கடலடிப்படுகையில் ஏற்படும் பூகம்பத் தரவைக் கொண்டு எத்தனை வேகமாக இந்தியப் பெருங்கடல் உஷ்ணமடைந்து வருகிறது என்ற தரவை விஞ்ஞானிகள் புதிய ஆய்வின்படி கண்டுப்பிடித்துள்ளனர்.
அதாவது கடலடிப்படுகையில் ஏற்படும் பூகம்ப ஒலியைக் கொண்டு கடல் நீரின் உஷ்ணத்தைக் கண்டுப்பிடிக்க குறைந்த செலவிலான ஆய்வு முறை என்கின்றனர் இந்த விஞ்ஞானிகள்.
இந்த ஆய்வில் கலிபோர்னியா தொழில்நுட்ப கழக ஆய்வாளர்கள் ஈடுபட்டனர். கரியமிலவாயு உள்ளிட்ட பசுமையில்ல வாயுக்கள் 95% கூடுதல் உஷ்ணத்தை பூமியில் தேக்குகின்றன. இது கடல் நீரை எவ்வளவு வேகமாக உஷ்ணப்படுத்துகிறது என்பதைக் கண்டுப்பிடிக்கும் ஆய்வுதான் இது.
தற்போதைய இந்த ஆய்வில் வெளியான தகவல்கள் சயன்ஸ் என்ற இதழில் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே உள்ள பூகம்ப கணக்கீட்டுக் கருவி, மற்றும் இதுவரையிலான பூகம்பங்களின் நிகழ்வு வரலாற்றுத் தரவுகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி கடல்கள் உஷ்னமடைவதை கண்டுப்பிடிக்கின்றனர். இதுவரை எட்ட முடியாத கடலடி ஆழங்களில் கூட நீர் எவ்வளவு உஷ்ணமடைகின்றன என்பதை கண்டுப்பிடிக்க முடிந்துள்ளது.
கிழக்கு இந்தியப் பெருங்கடலில் 3000 கிமீ நீள பிரிவை ஆய்வு செய்தனர். இதில் 2005 மற்றும் 2016-ம் ஆண்டுகளுக்கு இடையே கடல் நீர் வெப்பமடைதல் மாற்றங்கள் தெரியவந்தன. முந்தைய கணிப்புகளை விட பெரிய அளவில் கடல்நீர் உஷ்ணமடைந்துள்ளது. நாம் நம்புவதை விட 70% அதிகமாக கடல்நீர் உஷ்ணமடைந்து வருகிறது.
ஆனால் இதை வைத்து உடனடியாக எந்த ஒரு முடிவுக்கும் வர வேண்டாம், முடிவுகளை வெளியிட மேலும் தரவுகள் தேவைப்படும் என்று இந்த ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
கடலடிப்படுகையில் ஏற்படும் பூகம்பத்தின் ஒலி பலவீனமடையாமல் நீண்ட தூரம் பயணிக்கக் கூடியவை என்று இந்த ஆய்வில் ஈடுபட்ட விஞ்ஞானி ஜோர்ன் கேலிஸ் தெரிவித்தார்.
கடலுக்கு அடியில் பூகம்பம் ஏற்படும் போது அதன் ஆற்றல் பூமியின் ஊடாகச் செல்கிறது. அதேவேளையில் இந்த ஆற்றலின் ஒரு பகுதி ஒலியாக நீரில் மாற்றமடைகிறது. ஒலி அலைகள் பூகம்ப ஆற்றல் அலைகளை விட மெதுவாகவே பயணிக்கும். பூகம்ப கண்காணிப்பு மையத்துக்கு முதலில் ஆற்றல் அலைகள் வந்து சேரும் பிறகு ஒலி அலைகள் வரும். அதாவது மின்னல் வந்த பிறகு இடி இடிக்கிறதே அப்படி.
