காற்றை விலைக்கு வாங்கும் சூழல் வந்துவிடக்கூடாது: அமைச்சர் கா.ராமச்சந்திரன் கருத்து

By செய்திப்பிரிவு

சென்னை: வரும் காலத்தில் காற்றை விலைக்கு வாங்கும் சூழல் வந்துவிடக்கூடாது என்று வனத்துறை அமைச்சர்கா.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு வனத்துறை சார்பில் வன உயிரின வாரம் தொடக்க விழா மற்றும் தமிழ்நாடு புலிகள் பாதுகாப்பு மாநாடு சென்னை எழும்பூரில் நேற்று நடைபெற்றது. இதில் வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் பங்கேற்று விழாவைத் தொடங்கிவைத்தார். பின்னர் வன உயிரின வார விழாவைமுன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி கவுரவித்தார். பின்னர் அவர் நிகழ்ச்சியில் பேசியதாவது: வன உயிரினங்களால் மக்களுக்கு அச்சுறுத்தல் இருந்தாலும், மக்கள் நலனுக்காகதான் வனஉயிரினங்களை அரசு பாதுகாக்கிறது. வன உயிரின பாதுகாப்பின் அவசியம் குறித்து குழந்தைபருவம் முதலே விழிப்புணர்வு ஏற்படுத்ததான் இதுபோன்ற போட்டிகள் மாணவர்களிடையே நடத்தி பரிசுகள் வழங்கப்படுகின்றன.

தமிழகம் முழுவதும் 33 சதவீதம் வனப் பரப்பை உருவாக்க நாம்பாடுபட்டு வருகிறோம். ஆனால் தமிழகத்திலேயே நீலகிரி மாவட்டத்தில்தான் 67 சதவீதம் வனப் பகுதிகள் உள்ளன. நீலகிரி மாவட்டத்தில் நான் வசிக்கும் பகுதியில் ஒரு காலத்தில் ஒருவர் வீட்டிலும் வாகனங்களே இல்லை. இன்று வீட்டுக்கு ஒன்று மற்றும் அதற்கு மேல் வாகனங்கள் உள்ளன. அவை அனைத்தும் கார்பனை உமிழ்கின்றன. மக்களுக்கான வளர்ச்சி திட்டங்களால் காற்றும், நீரும் மாசுபட்டு வருகிறது. வரும் காலத்தில் காற்றை நாம்விலைக்கு வாங்கும் சூழல் வந்துவிடக்கூடாது. அதற்கு வனங்களும், வன உயிர்களும் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்காகதான் தமிழ்நாடு பசுமை இயக்கத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி இருக்கிறார். இந்த ஆண்டு 2 கோடி மரக்கன்றுகளும், அடுத்த ஆண்டு 32 கோடி மரக்கன்றுகளும் நடப்பட உள்ளன.

மேலும் அடர்ந்த புல் வகைகளையும் வளர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அப்போதுதான் மான்கள், ஆடுகள், மாடுகள் வாழும். அதை உண்டு புலிகள் வாழும். அரசின் நடவடிக்கைகளால் தமிழகத்தில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தியாவில் உள்ள புலிகளில் 10 சதவீதம் (267) தமிழகத்தில் உள்ளது. இவற்றின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க, வனப் பரப்பு அதிகரிக்கப்பட வேண்டும். அதற்காக அரசு பல்வேறு துறைகளுடன் இணைந்து பசுமை இயக்க திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை செயலர் சுப்ரியாசாஹூ, தயாநிதி மாறன் எம்பி, பரந்தாமன் எம்எல்ஏ, வனத்துறை தலைவர் சையத் முஜம்மில் அப்பாஸ், தலைமை வன உயிரின காப்பாளர் சீனிவாஸ் ரெட்டி, சென்னை மண்டலவனப் பாதுகாவலர் கீதாஞ்சலி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

11 mins ago

தமிழகம்

22 mins ago

வாழ்வியல்

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

5 hours ago

தமிழகம்

5 hours ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்