Published : 09 May 2024 03:20 AM
Last Updated : 09 May 2024 03:20 AM

மதுரை மாநகராட்சியில் நாய் வளர்க்க ‘லைசென்ஸ்’ பெறும் நடைமுறை எப்போது தொடங்கப்படும்?

மதுரை: மதுரை மாநகராட்சியில் நாய்களை வீடுகளில் வளர்க்க ஆண்டுதோறும் கட்டணம் செலுத்தி லைசென்ஸ் பெறுவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் அந்த தீர்மானம் தற்போது வரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. தற்போது சென்னையில் நாய்கள் பிரச்சனை விசுவரூபம் எடுத்துள்ள நிலையில் நாய்களுக்கு லைசென்ஸ் வழங்கும் நடைமுறை எப்போது தொடங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மதுரை மாநகராட்சியில் கால்நடைகள், செல்லப்பிராணிகள் வளர்க்க உரிமையாளர்கள் ஆண்டுதோறும் மாநகராட்சியில் உரிமம்(லைசென்ஸ்) பெற வேண்டும் என்ற தீர்மானம் கடந்த டிசம்பரில் நடந்த மாநகராட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. அதில், மாடுகளுக்கு ரூ.100, கன்று ரூ.50, குதிரை ரூ.150, கழுதை ரூ.150, நாய்கள் ரூ.100, பன்றி ரூ.100 உரிமத் தொகை செலுத்தி அதனை வளர்க்கலாம் எனவும், உரிமம் பெறாத கால்நடைகளை, நாய்களை வளர்த்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த தீர்மானத்தில் கூறியிருந்தனர்.

மேலும், கால்நடைகளை வளர்க்க குடியிருப்பு பகுதிகளில் தொழுவம் அமைக்கக்கூடாது, பொது இடங்களில் வைத்து பராமரிக்கக்கூடாது, கால்நடைகள் வெளியேற்றும் திடக்கிழவுகளை சொந்த வாகனம் அமைத்து அப்புறப்படுத்த வேண்டும் என்றும், சாலைகளில் மட்டுமில்லாது தெருக்களில் அவிழ்த்துவிடப்படும் மாடு, குதிரை, பன்றி, கன்று, கழுதைகளுக்கு அபராதம் உண்டு. ரூ.1,500 முதல் ரூ,5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதுபோல், வீடுகளில் வளர்க்கப்படும் வளர்ப்பு நாய்களை வெளியே அழைத்து வரும்போது வாய்கவசம் அணிந்து கயிறு கட்டி அதன் உரிமையாளர்கள் அழைத்து வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.

இந்த தீர்மானத்தின் அடிப்படையில் வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களை பதிவு செய்தபிறகு, தெருக்களில் சுற்றித் திரியும் பிற நாய்களை தெரு நாய்கள் பட்டியலில் சேர்த்து அதனையும் கணக்கெடுக்கவும் மாநகராட்சி நடவடிக்கை எடுத்தது. ஆனால், மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதோடு சரி, தற்போது அந்த தீர்மானத்தில் குறிப்பிட்டப்படி கால்கடைகளை வளர்க்கவும், பராமரிப்பது தொடர்பான கண்காணிக்கும் நடவடிக்கைகளையும் மாநகராட்சி தொடங்கவில்லை. அதனால், எந்த நோக்கத்திற்காக இந்த நடவடிக்கையை மாநகராட்சி முன்னெடுத்ததோடு அதன் நோக்கம் நிறைவடையாமல் போனது.

அதனால், மாநகராட்சி பகுதிகளில் குடியிருப்புகளில் நடைபயிற்சி செல்வோர் பாதுகாப்பு இல்லாமல் நாய்களை பிடித்து செல்வதும், அந்த நாய்களை தெருக்களில் வருவோர் போவோரை பார்த்து குரைப்பதும், சீறுவதும், கடிப்பதுமான சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. அதனால், மதுரை அரசு மருத்துவமனையில் நாய்கள் கடித்து சிகிச்சை வருவோர் தற்போது வரை குறையவில்லை. சில இடங்களில் நாய்கள் பிரச்சனை காரணமாக சட்டம், ஒழுங்கு பிரச்சனைகள் கூட ஏற்படுகிறது. காவல்துறையினர் மற்ற பிரச்சனைகளோடு வளர்ப்பு நாய்களால் ஏற்படும் பிரச்சனைகளைக்கும் சமரசம் பேசி தீர்வு கண்டு வருகிறார்கள்.

இந்நிலையில் சென்னையில் மத்திய அரசால் தடை செய்யப்பட்ட இரண்டு ராட்வைலர் நாய்கள் கடித்த விவகாரம் பூதாகரமாக வெடித்ததால், மதுரை மாநகராட்சியில் நிறைவேற்றப்பட்ட வளர்ப்பு நாய்களுக்கு அனுமதி பெறும் தீர்மானம் எப்போது நடைமுறைப்படுத்தப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், மதுரை மாநகராட்சியில் சென்னையைப் போல் மத்திய அரசால் தடை செய்யப்பட்ட நாய்கள் வளர்க்கப்படுகிறதா? என்ற சந்தேகமும் அச்சமும் பொதுமக்களிடம் எழுந்துள்ளது.

அதனால், மாவட்ட கால்நடைதுறையும், மாநகராட்சியும் இணைந்து வீடுகளில் நாய்கள் வளர்ப்பதை முறைப்படுத்தவும், வீட்டை விட்டு வெளியே நாய்களை வாக்கிங் அழைத்து வரும்போது அரசு அறிவுறுத்திய பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுகிதா? என்பதை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடம் எழுந்துள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி சுகாதாரத்துறை உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறுகையில், ‘‘மாநகராட்சி தீர்மானத்தில் வீடுகளில் வளர்ப்பு நாய்கள் வளர்க்க அனுமதி பெறும் நடவடிக்கை தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் தொடங்கப்படும். தற்போது வரை ஒரு நாய்க்கு கூட மாநகராட்சியில் அனுமதி வழங்கப்படவில்லை’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x