பொன்னேரி: திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி, மீஞ்சூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளைய தலைமுறைக்காக20-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், 10 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி, மீஞ்சூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ‘நேதாஜி மர வங்கி’ என்ற பெயரில் இயங்கும் இளைஞர் குழு ஒன்று வாரந்தோறும் மரக்கன்றுகளை நட்டு வருகிறது. இதுகுறித்து, இக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் தர் பாபு தெரிவித்ததாவது:
பொன்னேரி பகுதியில் நானும் 20-க்கும் மேற்பட்ட இளைஞர்களும் சேர்ந்து, 1995-96-ம் ஆண்டுகளில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை நடத்தி வந்தோம். 1997-ம் ஆண்டு, ‘நேதாஜி சமூக நல அமைப்பு’ ஆரம்பித்து, ரத்த தானம் குறித்து, பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி, இதுவரை 50-க்கும் மேற்பட்ட முகாம்களை நடத்தி, ஆயிரக்கணக்கானோருக்கு ரத்தம் வழங்கியுள்ளோம்.
இலவச ஆம்புலன்ஸ்
108 ஆம்புலன்ஸ் வருவதற்கு முன்பு, பொன்னேரி பகுதியில் உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைகளுக்குச் செல்வதில் சிக்கல் இருந்து வந்தது. இதைத் தவிர்ப்பதற்காக, பொதுமக்களின் பங்களிப்போடு இலவச ஆம்புலன்ஸ் சேவையைத் தொடங்கினோம். சுமார் இரண்டரை ஆண்டுகள் தொடர்ந்த இச்சேவையில் 900 பேர், உரிய நேரத்தில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உயிர் காக்கப்பட்டுள்ளனர்.
அதுமட்டுமல்லாமல், ‘நேதாஜி உணவு வங்கி’ என்ற பெயரில் பல்வேறு விழாக்களின்போது மீதமாகும் உணவு வகைகளை சேகரித்து செங்கல் சூளைகள், விவசாயப் பணிகளில் ஈடுபடும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு கடந்த 9 ஆண்டுகளாக வழங்கி வருகிறோம்.
எங்கள் சமூகப் பணியின் ஒரு பகுதியாக அடுத்த தலைமுறைகளுக்கு பயனளிக்கும் வகையில் கடந்த 2013-ம் ஆண்டு முதல்பொன்னேரி, மீஞ்சூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வாரந்தோறும் சனி, ஞாயிறுகளில் மரம்நடும் பணியில் ஈடுபடத் தொடங்கினோம். தடப்பெரும்பாக்கம், கொடூர், அரசூர், காட்டாவூர், சின்னகாவனம் உள்ளிட்ட பகுதிகளில் குளக்கரைகள், பேருந்து நிறுத்தங்கள், கோயில்கள், பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள், பள்ளி, கல்லூரி, அரசு அலுவலக வளாகங்களில் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகிறோம்.
நண்பர்கள், சமூக ஆர்வலர்கள் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்டு வரும் இப்பணி இதுவரை 340-க்கும் மேற்பட்ட வாரங்களைக் கடந்துள்ளது. இதில் சுமார் 10 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டுள்ளோம். அவ்வாறு நடப்பட்ட மரக்கன்றுகளில், 45 சதவீத மரக்கன்றுகள் தற்போது மரமாக வளர்ந்துள்ளன.
மேலும், மரத்தின் அவசியம் குறித்து, பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதால், எங்கள் பகுதிகளில் பலர்தங்கள் இல்ல சுப நிகழ்வுகளில் பங்கேற்பவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி வருகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
57 mins ago
தமிழகம்
57 mins ago
சினிமா
1 hour ago
கல்வி
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
சினிமா
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
சுற்றுலா
2 hours ago
தமிழகம்
2 hours ago
சினிமா
2 hours ago