கடல் நீர் வெப்பமடைவது அதிகரிக்கும் போது தண்ணீரில் ஒலியின் வேகம் அதிகரிக்கும். எனவே ஒரு குறிப்பிட்ட தூரத்தை பூகம்ப ஒலி கடக்கும் வேகத்தைக் கொண்டு கடல் நீர் உஷ்ணமடைவதைக் கணக்கிட முடியும். எனவே ஒரே இடத்தில் அடிக்கடி ஏற்படும் பூகம்பம் பற்றிய ஒலிப்பயண வேகத்தரவுகள் கடல் நீர் எத்தனை வேகமாக வெப்பமடைந்து வருகிறது என்பதைத் தெரிவிக்கிறது.
உதாரணமாக சுமத்ராவில் கடலுக்கடையில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் பூகம்ப அலை, ஒலி அலை எப்படி மத்திய இந்தியப் பெருங்கடலை அடைந்தது என்பதை வைத்து கடல் வெப்பமடைதல் கணக்கிடப்பட்டுள்ளது.
சுமத்ராவிலிருந்து இந்தியப் பெருங்கடல் மத்திய பகுதிக்கு பூகம்ப ஒலி அலை அரைமணி நேரத்தில் வந்துள்ளது. இதை வைத்து அப்போதைய கடல் வெப்ப அளவை கணக்கிட்டு அதன் பிறகு அதே பகுதியில் ஏற்பட்ட மற்ற பூகம்பங்களின் ஒலி அலைகளையும் ஆராய்ந்து இப்போது கடல் வெப்ப அளவு எப்படி மாற்றமடைந்துள்ளது என்று கணக்கிடுகிட்டுள்ளனர்.
இதன் மூலம் இந்தியப் பெருங்கடல் பெரிய அளவில் வெப்பமடைந்து வருவது ஆய்வில் தெரியவந்துள்ளது.
கடல் வெப்பமடைதல் விளைவுகள்:
ஜனவரி, 2020-ல் வெளிவந்த ஆய்வின் தகவல்படி, கடந்த 25 ஆண்டுகளாக கடல்கள் 3.6 பில்லியன் மடங்கு ஹிரோஷிமா அணுகுண்டு வெடிப்பு அளவுக்கு வெப்பத்தை உறிஞ்சித் தேக்கி வைத்துள்ளன. இது கடல் வெப்ப அலைகளை உருவாக்கும். இதனால் பவழப்பாறைகள், மீன்கள், கடல் வாழ் உயிரினங்கள் கொல்லப்படும். மிகப்பெரிய புயல்களை உருவாக்கும். பொதுவாக கடலில் உருவாகும் புயல்கள் கரையைக் கடக்கும் போது கடல்நீர் குளிர்த்தன்மையினால் வேகம் குறையும். கடல் நீர் உஷ்ணமடைந்தால் பெரிய புயல்கள் தாக்கும்.
மேலும் புயல்கள் என்ன செய்யுமெனில் கடல் வெப்பத்தை உறிஞ்சி வளிமண்டலத்துக்கு ஈரப்பதமாக அனுப்பும், இதனால்தான் ஹார்வி, புளோரன்ஸ் போன்ற பெரிய சூறாவளியின் போது அதி தீவிர கனமழை பெய்தது. மேலும் வலுவான புயல்களையும் நீண்ட நாட்கள் அடிக்கும் புயல்களையும் உருவாக்கும்.
மானுட வாழ்வு கால எல்லைக்குள் இந்த மாற்றங்களை மாற்ற முடியாது என்றே விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இதனால்தான் எல் நினோ விளைவுகள் பெரிய அளவில் வறட்சியையும் பஞ்சத்தையும் அல்லது பெரு வெள்ளங்களையும் உருவாக்குகிறது. இந்தியப் பெருங்கடலின் இத்தகைய மாற்றங்கள்தான் ஆஸ்திரேலியாவின் அடக்க முடியாத காட்டுத்தீயிற்குக் காரணமாகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 min ago
இணைப்பிதழ்கள்
5 hours ago
சினிமா
17 mins ago
இணைப்பிதழ்கள்
5 hours ago
தமிழகம்
11 mins ago
சினிமா
22 mins ago
சினிமா
25 mins ago
வலைஞர் பக்கம்
29 mins ago
சினிமா
34 mins ago
சினிமா
39 mins ago
இந்தியா
47 mins ago
க்ரைம்
44 mins ago