நெல்லு விளைஞ்ச பூமியில புல்லுகூட முளைக்கலை..!- ஒரத்துப்பாளையம் அணை: தீர்வுகள் சாத்தியமே!

By டி.எல்.சஞ்சீவி குமார்

உலகிலேயே, திறக்க வேண்டாம் என்று விவசாயிகள் போராடிய ஒரே அணை ஒரத்துப்பாளையம் அணையாகதான் இருக்கும். அதில் இருப்பது தண்ணீர் அல்ல. விவசாயிகளின் கண்ணீர். சுமார் 15 ஆயிரம் டீ.டி.எஸ். அளவு (Total disolved solids) கொண்ட திருப்பூர் சாய ஆலைகளின் ரசாயனக் கழிவு நீர் அங்கு தேங்கியிருக்கிறது. குடித்தால் மரணம்கூட நேரிடலாம். 24 ஆண்டுகளுக்கு முன்பு பாசனத் துக்காக என்று கட்டப்பட்ட அணை, தனது ஆயுள் காலத்தில் ஒருநாள்கூட பாசனத்துக்கு பயன்பட வில்லை என்று வயிறு எரியச் சொல்கிறார்கள் விவசாயிகள். ஒரத்துப்பாளையம் அணையையும் அதன் சுற்றுவட்டார கிராமங்களை யும் சென்று பார்த்தால் இந்த விஷ(ய)த்தின் வீரியத்தை நீங்கள் உணர முடியும்!

“இந்த பகுதியில அணையைக் கட்டுறோம்னு சொன்னப்ப ரொம்ப சந்தோஷப்பட்டோம். நெல்லும் கரும்பும் முப்போகம் விளைவிக் கலாம்னு கொண்டாடினோம். அதே சந்தோஷத்துல அணைக்காக 20 ஏக்கர் நிலத்தைக் கொடுத்தேன். இப்போ என் மொத்த விவசாயமும் பட்டுப்போச்சு. நெல்லு விளைஞ்ச பூமியில புல்லுகூட மொளைக்க மாட்டேங்குது. காக்கா, குருவிகூட எங்க காடுகள்ல கூடு கட்ட மறுக்குதுங்க. கிணறு வத்தி, உப்பு பூத்துப் போச்சு...” என்று கண் கலங்குகிறார் விவசாயி ராமசாமி.

சுற்றுவட்டார கிராமங்களில் ஏராளமான விவசாயிகள் மொத்தம் 700 ஏக்கர் வரை அணைக்காக தங்களது விவசாய நிலங்களைக் கொடுத்திருக்கிறார்கள். அத்தனைப் பேருக்கும் இதே பிரச்சினைதான்.

நொய்யல் ஒரத்துப்பாளையம் அணை மாசு நீரினால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நலச் சங்கத்தின் குழந்தைசாமி, "ஒரு சொட்டு ரசாயனக் கழிவுநீரைக்கூட நொய்யல் நதியில் விடக்கூடாது என்று சொல்லியிருக்கிறது உச்ச நீதிமன்றம். ஆனால், இந்த நிமிடம் கூட அணைக்கு ஒரு வினாடிக்கு 35 கன அடி ரசாயனக் கழிவுநீர் வந்துகொண்டுதான் இருக்கிறது” என்கிறார் கோபமாக. கழிவு நீரை வெளியேற்றும் சாய ஆலை களுக்கு சீல் வைத்து விட்டோம் என்கின்றனர் அதிகாரிகள். நாங்கள் தொழிலே செய்வ தில்லை என்கின்றனர் ஆலை அதிபர்கள். அப்படி எனில் வானத் தில் இருந்தா வருகிறது ரசாயனக் கழிவுநீர்? மேற்கண்ட பிரச்சினைகள் குறித்து 24 ஆண்டுகளாக எல் லோரும் பேசி மட்டுமே வருகி றோம். ஆனால், தீர்வு மட்டும் காணப்படவில்லை. தீர்வு காணவே முடியாது என்கின்றனர் சிலர்.

தீர்வு காணலாம்!

நீண்டகால செயல்பாடுகள் அடிப்படையில் இதற்கு தீர்வு காணமுடியும் என்கிறார் காவிரி நீர் வள ஆராய்ச்சி மையத்தின் ஒருங்கிணைப்பாளரும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளரு மான சரவணபாபு. “இதைத் தடுக்க முதலில் சாயக்கழிவு நீர் நொய்யலில் கலப்பது முற்றிலு மாகத் தடுக்கப்பட வேண்டும். கடந்த 2008-ம் ஆண்டு அணை யின் இரு கரைகளிலும் தேங்கி யிருந்த ரசாயனக் கழிவுகளை தூர் வாரியதைப் போல அணைக்குள்ளும் சில அடிகளுக்கு தூர் வார வேண்டும். பின்பு இங்கு பொழியும் மழை நீரை முழுமையாக அணையில் தேக்க வேண்டும். பின்பு டைப்பியா (Typha) என்கிற தாவரத்தை அணையில் வளர்க்க வேண்டும். இந்த தாவரத்தின் கிழங்கு போன்ற வேர்ப் பகுதி (Rhi zome) அதிக அளவு ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் தன்மை கொண்டது. மேற்கண்ட திட்டத்தை திருப்பூர், வீரபாண்டி உள்ளிட்ட இடங்களில் சில சாய ஆலைகளே வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளன.

அதேசமயம், பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களில் செயற்கை நீருட்டல் முறை மூலம் மழை நீரை பூமிக்குள் செலுத்தலாம். இது நிலத்தடி நீர் பாதிப்புக்கு தீர்வாக அமையும். கூடவே, விவசாயிகள் தங்களது மண்ணை ஆய்வுக்கு உட்படுத்தி அதன் ரசாயன விகிதாச்சாரங்களை அடையாளம் காண வேண்டும். அதற்கேற்ப அங்கு சில ஆண்டுகளுக்கு தொடர்ந்து இயற்கை உரங்களை ஊறப்போடுவதன் மூலம் மண்ணை சரிப்படுத்தலாம்.

அனைத்தையும் போர்க்கால நடவடிக்கையாக, ஓர் இயக்கமாக மேற்கொள்ள வேண்டும். அரசு இயந்திரம் இங்கு முழுமையாக சுற்றிச்சுழல வேண்டும். பொது மக்களும் விவசாயிகளும் முழுமை யாக ஒத்துழைக்க வேண்டும். இப்படி செய்தால் 10 ஆண்டுகளில் பிரச்சினைக்குத் தீர்வு காணலாம். ஆனால், நிலைமை தொடர்ந்தால் அடுத்த 10 ஆண்டுகளில் அந்த கிராமங்கள் மனிதனே வசிக்க தகுதி இல்லாத பூமியாகிவிடும்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வர்த்தக உலகம்

22 secs ago

தமிழகம்

26 mins ago

சினிமா

21 mins ago

இந்தியா

43 mins ago

சினிமா

53 mins ago

தமிழகம்

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

58 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்