ஆர்எஸ்எஸ் தலைவர் வருகையை முன்னிட்டு சாலைகளைச் சீரமைக்கவும், தூய்மைப்படுத்தவும் மாநகராட்சி உதவி ஆணையர் சுற்றறிக்கை அனுப்பியது, இசட் ப்ளஸ் பாதுகாப்பில் இருப்பவர்களுக்குச் செய்யக்கூடிய சட்டரீதியான அரசு நடைமுறையே என்று, மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் கூறினார். இந்நிலையில், சுற்றறிக்கை அனுப்பிய உதவி ஆணையரைப் பணியில் இருந்து தற்காலிகமாக விடுவித்த சம்பவம் சர்ச்சையாகியுள்ளது.
ஆர்எஸ்எஸ் லைவர் மோகன் பாகவத் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று இரவு (ஜூலை 22) மதுரை வருகிறார். அவர் 26-ம் தேதி வரை மதுரையிலே தங்கவுள்ளார். அவர் வருகையை முன்னிட்டு, மதுரை மாநகராட்சி உதவி ஆணையர் சண்முகம் (துணை ஆட்சியர்), மோகன் பாகவத் செல்லும் சாலைகளைச் சீரமைத்தல், தெருவிளக்குகளைப் பராமரித்தல், சாலைகளைச் சுத்தமாக வைத்தல் போன்ற பணிகளைச் செய்திட வேண்டும் என்று, அனைத்து மண்டல அதிகாரிகளுக்குச் சுற்றறிக்கை அனுப்பி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவு நகலை திமுக கூட்டணிக் கட்சி நிர்வாகிகளே சமூக வலைதளங்களில் அதிக அளவு பகிர்ந்து அரசு உயர் பொறுப்பில் இல்லாத ஆர்எஸ்எஸ் தலைவருக்காக, மதுரை மாநகராட்சி நிர்வாகம் எந்த விதிகளின்படி சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது என்று கேள்வி கேட்டனர்.
திமுக அரசியல் ரீதியாக ஆர்எஸ்எஸ் இயக்கத்தை எதிர்த்து வரும் நிலையில், மாநகராட்சி உதவி ஆணையரின் இந்த உத்தரவு அக்கட்சிக்கும், அரசுத் துறை உயர் அதிகாரிகளுக்கும் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது.
ஆனால், மாநகராட்சி உதவி ஆணையர் சண்முகம், மாநகராட்சி ஆணையருக்குத் தெரியாமல் இந்தச் சுற்றறிக்கையை வெளியிட்டிருக்க வாய்ப்பில்லை. அதனால், மாநகராட்சி ஆணையரே நேற்று இரவு வரை, மாநகராட்சி உதவி ஆணையரின் சுற்றறிக்கை நடவடிக்கை சரியானதே என்றும், இசட் ப்ளஸ் பாதுகாப்பில் வருவோருக்கு அவர் செல்லும் பகுதியில் சாலைகளைச் சீரமைப்பது வழக்கமான மாநகராட்சி நடவடிக்கையே என்றும் விளக்கம் அளித்தார்.
ஆனால், அடுத்த சில மணி நேரங்களில் மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், அவர் கூறிய நிலைப்பாட்டில் இருந்து முரண்பாடாக, சுற்றறிக்கை வெளியிட்ட உதவி ஆணையாளர் சண்முகத்தைப் பணியிலிருந்து விடுவித்து உத்தரவிட்டார். மாநகராட்சி ஆணையரின் இந்த உத்தரவு சர்ச்சையையும், மாநகராட்சி அதிகாரிகள் மத்தியில் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
மாநகராட்சி அதிகாரிகள் சிலரிடம் கேட்டபோது, "பொதுவாக விவிஐபிக்கள் யாராவது மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு வந்தால் அவர்கள் செல்லும் பகுதிகளை அதிகாரிகள் சுற்றறிக்கை உத்தரவு போட்டோ அல்லது வாய்மொழி உத்தரவிட்டோ சுத்தம் செய்ய அறிவுறுத்துவது வழக்கமான நடைமுறைதான்.
ஏனென்றால், அவர்கள் செல்லும் பகுதியில் சாலை சரியில்லை, குப்பை குவிந்து கிடக்கிறது என்று அவர்கள் குறை கூறிச் சென்றால், மாநகராட்சிக்குத்தான் கெட்ட பெயர் ஏற்படும் என்ற அவப்பெயரை தடுக்கவே, விஐபிகளுக்கு சாலைச் சீரமைப்பு, சுகாதாரப் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்.
அந்த அடிப்படையிலே உதவி ஆணையர் சுற்றறிக்கை அனுப்பினார். ஆனால், திமுக அரசியல் ரீதியாக ஆர்எஸ்எஸ் இயக்கத்தைச் சமீபகாலமாக கடுமையாக எதிர்ப்பதால், அக்கட்சித் தலைமைக்கு கடும் நெருக்கடி கொடுத்ததாலே, இந்தச் சுற்றறிக்கை இந்த அளவுக்கு சர்ச்சையாகி கடைசியில் உதவி ஆணையரைப் பணியில் இருந்து விடுவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலிட அரசியல் நெருக்கடியாலே மாநகராட்சி ஆணையர் நடவடிக்கை எடுத்துள்ளார்" என்றனர்.
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
8 mins ago
தமிழகம்
24 mins ago
கருத்துப் பேழை
46 mins ago
விளையாட்டு
50 mins ago
இந்தியா
54 mins ago
உலகம்
1 hour ago
சினிமா
1 hour ago
வலைஞர் பக்கம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
சினிமா
2 hours ago
விளையாட்டு
3 hours ago