சட்டங்களை நீதிமன்றம் இயற்ற முடி யாதே தவிர, இயற்றப்பட்ட சட்டங்களைத் திறமையாக செயல்படுத்துவது குறித்து அரசுக்கு ஆலோசனை கூறும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு உள்ளது என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு கருத்து தெரிவித்தது.
தமிழகத்தில் விவசாய விளை நிலங்களை வீட்டுமனைகளாக மாற்றுவதை தடுக்கக்கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். இம்மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய முதல் அமர்வு, தமிழகத்தில் விளை நிலங்களில் உள்ள அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளையோ, அந்த வீட்டு மனைகளில் உள்ள கட்டிடங்களையோ எக்காரணம் கொண்டும் பத்திரப் பதிவு செய்யக்கூடாது என பத்திரப்பதிவு துறைக்கு தடை உத்தரவு பிறப்பித்தது. இதனால் தமிழகம் முழுவதும் பத்திரப்பதிவு முடங்கியுள்ளது.
இந்நிலையில், உயர் நீதிமன்ற வழக்கறிஞர் வி.பி.ஆர்.மேனன் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது: விவசாய விளை நிலங்களைப் பாரபட்சமின்றி மனைப்பிரிவு செய்யும்போது அங்கீகாரம் அளிப்பதற்கான கொள்கைகள் மற்றும் நடைமுறைகள் மீறப்படுகிறது. பயன்படும் மற்றும் பயன்பாடற்ற விளை நிலங்களை மனைகளாக மாற்றுவதற்கு திட்ட அனுமதி வழங்குவதில் பலதுறைகளும் சம்பந்தப்பட்டுள்ளன. இதில் தெளிவான நடைமுறையோ, வெளிப்படைத்தன்மையோ இல்லை. எனவே தமிழகத்தில் விவசாய விளை நிலங்களை மனைப்பிரிவுகளாக மாற்றம் செய்யும் போது ஒற்றைச்சாளர முறையில் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து விரிவான கொள்கைகளை உருவாக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கோரியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நேற்று தலைமை நீதிபதி அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர், ‘‘சட்டத்தை எப்படி உருவாக்க வேண்டும் என்பது பற்றி அரசுக்கு குடிமக்கள் அறிவுறுத்த முடியாது’’ என்றார். அதற்கு நீதிபதிகள், ‘‘சட்டங்களை நீதிமன்றங்கள் இயற்ற முடியாதே தவிர, இயற்றப்பட்ட சட்டங்களைத் திறமையாக எவ்வாறு செயல்படுத்தலாம் என்பது குறித்து அரசுக்கு ஆலோசனை கூறும் அதிகாரம் உயர் நீதிமன்றத்திற்கு உள்ளது’’ என கருத்து தெரிவித்தனர். மேலும் நீதிபதிகள், ‘‘இதேபோல ஏற்கெனவே வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தொடர்ந்த வழக்கு நாளை (அக்டோபர் 21-ம் தேதி_) விசாரணைக்கு வரவுள்ளதால் அந்த வழக்கோடு இதுவும் சேர்த்து விசாரிக்கப்படும்’’ என்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
க்ரைம்
4 hours ago
விளையாட்டு
5 hours ago
இந்தியா
5 hours ago
வணிகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
விளையாட்டு
7 hours ago
தமிழகம்
14 hours ago