“மக்களின்மீது கடன் சுமையை மேலும் ஏற்றியதே சாதனை” - தினகரன் | தமிழ்நாடு பட்ஜெட் 2023 கருத்து

By செய்திப்பிரிவு

சென்னை: “திமுக அரசு தாக்கல் செய்திருக்கும் 2023-24ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் மக்கள் நலன்சார்ந்த எந்த திட்டங்களும் இல்லாமல், மக்களுக்கு விடிவே இல்லாத நிலையை ஏற்படுத்தக் கூடிய அறிக்கையாகவே உள்ளது.” என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத் தலைவர் டிடிவி தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''திமுக தேர்தல் அறிக்கையில் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று கூறிவிட்டு, தற்போது தகுதியுள்ள குடும்பத் தலைவிகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என ஏமாற்றியுள்ளனர்.

மேலும், சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மானியம், டீசல் விலை குறைப்பு, மாதாந்திர மின் கட்டணம் செலுத்தும் முறை, குடும்பத்தில் முதல் தலைமுறை பட்டம் பெற்ற ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை போன்ற மக்கள் பெரிதும் எதிர்பார்த்த அறிவிப்புகள் இந்த நிதி நிலை அறிக்கையில் இடம்பெறவில்லை.

மக்களைத் தேடி மருத்துவம் செயல்படுத்தப்படும் என்று கூறியுள்ளார். ஆனால், ஏற்கனவே அமைக்கப்பட்ட அம்மா மினி கிளினிக்குகளை மேம்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்ற தகவல்களை வெளியிடவில்லை.

அதே போல, ஆசிரியர்களுக்கு சம வேலை சம ஊதியம் என்ற வாக்குறுதி, அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம், பல ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள போக்குவரத்து ஊழியர்களுக்கான நிலுவைத் தொகை போன்ற அறிவிப்புகள் இடம்பெறாதது அதிருப்தி அளிக்கிறது.

பத்திரப்பதிவுக்கான கட்டணம் 2 சதவிகிதம் குறைக்கப்படும் என்று கூறியிருக்கின்றனர். அதே வேளையில் வழிகாட்டு மதிப்பீட்டை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அறிவித்திருக்கிறார்கள். வழிகாட்டும் மதிப்பீடு அதிகரிக்கும்போது பதிவு கட்டணம் குறைக்கப்பட்டதில் என்ன நன்மை மக்களுக்கு இருக்கப்போகிறது?

பாடத்திட்டத்தின் தரத்தை உயர்த்தாமல் நூலகங்களுக்கும், புதிய நூலகங்களை அமைப்பதற்கான திட்டங்களை அறிவித்திருக்கும் அரசு, நூலகத்தில் உள்ள புத்தகத்தை படிப்பதற்கு கல்வி அறிவு பெற வேண்டிய மாணவர் சமுதாயத்தை மறந்துவிட்டதோ? என்ற கேள்வி எழுகிறது.

சிப்காட் அமைக்க வேளாண் நிலங்கள் கையகப்படுத்தக் கூடாது என்று விவசாயிகள் பல இடங்களில் போர்கொடி தூக்கி உள்ள நிலையில், சிப்காட் பூங்காக்கள் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், விவசாயிகளிடம் இருந்து நிலங்களை கையகப்படுத்துவது குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் ஏதும் அறிவிக்கப்படவில்லை என்பது ஏமாற்றம் அளிக்கிறது.

சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதாக கூறப்படுவது வியப்பை அளிக்கிறது. பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில் அதனைத் தடுக்க என்ன சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என்ற அறிவிப்புகள் ஏதும் இல்லை.

நகர்ப்புற மேம்பாட்டின் கீழ் கூவம், அடையாறு ஆகியவற்றை சீரமைக்க திட்டம் செயல்படுத்தப்படும் என்கின்றனர். திமுக தலைவர் ஸ்டாலின் சென்னை மேயராக இருந்த காலத்தில் இருந்தே இந்த சீரமைப்பு திட்டத்தை பற்றி பேசி வருகிறார். இதுவரை செயல்படுத்த ஒதுக்கப்பட்ட நிதி என்ன ஆனது? ஆறுகள் சீரமைப்பு என்ற பெயரில் கரையோரம் வசிக்கும் பூர்வகுடி மக்களின் இடங்களை திமுகவினர் ஆக்கிரமிக்கின்றனர் என்பதே மக்களின் குற்றச்சாட்டு.

புதிய கனிம வளங்கள் மற்றும் சுரங்கங்கள் அமைச்சகம் அமைக்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. ஆனால், இது போன்ற அமைச்சகம் இதுவரை அமைக்கப்படவில்லை. அதே நேரத்தில் கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு கனிம வளங்கள் கடத்தப்பட்டு வருகின்றன. இதைத் தடுப்பதற்கான எந்த சிறப்புத் திட்டமும் அரசிடம் இல்லை.

அம்மா உணவகங்களை மேம்படுத்த எந்த ஒரு அறிவிப்பும் இடம்பெறாதது ஏழை, எளிய மக்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக இருக்கிறது.

இந்த அரசு கடந்த இரண்டு ஆண்டுகளில் மக்களின் மீது கடன் சுமையை மேலும் ஏற்றியதையே சாதனையாக சொல்ல முடியுமே தவிர, பொருளாதாரத்தை முன்னேற்ற எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் மக்களை மேலும், மேலும் துயரக்குழியில் தள்ளும் விளம்பர பட்ஜெட்டாகவே திமுக அரசின் நிதி நிலை அறிக்கை உள்ளது" இவ்வாறு டிடிவி தினகரன் கூறியுள்ளார். வாசிக்க > தமிழ்நாடு பட்ஜெட் 2023 சிறப்பு அம்சங்கள்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

36 mins ago

விளையாட்டு

1 hour ago

க்ரைம்

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

சுற்றுலா

3 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்