குறுகிய காலமே இருப்பதால் புதுச்சேரியில் விநாயகர் சிலைகள் தயாரிப்புப் பணிகள் மும்முரமாக நடக்கின்றன. சாரம் அவ்வை திடலில் 21 அடி உயர பிரம்மாண்ட விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
இந்துக்களின் முக்கியமான பண்டிகையான விநாயகர் சதுர்த்தி விழா வரும் 10-ம் தேதி வருகிறது. வழக்கமாகத் தெருக்களிலும், வீடுகளிலும் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்து நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம்.
கரோனா தொற்றால் கடந்த ஆண்டு ஊரடங்கினால் விநாயகர் சதுர்த்தி விழா நடக்கத் தடை இருந்தது. அதனால் விநாயகர் சிலை செய்யும் பணிகள் பாதிக்கப்பட்டன. நடப்பாண்டு ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், விநாயகர் சதுர்த்தி விழாவைக் கொண்டாடவும், சிலைகளை அமைக்கலாம் எனவும் அரசு அறிவிப்பு வெளியிடுமா எனக் காத்திருந்தனர்.
இந்நிலையில் தமிழகத்தில் விநாயகர் சிலைகளை வைத்துப் பொது இடங்களில் வழிபட அனுமதி தரப்படவில்லை. அதே நேரத்தில் புதுச்சேரியில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்குத் தடையில்லை என்ற அறிவிப்பு வெளியானது.
இந்து முன்னணி தரப்பில் விசாரித்தபோது, "புதுச்சேரியில் சாரம் அவ்வை திடலில் 21 அடி உயர விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. புதுச்சேரி, வில்லியனூர், காலாப்பட்டு, திருக்கனூர் என நூற்றுக்கணக்கான இடங்களில் பிரதிஷ்டை செய்ய உள்ளோம். அதன் எண்ணிக்கை ஏராளமாக இருக்கும். வரும் 14-ம் தேதி விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடக்கும். இம்முறை பல இடங்களிலும் விநாயகர் சிலையைப் பிரதிஷ்டை செய்து வழிபட ஆர்வமுடன் உள்ளனர்" என்று குறிப்பிட்டனர்.
விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அனுமதி கிடைத்ததையடுத்து அரியாங்குப்பம், அரியூர், மணவெளி, ரெட்டிச்சாவடி எனப் பல இடங்களில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடக்கின்றன.
இதுபற்றித் தொழிலாளர்களிடம் விசாரித்தபோது, "தமிழகத்தில் சிலைகள் வைக்க இயலாது. புதுச்சேரியில் சிலைகள் வைத்து விழா நடத்த அனுமதி தரப்பட்டுள்ளது. விநாயகர் சிலைகளை மூன்று விதங்களில் செய்வோம்.
வீட்டில் வைத்து சாமி கும்பிடச் செய்யும் பிள்ளையார், மண் பிள்ளையார் உடன் அச்சில் வடிவமைத்துக் கையில் தருவோம். அதன் அளவைப் பொறுத்து விலை இருக்கும். அடுத்த வகை பிள்ளையாரை மண்ணில் வடித்து வர்ணம் தீட்டி அரை அடி முதல் இரண்டரை அடி வரை செய்வோம். 15 வகையில் செய்துள்ளோம்.
இதன் விலை ரூ.50 முதல் ரூ.300 வரை இருக்கும். மண் பிள்ளையாரில் பத்து வர்ணங்களைத் தீட்டியுள்ளோம். தற்போது களிமண் வர்ணம் பூசித் தருவதற்கு அதிக வரவேற்பு உள்ளது. குறைந்த நாளே இருப்பதால் அதிக அளவு உற்பத்தியாக்க முடியவில்லை. பணிகள் மும்முரமாக நடக்கின்றன.
பொது இடங்களில் வைக்கும் பிள்ளையார்கள் இரண்டு அடி முதல் 10 அடி வரை இருக்கும். களிமண் பிள்ளையாரைவிட இவ்வகை பெரிய பிள்ளையார் செய்தால்தான் லாபம் கிடைக்கும். சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் செய்கிறோம். தற்போது குறைந்த நாளே இருப்பதால் அதிக அளவில் பிள்ளையார் செய்ய ஆர்டர்கள் வருகின்றன. விழாவுக்கு அனுமதி கிடைத்தது.
மகிழ்ச்சி தந்தாலும் ஆர்டருக்கு ஏற்ப உற்பத்தி செய்ய நேரமில்லாத சூழல் இருப்பதால் பணிகள் விரைந்து நடக்கின்றன" என்று குறிப்பிட்டனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
44 mins ago
தமிழகம்
53 mins ago
விளையாட்டு
48 mins ago
கல்வி
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
வாழ்வியல்
1 hour ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
சினிமா
2 hours ago