வேறு மத அமைப்புகளும் இன்றளவும் சல்மான் ருஷ்டியின் தலைக்கு பெரும் விலை நிர்ணயித்துள்ளன. கடைசியாக ஈரான் 2019ல் சல்மானுக்கு எதிரான தடை உத்தரவை புதுப்பித்தது. அதோடு சல்மான மீதான தடையும் அவரது தலைக்கான விலையும் நிரந்தரமானது என்று கூறியது. தற்போதைய நிலவரப்படி அவரது தலைக்கு 6 லட்சம் அமெரிக்க டாலர் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சல்மான் ருஷ்டி கடந்த 2016 ஆம் ஆண்டு அமெரிக்க குடியுரிமை பெற்றார். அன்றிலிருந்தே அவர் நியூயார்க் நகரில் தான் வசித்து வருகிறார். இந்நிலையில் நியூயார்க் நகரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அவர் மீது தாக்குதல் நடந்துள்ளது. 75 வயதான சல்மான் "Victory City" விக்டரி சிட்டி என்ற புத்தகத்தை எழுத்தியுள்ளார். அது 2023 பிப்ரவரியில் வெளியாகும் எனத் தெரிகிறது. இந்நிலையில் தான் அவர் மீது இந்த கொலைவெறி தாக்குதல் நடந்துள்ளது.
தாக்குதல் நடத்திய இளைஞர் கைது: சம்பவத்தை நேரில் பார்த்த நபர் ஒருவர் ஊடகங்களுக்கு அளித்தப் பேட்டியில், சல்மான் ருஷ்டி மேடையில் இருந்தார். திடீரென இளைஞர் ஒருவர் மேடையில் ஏறினார். அவர் சல்மான் மீது பாய்ந்தார். முதலில் கீழிருந்து பார்க்கும்போது சல்மானை அவர் கைகளால் அடிப்பது போலவே தெரிந்தது. அப்புறம் தான் அந்த இளைஞர் சம்மானின் நெஞ்சிலும், கழுத்திலும் கத்தியால் குத்தியதை உணர்ந்தோம். நாங்கள் அதிர்ச்சியில் இருந்தோம். அதற்குள் போலீஸார் அந்த நபரை சுற்றிவளைத்தனர். கூட்டத்தில் இருந்த ஒரு மருத்துவர் சல்மானுக்கு முதலுதவி அளித்தார். பின்னர் சல்மான ஏர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார் என்றார்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர் நியூ ஜெர்சியின் ஃபேர்வியூ பகுதியில் வசிக்கும் ஹாதி மட்டர் என்ற 24 வயது இளைஞர் என்பது தெரியவந்துள்ளது. அவரை போலீஸார் கைது செய்துள்ளனர். தாக்குதலுக்கான காரணம் குறித்து விசாரணைகள் நடந்து வருகின்றன.
முக்கிய செய்திகள்
தமிழகம்
14 mins ago
தமிழகம்
40 mins ago
தமிழகம்
49 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
வணிகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago