புதுவை முதல்வர் ரங்கசாமியுடன் இயக்குநர் பாக்யராஜ் சந்திப்பு: படப்பிடிப்புக் கட்டணத்தைக் குறைக்க கோரிக்கை

By அ.முன்னடியான்

படப்பிடிப்புகளுக்காக அரசு சார்பில் உயர்த்தப்பட்டுள்ள வரியைக் குறைக்க வேண்டும் என்று திரைப்பட இயக்குநர் கே.பாக்யராஜ் புதுச்சேரி முதல்வரைச் சந்தித்து கோரிக்கை வைத்துள்ளார்.

ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்காக இயக்குநர் கே.பாக்யராஜ் இன்று புதுவைக்கு வருகை தந்துள்ளார். அப்போது புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை அவர் சந்தித்தார்.

புதுச்சேரி மாநிலம் சுற்றுலாத் தளமாக விளங்கி வருகிறது. இங்கு தமிழ் மட்டுமின்றி பல்வேறு மொழித் திரைப்படங்களின் படப்பிடிப்புகளும் நடைபெறுவதுண்டு. புதுச்சேரியில் சினிமா படப்பிடிப்பிற்காக ஒரு இடத்தில் காட்சிகளை எடுப்பதற்கு, புதுச்சேரி நகராட்சி சார்பில் ரூ.5 ஆயிரம் வரி வசூல் செய்து வந்த நிலையில், திடீரென கடந்த சில மாதங்களுக்கு முன்பு, இந்த வரிவிதிப்புக் கட்டணம் ரூ.28 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

கரோனா ஊரடங்கு காரணமாக இந்த வரிவிதிப்பு அதிகரிக்கப்பட்டது. பிற மாநிலங்களைக் காட்டிலும் இந்த வரிவிதிப்பு குறைவு என்றாலும், திரைப்படத் துறையினர், உயர்த்திய வரிவிதிப்பைக் குறைக்க வேண்டுமெனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதுச்சேரிக்கு வந்திருந்த நடிகர்கள் தியாகராஜன், பார்த்திபன், விஜய் சேதுபதி உள்ளிட்டோர், முதல்வர் ரங்கசாமியை நேரில் சந்தித்து இந்தக் கோரிக்கையை முன்வைத்துச் சென்றனர்.

இந்நிலையில், தமிழ்த் திரைப்பட இயக்குநரும், நடிகருமான கே.பாக்யராஜ் கதாநாயகனாக நடிக்கும் '369' என்ற திரைப்படம், புதுச்சேரியில் 90 நிமிடங்களில் தொடர் படப்பிடிப்பு நடத்தி கின்னஸ் உலக சாதனைக்காகப் படமாக்கப்பட உள்ளது. புதுச்சேரியில் நாளை நடைபெற உள்ள இந்தப் படப்பிடிப்புக்கு வந்துள்ள இயக்குநர் கே.பாக்யராஜ், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை அவரது இல்லத்தில் இன்று (டிச. 14) மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்துப் பேசினார்.

அப்போது சினிமா படப்பிடிப்புக்குப் புதுச்சேரி அரசு விதிக்கும் வரியைக் குறைக்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் கே.பாக்யராஜ் கூறியதாவது:

''புதுச்சேரியில் ‘369’ என்ற படத்தில் நடிக்க வந்துள்ளேன். தொடர்ச்சியாக 90 நிமிடங்கள் படப்பிடிப்பு நடக்கிறது. அதற்காக சினிமா படப்பிடிப்பு நாளை நடைபெறுகிறது. புதுச்சேரி அழகு நிறைந்த பகுதி மற்றும் சினிமா எடுக்கச் செலவு குறைவு என்பதால், பலரும் இங்கே படம் எடுக்க வருகின்றனர். ஆனால், திடீரென இங்கு வரியை உயர்த்தியுள்ளனர்.

படப்பிடிப்புகளுக்காக அரசு சார்பில் உயர்த்தப்பட்டுள்ள வரியைக் குறைக்க வேண்டும் என முதல்வர் ரங்கசாமியிடம் வலியுறுத்தினேன். பரிசீலனை செய்து குறைக்க நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் உறுதி அளித்துள்ளார்.''

இவ்வாறு இயக்குநர் கே.பாக்யராஜ் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

11 mins ago

விளையாட்டு

37 mins ago

க்ரைம்

41 mins ago

சுற்றுச்சூழல்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

சுற்றுலா

2 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்