திருவண்ணாமலை: மத்திய அரசின் திட்டங்களைச் செயல்படுத்துவதில் ஒன்றியக் குழுத் தலைவர் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் தலையீடு இருப்பதாகக் கூறி கலசப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் அலுவலக சாவிகளை ஊராட்சி மன்றத் தலைவர்கள் இன்று (27-ம் தேதி) ஒப்படைத்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் மற்றும் துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் செயல்படுத்தப்படும் மத்திய அரசு திட்டங்களில், ஆளுங்கட்சி தலையீடு அதிகம் உள்ளதாக ஊராட்சி மன்றத் தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் மற்றும் பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டம் உள்ளிட்ட மத்திய அரசு திட்டங்களில் பணிகளைத் தேர்வு செய்வது, பயனாளிகளைத் தேர்வு செய்வதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றியக் குழுத் தலைவர்கள் மற்றும் அவர்களது கணவர்கள், ஊராட்சி செயலாளர்கள் தலையீடுவதாகக் கூறிப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை சமீபத்தில் முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஆட்சியரிடமும் மனு அளித்துள்ளனர்.
இந்த நிலையில், கலசப்பாக்கம் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி மன்றத் தலைவர்கள், அலுவலகங்களில் சாவிகளை, வட்டார வளர்ச்சி அலுவலரிடம் இன்று (27-ம் தேதி) ஒப்படைத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள், சாவிகளை ஒப்படைப்பது ஏன்? என விளக்கும் 6 அம்சங்களை உள்ளடக்கிய மனுவை அளித்துள்ளனர்.
கலசப்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர்கள் சங்கத் தலைவர் ஆறுமுகம், செயலாளர் எழில்மாறன், பொருளாளர் வசந்தகுமார் உள்ளிட்டோர் அளித்துள்ள மனுவில், “கலசப்பாக்கம் ஒன்றியத்தில் 45 கிராம ஊராட்சிகள் உள்ளன. மத்திய, மாநில அரசுகள் மூலம் கிராம ஊராட்சிகளுக்கு வழங்கும் திட்டப் பணிகளைச் சிறப்பாகவும், செம்மையாகவும் செயல்படுத்திப் பணியாற்ற கிராம மக்களால் நாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுளோம். ஆனால், தற்போது நிலவும் சூழ்நிலையில், கிராம மக்களுக்கு எங்களால் சேவை செய்ய முடியாத நிலையில் உள்ளோம். கிராம ஊராட்சியில் வட்டார வளர்ச்சி அலுவலக நிர்வாகம், ஒன்றியக் குழுத் தலைவர் மற்றும் அவரது கணவர் தலையீடு அதிகம் உள்ளது. மத்திய, மாநில அரசுகள் மூலம் வழங்கப்படும் மானிய நிதி, கிராம ஊராட்சிக்குப் போதியளவு வழங்கவில்லை.
மத்திய அரசின் திட்டமான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்படும் பணிகள் மற்றும் பிரதம மந்திரியின் வீடு வழங்கும் திட்டங்களில் பயனாளிகளைத் தேர்வு செய்வதில் வட்டார வளர்ச்சி அலுவலக நிர்வாகம் மற்றும் ஒன்றியக் குழுத் தலைவர் மற்றும் அவரது கணவரின் தலையீடு அதிகம் உள்ளது. ஊராட்சி செயலாளர்களைச் செயல்பட விடாமல் தடுக்கின்றனர். பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்த பிரதிநிதிகளுக்கு, அதிகாரம் இல்லாத சிலர், நிர்வாகத்தில் தலையிட்டு கிராம ஊராட்சியைச் செயல்படவிடாமல் தடுக்கின்றனர். பெண் தலைவர்கள் உள்ள ஊராட்சியில், அதிகாரம் இல்லாதவர்கள் தலையிட்டு, தலைவர்களின் பணியைத் தடுத்து சீர்குலைக்கின்றனர்.
இதுபோன்ற காரணங்களால், கிராம ஊராட்சியை எங்களால் சிறப்பாகச் செயல்படுத்த முடியவில்லை. எனவே, இன்று (27-ம் தேதி) முதல் அனைத்து ஊராட்சி மன்றத் தலைவர்களும், ஊராட்சி நிர்வாகத்தைத் தாங்களே மேற்கொள்ளலாம் எனக் கேட்டுக்கொள்கிறோம். மேலும், அனைத்து ஊராட்சி மன்றத் தலைவர்களும், கிராம செயல் அலுவலராகப் பணியாற்றுகிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊராட்சி மன்றத் தலைவர்கள் அளித்த அலுவலக சாவிகளை வட்டார வளர்ச்சி அலுவலர் விவேகானந்தன் பெற்றுக்கொண்டதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
23 mins ago
வர்த்தக உலகம்
31 mins ago
தமிழகம்
57 mins ago
சினிமா
52 mins ago
இந்தியா
1 hour ago
சினிமா
1 hour ago
தமிழகம்
1 hour ago
கருத்துப் பேழை
1 hour ago
இந்தியா
1 hour ago
விளையாட்டு
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago