தூத்துக்குடியில் 25 ஏக்கரில் வர்த்தக மைய அரங்கம்: அமைச்சர் கீதாஜீவன் தகவல்

By ரெ.ஜாய்சன்

தூத்துக்குடியில் 25 ஏக்கர் பரப்பளவில் வர்த்தக மைய அரங்கம் அமைக்கப்படும் என தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் தெரிவித்தார்.

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாநகராட்சி அலுவலகக் கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது. கூட்டத்துக்கு அமைச்சர் கீதாஜீவன் தலைமை வகித்தார். மாவட்ட வளர்ச்சித் திட்டங்கள் சிறப்பு கண்காணிப்பு அலுவலரான தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குநர் கோ.பிரகாஷ் முன்னிலை வகித்தார்.

மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மற்றும் கூடுதல் ஆட்சியர் சரவணன், உதவி ஆட்சியர் (பயிற்சி) ஸ்ருதஞ் ஜெய் நாராயணன், மாநகராட்சி தலைமை பொறியாளர் சேர்மக்கனி, உதவி செயற்பொறியாளர் சரவணன், குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் செந்தூர்பாண்டியன், மாநகராட்சி நகர்நல அலுவலர் வித்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மாநகராட்சிப் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெறும் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து கூட்டத்தில் விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.

பின்னர் அமைச்சர் கீதாஜீவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழக முதல்வரின் சிறப்பான நடவடிக்கையால் கரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளது.

கரோன தடுப்பூசி தொடர்பாக அரசு மேற்கொண்ட விழிப்புணர்வுகளால் மக்கள் மத்தியில் தடுப்பூசி போட ஆர்வம் அதிகரித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 3.80 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாநகராட்சியில் தற்போது சில பகுதிகளில் தினசரியும், சில பகுதிகளில் ஒரு நாள் விட்டு ஒரு நாளும், மேலும் சில பகுதிகளில் 3 நாட்களுக்கு ஒரு முறையும் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.

இதனை முறைப்படுத்தி அனைத்து பகுதிகளிலும் தினசரி குடிநீர் சப்ளை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கான விரிவான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் ஒன்றரை ஆண்டுக்குள் முழுமையாக செயல்படுத்தப்படும். அதன் பிறகு அனைத்து பகுதிகளுக்கும் தினசரி குடிநீர் சப்ளை செய்யப்படும்.

தூத்துக்குடியில் கடந்த 2007-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நீண்ட காலமாக முடிவடையாமல் உள்ளது. இதனை விரைவாக முடிக்க அதிகாரிகள், ஒப்பந்தக்காரர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இன்னும் 6 மாத காலத்தில் பணிகளை முழுமையாக முடிக்க அவர்கள் உறுதியளித்துள்ளனர். மேலும், மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளுக்கும் பாதாள சாக்கடை திட்டத்தை விரிவுபடுத்த ரூ.100 கோடியில் திட்ட வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் பெரிய அளவில் ஒரு வர்த்தக மைய அரங்கம் (Convention Centre) அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தூத்துக்குடி மீன்வளக் கல்லூரிக்கு எதிரே உள்ள இடத்தில் சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் இந்த அரங்கத்தை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தொழில் வர்த்தக கண்காட்சிகள், ஏற்றுமதி கண்காட்சிகள், வர்த்தகக் கூட்டங்கள் போன்ற பல்வேறு விசங்களுக்கு பயன்படும் வகையில் இந்த வர்த்தக மைய அரங்கம் அமைக்கப்படும்.

மேலும் தூத்துக்குடி அம்பேத்கார்நகர் பகுதியில் ரூ.25 கோடி மதிப்பில் அறிவியல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கவும், விவிடி மேல்நிலை நீர்தேக்க தொட்டி பூங்கா அருகே பல்நோக்கு பயன்பாட்டு அரங்கம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார் அமைச்சர்.

தொடர்ந்து விவிடி மேல்நிலை நீர்தேக்க தொட்டி பூங்கா அருகில் பல்நோக்கு பயன்பாட்டு அரங்கம் அமைக்கும் பணிகளையும், அம்பேத்கார் நகர் பகுதியில் அறிவியல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்பட உள்ள பகுதியையும், தூத்துக்குடி மீன்வள கல்லூரி எதிரே 25 ஏக்கர் பரப்பளவில் வர்த்தக மைய அரங்கம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள பகுதியையும் அமைச்சர் கீதாஜீவன் மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

19 mins ago

தமிழகம்

4 mins ago

வாழ்வியல்

28 mins ago

தமிழகம்

44 mins ago

ஆன்மிகம்

2 mins ago

கருத்துப் பேழை

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

உலகம்

1 hour ago

சினிமா

2 hours ago

வலைஞர் பக்கம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்