“யார் மீதும் திமுக வீண்பழி சுமத்தாது” - பழனிசாமி மீது தொடர்ந்த வழக்கு குறித்து ஆர்.எஸ்.பாரதி விளக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: “யார் மீதும் திமுக வீண்பழி சுமத்தாது, சுமத்தியதும் இல்லை. எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில் நியாயமான விசாரணை நடைபெற வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கை" என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.

முன்னாள் முதல்வர் எடப்பாடிக்கு பழனிசாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இதையடுத்து, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "4800 கோடி ரூபாய் ஊழல் முறைகேட்டில் டெண்டர் அனைத்தும் எடப்பாடி பழனிசாமியின் இரண்டே உறவினர்களுக்கு வழங்கியிருக்கின்றனர். முதலில் குறிப்பிடப்பட்டிருந்த மதிப்பை, பின்னர் இரட்டிப்பாக காண்பித்து டெண்டர் விடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று கோரியிருந்தோம். இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடர்ந்திருந்தார். இன்று அந்த வழக்கு விசாரணையின்போது, திமுக சார்பில், "இந்த ஊழல் முறைகேடு தொடர்பாக உரிய முறையில் விசாரித்து, தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கம். விசாரணை செய்பவர்கள் யார் என்பது குறித்து எங்ளுக்கு கவலையில்லை. நியாயமான விசாரணை நடைபெற வேண்டும் என்பதுதான் எங்களுடைய கோரிக்கை" என்று என்னுடைய தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டது.

வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றமே விசாரிக்கலாம். ஊழல் நடந்ததா இல்லையா என்ற விவாதித்திற்குள் செல்லாமல், சென்னை உயர் நீதிமன்றம் உரிய விசாரணை நடத்தி, விசாரணை அமைப்பு குறித்து முடிவு செய்து கொள்ளலாம் என தீர்ப்பளித்துள்ளது.

எங்களைப் பொறுத்தவரை திமுகவுக்கு எப்போதுமே, விசாரணை நியாயமாகவும் நேர்மையாகவும் நடைபெற வேண்டும் என்பதில் அக்கறை இருக்கிறது. ஏற்கெனவே ஜெயலலிதா வழக்கில்கூட இப்படி வாதிட்டுதான் வெற்றி கண்டுள்ளோம்.

2016-ம் ஆண்டு தமிழகத்தில் தேர்தல் நேரத்தில் 570 கோடி ரூபாய் கண்டெய்னர் லாரியில் பிடிபட்டது. இதுவரை 6 வருடங்கள் உருண்டோடிவிட்டன. ஏறத்தாழ 7 ஆண்டுகள் நெருங்கப்போகிறது. அன்றையதினம் இந்த 570 கோடி ரூபாய் யாருடையது என்பது குறித்து கண்டறியவேண்டுமென திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. சிபிஐ விசாரணைக்கு மாற்றி 6 வருடங்களாகிறது. நானும் டி.கே.எஸ்.இளங்கோவனும் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்திற்கே சென்று கேட்டுவிட்டோம். ஆனால், இதுவரை அந்த வழக்கை சிபிஐ விசாரிக்கவில்லை.

எனவே, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட இந்த வழக்கை 6 ஆண்டுகள் கிடப்பில் போட்டதுபோல இல்லாமல், சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்து விசாரிக்கின்றபோது, உண்மை வெளிச்சத்துக்கு வரும்.

திமுக யார் மீதும் வீண்பழி சுமத்தாது, சுமத்தியதும் இல்லை. முதல்வர் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியின்படி இந்த வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் வந்துள்ள தீர்ப்பு வரவேற்கத்தக்கது" என்று அவர் கூறினார்.

முன்னதாக, எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கில் சிபிஐ விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து இபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு மாற்றிய உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. | முழு விவரம்: எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான சிபிஐ விசாரணை உத்தரவு ரத்து: உச்ச நீதிமன்றம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

க்ரைம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

வணிகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்