தமிழகத்தில் ஓர் அங்குல வனப் பகுதியைக் கூட ஆக்கிரமிக்க அனுமதிக்கக் கூடாது என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு அறிவுறுத்தி உள்ளது.
நீலகிரி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘நீலகிரி மாவட்டம் நடுவட்டம் கிராமத்தில் பெண் மருத்துவர் ஒருவர், மலைப் பகுதி கட்டிடங்களுக்கான சட்ட விதிகளை மீறி ஒரு ரிசார்ட்டை அனுமதியின்றி கட்டிவருகிறார்.
பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியில் இதுபோன்ற ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருவதால், மரங்கள் வெட்டப்பட்டு இயற்கைச் சூழல் பாதிக்கப்படுகிறது. இதனால் பறவைகள் இடம்பெயர்ந்து செல்கின்றன. நீரோடைகள் தடுக்கப்படுவதால், நிலச்சரிவுகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
கட்டுமானப் பொருட்களை வனப் பகுதியில் குவித்தும், வனப் பாதையை விரிவுபடுத்தியும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருவது குறித்து வனத் துறை அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுசென்றும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, வனப் பகுதியில் அத்துமீறி கட்டப்பட்டு வரும் கட்டுமானங்களுக்கு தடை விதிக்க வேண்டும். மின் இணைப்பைத் துண்டிக்க வேண்டும்.
ஆக்கிரமிப்பில் ஈடுபட்டவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். நடுவட்டம் பகுதியில் உள்ள வனப் பகுதியை அளவீடு செய்து, எல்லையை வரையறை செய்ய வேண்டும்” என்று மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, தமிழகத்தில் ஓர் அங்குல வனப் பகுதியைக் கூட ஆக்கிரமிக்க அனுமதிக்கக் கூடாது என தமிழக அரசுக்கு அறிவுறுத்தியது. இது தொடர்பாக நீலகிரி ஆட்சியர், மாவட்ட வனத் துறை அதிகாரி ஆகியோர் உடனடியாக நடுவட்டம் கிராமத்தில் ஆய்வு செய்து, ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வனப் பகுதி நிலத்தை மீட்க வேண்டும்.
மேலும், இதுகுறித்து வனத் துறை அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வனப்பகுதியில் இருந்து தனியார் ரிசார்ட்டுக்கு தண்ணீர் எடுப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு விசாரணையை 3 வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
7 mins ago
சினிமா
17 mins ago
தமிழகம்
33 mins ago
கருத்துப் பேழை
41 mins ago
இந்தியா
47 mins ago
விளையாட்டு
22 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
சினிமா
2 hours ago
விளையாட்டு
2 hours ago
தமிழகம்
53 mins ago