தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கு அதிகக் கட்டணம்; தடுக்க நடவடிக்கை- உயர் நீதிமன்றம் உத்தரவு

By கி.மகாராஜன்

தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்குக் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த வெரோனிகா மேரி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:

''தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை நிர்ணயம் செய்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்காக 50 சதவீதப் படுக்கைகளை காலியாக வைத்திருக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் தனியார் மருத்துவமனைகள் அரசின் உத்தரவைக் கடைப்பிடிப்பதில்லை. கரோனா சிகிச்சைக்கு அதிகக் கட்டணம் வசூலிக்கின்றன. தமிழக முதல்வர் மற்றும் பிரதம மந்திரி மருத்துவ காப்பீட்டுத் திட்டங்களை தனியார் மருத்துவமனைகள் ஏற்பதில்லை.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ரெம்டெசிவிர் மருந்தைப் பயன்படுத்தலாம் என அரசு அறிவித்துள்ளது. இந்த மருந்து தமிழகத்தில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மட்டுமே கிடைக்கிறது.

எனவே, அரசு உத்தரவுப்படி தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்காக 50 சதவீதப் படுக்கைகளை காலியாக வைக்கவும், கரோனா சிகிச்சைக்குக் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுத்து, சிகிச்சைக் கட்டணத்தை இணையதளத்தில் வெளியிடவும், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ரெம்டெசிவிர் மருந்து கிடைக்க நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்''.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், புகழேந்தி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் வழக்கறிஞர் ஆர்.அழகுமணி வாதிடுகையில், ''தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கு அதிகபட்சம் ரூ.20 லட்சம் வரை வசூலிக்கப்படுகிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள படுக்கை வசதிகளை இணையதளத்தில் வெளியிட வேண்டும்'' என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், ''தனியார் மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அரசு நிர்ணயம் செய்ததை விடக் கூடுதல் கட்டணம் வசூலிப்பது பெரிய பிரச்சினையாக உள்ளது. தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்குக் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்கான படுக்கை வசதியை வெளிப்படையாக அறிவித்தால் பொதுமக்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். கரோனா நோயாளிகளுக்கான படுக்கை வசதிகள் இருப்பு குறித்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதால் சாதாரண மக்களுக்கும் படுக்கை வசதி கிடைப்பது உறுதி செய்யப்படும்.

எனவே, கரோனா நோயாளிகளுக்கான படுக்கை வசதி குறித்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது குறித்தும், தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்குக் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுப்பது குறித்தும் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும்'' என்று உத்தரவிட்டு விசாரணையை மே 13-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

39 mins ago

வர்த்தக உலகம்

47 mins ago

ஆன்மிகம்

5 mins ago

இந்தியா

15 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

கருத்துப் பேழை

2 hours ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

1 hour ago

மேலும்