மா சே துங் தேசியக் கட்சியில் இருந்தார். அது அரசியல் வார இதழ் ஒன்றை வெளியிட்டது. அதன் ஆசிரியராக மா சே துங் செயல் பட்டார். அதில் கம்யூனிஸ்ட் கட்சியின் கீழ் விவசாயிகளை அணிதிரட்டுவது சுலபம் என்று அவர் எழுத, அந்தக் கட்டுரை அச்சேறவில்லை. இத்தனைக்கும் தேசியக் கட்சியும், சீன கம்யூனிஸ்ட் கட்சியும் கூட்டாகச் செயல்பட்ட காலம்தான் அது. மா சே துங் கொஞ்சம் ஏமாற்றம் அடைந்தார்.
பின்னர் சரித்திர முத்திரை பெற்ற `வடக்குப் படையெடுப்பு’ தொடங்கியது. பெய்ஜிங் அரசுக்கு எதிராக தேசியக் கட்சித் தலைவர் சியாங் நடத்திய அந்தப் படையெடுப்பில் கம்யூனிஸ்ட் கட்சியினரும் கலந்து கொண்டனர்.
ஆனால் நாளடைவில் கம்யூனிஸ்ட் கட்சியை சியாங் வெறுக்கத் தொடங்கினார். “இனி கம்யூனிஸ்ட் இயக்கத்தோடு நம் கட்சியைச் சேர்ந்த யார் தொடர்பு வைத்துக் கொண்டாலும் அவருக்கு மரண தண்டனைதான்’’ என்றார்.
ஆனால் மா சே துங் விவசாயிகள் புரட்சிக் குழுவின் தலைவராக உயர்ந்திருந்தார். கம்யூனிஸ்ட்டுகளின் பேரபிமானத்தை பெறத் தொடங்கி இருந்தார். எனவே மா சே துங்கை பலவிதங்களில் அலைக்கழித்தது சியாங் அரசு. அவர் நிலத்தைக் கைப்பற்றியது. அவர் மனைவி சுட்டுக் கொல்லப்பட்டார். மா சே துங்கை உயிருடனோ, பிணமாகவோ பிடித்துக் கொடுத்தால் வெகுமதி என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.
தங்கள் மீதான ராட்சதத்தனமான அடக்குமுறையைத் தாங்க முடியாமல் கம்யூனிஸ்ட்டுகள் தப்பிச் சென்றார்கள். அது ஒரு தோல்வியின் தொடக்கம்தான். ஆனால் முடிவு வெற்றிகரமாக இருந்தது. அதை `நீண்ட நடைப் பயணம்’ என்கிறார்கள்.
இந்தப் பயணத்தைத் தொடங்கியபோது அதில் ஒரு லட்சம் கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் இருந்தார்கள். அவர்கள் நடந்த தூரம் ஆறாயிரம் மைல்கள். ராணுவத்தினரிடம் அகப்படாமல் செல்ல வேண்டிய கட்டாயம். வழியில் 18 மலைத் தொடர்களை கடக்க வேண்டி இருந்தது.
செம்படை என்று தங்களைக் குறிப்பிட்டுக் கொண்ட இவர்கள் போகும் வழியில் எல்லாம் அரசுக்கு எதிரான வீதி நாடகங்களை நடத்தினார்கள். நிலப்பிரபுக்களின் நிலம் பறிமுதல் செய்யப்பட்டு ஏழை விவசாயிகளுக்கு அளிக்கப்பட வேண்டுமென்றால், பேச்சுரிமை வேண்டுமென்றால் கம்யூனிஸ ஆட்சிதான் மலர வேண்டும் என்று பிரச்சாரம் செய்தார்கள்.
தொடக்கத்தில் கியாங்க்ஸ்லி மாகாணத்தை தங்கள் வசம் கொண்டு வந் தார்கள். போகப் போக பல மாகாணங்கள் அவர்கள் வசம் வந்து சேர்ந்தன.
இந்த நீண்ட பயணத்தில் பெரும் புகழ் பெற்றவர்கள் நால்வர். மா சே துங், சூ என் லாய், சூ தேக் மற்றும் டெங் ஜியோபிங்.
சியாங் ஆட்சியின்மீது அதிருப்தி பரவத் தொடங்கியது. இந்தச் சூழலை ஜப்பான் பயன்படுத்திக் கொள்ளத் தொடங்கியது. மெல்லமஞ்சூரியாவின் பெரும் பகுதியை தன் வசம் கொண்டு வந்தது. ஐ.நா.வின் எச்சரிக்கை வந்ததும், ஐ.நா.சபையிலிருந்தே விலகியது ஜப்பான். பின்னர் முழு மஞ்சூரியாவையும் கைப்பற்றியது. அடுத்து அதன் பார்வை சீனாவின்மீது விழுந்தது.
