Published : 01 May 2024 11:44 PM
Last Updated : 01 May 2024 11:44 PM

CSK vs PBKS | சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்

ருதுராஜ் மற்றும் சாம் கரண்

சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனின் 49-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 7 விக்கெட்டுகளில் வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ் அணி. சேப்பாக்கத்தில் பஞ்சாப் அணி கடைசியாக விளையாடிய 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதே போல சிஎஸ்கே அணியுடன் கடைசியாக விளையாடிய 5 போட்டிகளில் பஞ்சாப் வெற்றி பெற்றுள்ளது.

163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை பஞ்சாப் கிங்ஸ் அணி விரட்டியது. பிரப்சிம்ரன் சிங் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். பேர்ஸ்டோ மற்றும் ரைலி ரூசோ இணைந்து 64 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். பேர்ஸ்டோ, 46 ரன்களில் ஆட்டமிழந்தார். ரூசோ, 23 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

பஞ்சாப் அணியின் கேப்டன் சாம் கரண் மற்றும் ஷஷாங் சிங் இணைந்து 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அதன் மூலம் 17.5 ஓவர்களில் 163 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது பஞ்சாப் அணி. சாம் கரண் 26 ரன்கள், ஷஷாங் சிங் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். பத்து போட்டிகளில் விளையாடி 4 வெற்றிகளை பெற்றுள்ளது பஞ்சாப் அணி.

முன்னதாக, முதல் இன்னிங்ஸில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ரஹானே மற்றும் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் இணைந்து இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 64 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

சிறப்பான தொடக்கம் கிடைத்தும் குறுகிய இடைவெளியில் 3 விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தது சென்னை சூப்பர் கிங்ஸ். ரஹானே, 29 ரன்களில் வெளியேறினார். ஷிவம் துபே, முதல் பந்தில் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். அவர்கள் இருவரது விக்கெட்டையும் ஹர்ப்ரீத் ப்ரார் ஒரே ஓவரில் வீழ்த்தினார். அடுத்த ஓவரில் 2 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா ஆட்டமிழந்தார். அவரை ராகுல் சஹார் வெளியேற்றினார்.

தொடர்ந்து இம்பேக்ட் வீரராக சமீர் ரிஸ்வி களத்துக்கு வந்தார். கேப்டன் ருதுராஜ் உடன் இணைந்து நிதானமாக இன்னிங்ஸை அணுகினார். 15 ஓவர்கள் முடிவில் 102 ரன்கள் எடுத்தது சிஎஸ்கே.

ரபாடா வீசிய 16-வது ஓவரில் ரிஸ்வி ஆட்டமிழந்தார். 23 பந்துகளில் 21 ரன்கள் அவர் எடுத்திருந்தார். ரிஸ்வி மற்றும் ருதுராஜ் இணைந்து 37 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஆறாவது பேட்ஸ்மேனாக மொயின் அலி வந்தார்.

சாம் கரண் வீசிய 17-வது ஓவரில் சிக்ஸர் விளாசி அரைசதம் கடந்தார் ருதுராஜ். அதுதான் இன்னிங்ஸில் சிஎஸ்கே விளாசிய முதல் சிக்ஸர். அது ஃப்ரி-ஹிட் வாய்ப்பு மூலம் கிடைத்தது. அதோடு நடப்பு சீசனில் 500+ ரன்களை கடந்தார் ருதுராஜ். இதன் மூலம் இந்த சீசனில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன்களில் முதலிடத்தில் அவர் உள்ளார். அதே ஓவரில் மற்றொரு சிக்ஸரையும் ருதுராஜ் விளாசினார்.

அர்ஷ்தீப் வீசிய 18-வது ஓவரில் 15 ரன்கள் எடுத்தது சிஎஸ்கே. அந்த ஓவரில் ருதுராஜ் 62 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து தோனி பேட் செய்ய வந்தார். ராகுல் சஹார் 19-வது ஓவரை வீசினார். அந்த ஓவரில் 3 ரன்கள் மட்டுமே கொடுத்த அவர், மொயின் அலி விக்கெட்டை கைப்பற்றினார்.

கடைசி ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். ஓவர் முழுவதும் ஸ்ட்ரைக்கில் தோனி இருந்தார். அந்த ஓவரில் 13 ரன்கள் எடுத்தது சிஎஸ்கே.தோனி ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு ரன் எடுத்தார். கடைசி பந்தில் இரண்டு ரன் எடுக்க முயன்று ரன் அவுட் ஆனார். 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ். பஞ்சாப் அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி இருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x