அண்மையில் நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் மூன்று மாநிலங்களில் ஆளும்கட்சிகளே வெற்றி வாகைசூடி உள்ளன.
தமிழ்நாடு, புதுச்சேரி, மேற்குவங்கம், கேரளா, அசாம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. கரோனா பெருந்தொற்று பரவலுக்கு இடையே நடத்தப்பட்ட தேர்தல் என்பதால் இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளின் கவனத்தையும் இந்த தேர்தல்கள் ஈர்த்திருந்தன.
பொதுவாக, சட்டப்பேரவைத் தேர்தல்களில் ஆளும் கட்சி மேற்கொண்ட வளர்ச்சிப் பணிகள், எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் வாக்குறுதிகள் ஆகியவையே மக்களால் சீர்தூக்கி பார்க்கப்படும். ஆனால், இந்த தேர்தலில் அவற்றையும் தாண்டி, கரோனா பரவலை எதிர்கொண்ட விதமும் மக்களால் உற்றுநோக்கப்பட்டதால் ஆளும் கட்சிகளுக்கு பெரும்சவாலாக அமைந்தது. எனினும், இவற்றை எல்லாம் கடந்து மேற்குவங்கம், அசாம், கேரளா ஆகிய 3 மாநிலங்களில் ஆளும் கட்சிகள் அமோக வெற்றி பெற்றிருக்கின்றன.
மேற்குவங்கத்தில் மொத்தம் 294 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றுள்ளது. இது கடந்த தேர்தலைவிட கூடுதல் இடங்கள் ஆகும். இதன்மூலம் திரிணமூல் காங்கிரஸ் தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது.
அதேநேரம் பாஜக 70-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இக்கட்சி கடந்த 2016 பேரவைத் தேர்தலில் வெறும் 3 இடங்களில் மட்டுமே வென்றிருந்தது. எனினும், கடந்த மக்களவைத் தேர்தலில் 18 இடங்களில் வெற்றி பெற்றதால் உற்சாகமடைந்த பாஜக, ஆட்சியைப் பிடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டது. பிரதமர் மோடி, அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் மேற்கு வங்கத்தில் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டனர். எனினும், ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை.
இங்கு 30 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து ஆட்சியில் இருந்த இடதுசாரி கூட்டணி ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதனுடன் உடன்பாடு செய்துகொண்டு தேர்தலை சந்தித்த காங்கிரஸுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.
அசாமில் மொத்தம் உள்ள 126 தொகுதிகளில் முதல்வர் சர்வானந்த சோனாவல் தலைமையிலான பாஜக கூட்டணி 78 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. காங்கிரஸ் கூட்டணி 46 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
கேரளாவில் மொத்தம் உள்ள 140 தொகுதிகளில் 99 இடங்களில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்டுள்ளது. காங்கிரஸ் கூட்டணி 41 இடங்களில் வென்றுள்ளது. கடந்த தேர்தலில் ஒரு இடத்தில் வெற்றி பெற்ற பாஜக, இந்த முறை ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.
தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியான திமுகவும் புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸும் ஆட்சியைப் பிடித்துள்ளன.
முக்கிய செய்திகள்
தமிழகம்
50 mins ago
தமிழகம்
59 mins ago
விளையாட்டு
54 mins ago
கல்வி
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
வாழ்வியல்
1 hour ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
சினிமா
2 hours ago