தங்கள் பகைமையைக் குறைந்த பட்சம் ஒத்திப் போட்டால்தான் ஜப்பானை எதிர்க்க முடியும் என்பதை சியாங் அரசும், சீன கம்யூனிஸ்ட்களும் உணர்ந்து கொண்டார்கள். ஒரே அணியில் நின்று ஜப்பானை எதிர்த்தார்கள். (என்றாலும் அவரவர் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகள் அவரவரிடம்தான் இருந்தன).
1945ல் ஜப்பான் - சீனா போர் முடிவடைந்தபோது இரண்டு கோடி சீனர்கள் போரில் இறந்திருந்தார்கள். ஷாங்காய், நான்ஜிங் ஆகிய பகுதிகள் ஜப்பானின் வசம் சென்றிருந்தன.
இரண்டாம் உலகப்போரின்போது சீனாவின் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா அதிகமாகவே தலையிட்டது. தேசியக் கட்சியான கோமிங்டாங்கிற்கு ராணுவ உதவி அளித்தது.
அமெரிக்காவும், பிரிட்டனும் சீனாவுடன் புதிய உடன்படிக்கையில் கையெழுத்திட்டன. இதன் மூலம் பழைய ஒப்பந்தங்களில் சீனாவுக்கு இழைக்கப்பட்டிருந்த அநீதிகள் பெரும்பாலும் முடிவுக்கு வந்தன.
ஆனால் சீனாவில் கோமிங்டாங்கும், கம்யூனிஸ்ட்டுகள் எதிர்த்து நின்றதைப் பார்த்தபோது சீனாவிற்குக் கவலை ஏற்பட்டது. இதையே சாக்காக வைத்துக் கொண்டு சோவியத் யூனியன் சீனாவில் கால் ஊன்றி விடக் கூடாதே!
அந்தக் கவலை நிஜமானது. 1949 ஜனவரியில் பெய்ஜிங்கை கம்யூனிஸ்ட்டுகள் கைப்பற்றினார்கள். சீனாவின் முக்கிய நகரங்கள் கம்யூனிஸ்ட்டுகள் வசம் வந்தன.
சியாங்கும், கோமிங்டாங் ராணுவத்தினரும் இருபது லட்சம் அகதிகளும் தைவான் தீவுக்கு தப்பி ஓடினார்கள். தைவானில் உள்ள தைபேதான் சீனக் குடியரசின் புதிய தலைநகர் என்று சியாங் அறிவித்தார்.
பிறநாடுகளுக்குக் குழப்பம். எந்த அரசை அங்கீகரிப்பது? அவர்கள் கோமிங்டாங் அரசு சீனக் குடியரசு என்றும், கம்யூனிஸ்ட் அரசை சீன மக்கள் குடியரசு என்று அறிவிக்கத் தொடங்கினார்கள்.
ஐ.நா.வைப் பொறுத்தவரை சீனாவில் கம்யூனிஸ அரசு என்பது ஓர் அநியாய ஆக்ரமிப்பு. எனவே அங்கீகாரம் கிடையாது.
ஆனால் போகப்போக பரந்து பட்ட சீனாவின் மக்களில் பலரும் கம்யூனிஸ ஆட்சியை ஏற்றுக் கொள்ளத் தொடங்கினார்கள்.
அதே சமயம் தைவானில் ஒரு மாற்றம். கிட்டத்தட்ட சர்வாதிகாரியாக இருந்த சியாங்கிற்குப் பிறகு வந்தவர்கள் அங்கே ஜனநாயகத்தைக் கொண்டு வந்தனர். கோமிங்டாங் கட்சி அல்லாத ஒருவர் தைவானுக்குத் தலைமை ஏற்ற அதிசயமும் நடந்தது.
ஐ.நா.வின் அடிப்படை உறுப்பினர்களில் ஒன்றாக விளங்கியது கோமிங்டாங் அரசு. ஆனால் 1971-ல் இந்த உறுப்பினர் பதவியை கம்யூனிஸ அரசுக்கு அளித்து விட்டது ஐ.நா.சபை.
(உலகம் உருளும்)
முக்கிய செய்திகள்
தமிழகம்
22 mins ago
தமிழகம்
31 mins ago
விளையாட்டு
26 mins ago
கல்வி
46 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
வாழ்வியல்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
சினிமா
2 hours ago