தங்கப் புதையல் கிடைப்பதல்ல வழக்கறிஞர் தொழில்; சட்டக் கல்வித் தரத்தை உறுதிப்படுத்துக: தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி

By கி.மகாராஜன்

வழக்கறிஞர் தொழில் எளிதானது அல்ல. எளிதாக தங்கப் புதையல் கிடைக்கும் தொழில் வழக்கறிஞர் தொழில் அல்ல என்று சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தெரிவித்தார்.

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கறிஞர்களுக்கு உதவி செய்வதற்காக, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கறிஞர்கள் நலநிதி அறக்கட்டளை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா நிர்வாக நீதிபதி எம்.துரைசுவாமி தலைமையில் இன்று நடைபெற்றது. அறக்கட்டளை நிறுவனர் மற்றும் மேலாண்மை அறங்காவலரான மூத்த வழக்கறிஞர் அஜ்மல்கான் வரவேற்றார். கூடுதல் அட்வகேட் ஜெனரலும், அறங்காவலர்களில் ஒருவருமான வீராகதிரவன், அறக்கட்டளையின் நோக்கத்தை எடுத்துரைத்தார்.

அறக்கட்டளைக்கு முதல் நன்கொடையாக மூத்த வழக்கறிஞர் அஜ்மல்கான் வழங்கிய ரூ.10.50 லட்சத்துக்கான காசோலையை அறங்காவலர்கள் ஆர்.காந்தி, ஆறுமுகம் ஆகியோரிடம் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி வழங்கினார்.

பின்னர், தலைமை நீதிபதி பேசியதாவது:

''வழக்கறிஞர் தொழில் எளிதானது அல்ல. எளிதாக தங்கப் புதையல் கிடைக்கும் தொழில் வழக்கறிஞர் தொழில் அல்ல. இதில் வெற்றி பெறக் கடுமையான உழைப்பும், நேர்மையும் அவசியம். இந்தியாவில் சுமார் 2,800 சட்டக் கல்லூரிகள் உள்ளன. சமீபத்தில் சட்டக் கல்வியை முறையாகப் பயிலாமல் வழக்கறிஞர்களாக வருகின்றனர். சட்டக் கல்வியின் தரத்தை உறுதிப்படுத்த வேண்டியது தற்காலத்தின் தேவையாகும்.

கல்வி ஒரு மனிதனை மேம்படுத்துவதாக இருக்க வேண்டும். பட்டப் படிப்பு என்பது பெயருக்குப் பின்னால் மட்டும் குறிப்பிடுவதற்காக இருக்கக் கூடாது. கல்வி உண்மையான சமூக மாற்றத்துக்கானதாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் மறையும்.

நீதித்துறை என்பது நீதிபதியை மட்டும் சார்ந்தது அல்ல. வழக்கறிஞர், நீதிமன்ற ஊழியர்கள், பொதுமக்கள் சேர்ந்ததுதான் நீதித்துறை. நீதி வழங்குவது என்பது இறைப் பணி அல்ல. அது மற்ற அரசுப் பணிகளை போலவே சமூகக் கடமைகளை நிறைவேற்றும் ஒரு பணியாகும். இறைப் பணியை இறைவனைத் தவிர வேறு யாராலும் மேற்கொள்ள முடியாது. பொதுப் பணியில் இருப்பவர்கள் நேர்மையாக இருக்க வேண்டும்''.

இவ்வாறு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி பேசினார்.

அறக்கட்டளைக்கு நிதி வழங்கிய நீதிபதி புகழேந்தி, மூத்த வழக்கறிஞர்கள் அஜ்மல்கான், வீராகதிரவன், வழக்கறிஞர்கள் ஆர்.காந்தி, கு.சாமிதுரை, லஜபதிராய், தாளை முத்தரசு, கணபதி சுப்பிரமணியம், ஆனந்தவள்ளி, பிரபு ராஜேந்திரன், ஹெரால்டுசிங், சேவியர் அருண் ராஜ், சாதிக்ராஜா, ஸ்ரீசரன் ரங்கராஜன், திலீப்குமார், வாகிஸ்வரன், அருண் சுவாமிநாதன், சிவசங்கரி ஆகியோருக்குத் தலைமை நீதிபதி விருது வழங்கிப் பாராட்டினார்.

நீதிபதிகள் நிஷாபானு, ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி, கிருஷ்ணகுமார், கிருஷ்ணவள்ளி, சுரேஷ்குமார், பொங்கியப்பன், பார்த்தீபன், செந்தில்குமார் ராமமூர்த்தி, அரசு பிளீடர் திலக்குமார், அரசு வழக்கறிஞர் சுப்பாராஜ், பதிவாளர் ஜெனரல் தனபாலன், உதவி பதிவாளர் ஜெனரல் பூர்ண ஜெய ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

உயிரிழந்த வழக்கறிஞர்கள் சிவகுமார், அன்பு சரவணன் குடும்பத்துக்குப் பண உதவி வழங்கப்பட்டது. வழக்கறிஞர்கள் பினேகாஸ், அருண் சுவாமிநாதன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். பெண் வழக்கறிஞர் சங்கத் தலைவர் ஆனந்தவள்ளி நன்றி கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

இந்தியா

4 hours ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

6 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

10 hours ago

வலைஞர் பக்கம்

10 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

11 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்