வங்கதேசம் தலைநகர் தாக்காவில் நேற்று நள்ளிரவு அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 69 பேர் உடல் கருகி பலியானார்கள். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அடுக்குமாடிக் குடியிருப்பில் பல வீடுகளை வேதிப்பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருக்கும் சேமிப்புக் கிட்டங்கியாக பயன்படுத்தி வந்த நிலையில், அதில் ஏற்பட்ட தீ விபத்துதான் குடியிருப்பு முழுவதும் பரவியுள்ளதாக முதல்கட்டத் தகவல் தெரிவிக்கிறது.
பழைய தாக்கா நகரில் உள்ள சவுக்பஜார் பகுதியில் ஒரு மசூதிக்குப் பின்புறம் ஹாஜி வாஹத் 4 அடுக்கு கொண்ட குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் 3-வது மற்றும் 4-வது மாடியில் உள்ள பல வீடுகளை வேதிப்பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருக்கும் சேமிப்புக் கிடங்காகப் பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில், அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் இருந்து கேஸ் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அந்த தீ மளமளவென அடுத்தடுத்த வீடுகளுக்கும், பிளாஸ்டிக் பொருட்கள், வேதிப்பொருட்கள் வைத்திருக்கும் சேமிப்புக் கிடங்கிற்கும் பரவியது.
பிளாஸ்டிக் பொருட்கள், வேதிப்பொருட்கள் இருந்த வீட்டில் தீ பரவியவுடன் தீ கொழுந்துவிட்டு எரியத் தொடங்கி அடுத்தடுத்த வீடுகளுக்கும் பரவியது. இதில் அந்தக் குடியருப்பில் வசித்து வந்த மக்கள் தீயில் சிக்கிக்கொண்டு வெளியே வரமுடியாமல் தவித்தனர்.
மேலும், தீ விபத்து நடந்த இடம் மிகவும் குறுகலான சாலையைக் கொண்டிருந்தது. அப்போது, போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டதால், மக்கள் அங்கிருந்து தப்பிக்க முடியாமல், சிக்கிக்கொண்டு பலர் தீயில் கருகினார்கள். மேலும், சாலையில் சென்றவர்கள், குடியிருப்புக்கு அருகே இருக்கும் ஹோட்டலில் சாப்பிட்டவர்கள் என பலரும் தீ விபத்துக்கு இரையாகினர்.
இது குறித்து தீ தடுப்பு கட்டுப்பாட்டு அதிகாரி மஹ்புஸ் ரஹ்மான் கூறுகையில், " தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். வேதிப்பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள் இருந்ததால், தீயை அணைப்பதில் பெரும் சிரமம் இருந்தது.
இந்த தீ விபத்தில் இதுவரை 69 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. பலரின் உடல் இன்னும் வீட்டுக்குள் இருப்பதால், பலியானோர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என கருதுகிறோம். காயமடைந்த 50-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு தாகா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, சலிமுல்லா மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீ விபத்து ஏற்பட்டவுடன் பலர் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள மாடியில் இருந்து குதித்தபோது ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து தீயை அணைக்கும் பணியும், மீட்புப் பணியும் நடந்து வருகிறது" எனத் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
13 mins ago
விளையாட்டு
39 mins ago
க்ரைம்
43 mins ago
சுற்றுச்சூழல்
1 hour ago
க்ரைம்
1 hour ago
இந்தியா
1 hour ago
சினிமா
2 hours ago
கருத்துப் பேழை
2 hours ago
சுற்றுலா
3 hours ago
சினிமா
3 hours ago
இந்தியா
3 hours ago
தமிழகம்
3 hours ago