நல்லாட்சி தொடர அதிமுக கூட்டணிக்கு வாக்களியுங்கள்: வாக்காளர்களுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓபிஎஸ், இபிஎஸ் வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் நல்லாட்சி தொடர அதிமுக கூட்டணிக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்து, புதிய வரலாற்றுச் சாதனை படைக்க வேண்டும் என்று வாக்காளர்களை அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதுகுறித்து கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், வாக்காளர்களுக்கு ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் விடுத்த வேண்டுகோள் வருமாறு:

எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் பசியும், பஞ்சமும் இல்லாதஆட்சி அமைவதற்காக அரும்பாடுபட்டார்கள். அதற்காக பல திட்டங்களை தந்தார்கள். ஏழை, எளியவர்கள் ஏற்றம் பெற வேண்டும். தாய்மார்களின் மனங்களில் மகிழ்ச்சி நிறைந்திருக்க வேண்டும். தமிழகம் தன்னிறைவு பெற வேண்டும். தமிழ் மொழியும், தமிழ் இனமும் கொண்டாடப்பட வேண்டும் என்ற தூய கொள்கையோடு வாழ்ந்தார்கள். தமிழகத்தை ஆண்டார்கள். அந்த நல்ல எண்ணங்களை தொண்டர்களின் மனங்களிலும் விதைத்தார்கள். அவர்கள் வழியிலேயே தொண்டர்களாகிய எங்களையும் வளர்த்தார்கள். அதனால்தான், தமிழகத்தில் அவர்கள் நினைத்த தூய ஆட்சி தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இந்த நல்லாட்சி தொடர வேண்டுமா? தீயசக்தி திமுகவின் குடும்ப ஆட்சி, நயவஞ்சக ஆட்சி,இருளில் சூழவைத்த ஆட்சி மீண்டும் தமிழகத்தில் வர வேண்டுமா? என்பதை தீர்மானிக்கும் தேர்தல் தான் தற்போது நடைபெறுகிறது. எம்ஜிஆர், ஜெயலலிதா வழியிலேநாங்கள் அனைத்து மதங்களையும் ஒன்றாக நேசிப்பவர்கள், பெண்களை தாயாக, சகோதரிகளாக நினைத்து நேசிப்பவர்கள் தெய்வங்களாக நினைத்துப் பூஜிப்பவர்கள்.

ஆனால், திமுகவினரோ மதங்களில் வேறுபாடு காண்பார்கள். இந்துக் கடவுள்களை இழிவாகபேசுவார்கள். கையெடுத்து கும்பிடவேண்டிய தாய்மார்களை அருவருக்கத்தக்க வார்த்தைகளால் அர்ச்சனை செய்பவர்கள். தமிழகத்தின் அமைதியைக் குலைக்கநினைப்பவர்கள். சிறுபான்மையினரை தேர்தலுக்காகவும், வாக்குக்காகவும் மட்டும் பயன்படுத்திக் கொள்வார்கள்.

பொதுநலமே இல்லாத சுயநலக்காரர்கள். எப்படியாவது இந்த நல்லாட்சியை வீழ்த்திவிட வேண்டும் என்பதற்காக திமுகவினர் பொய்யான வாக்குறுதிகளைஅள்ளி வீசுகிறார்கள்.

ராவணன் விரித்த வலையிலே சிக்கி மாய மானை நம்பிச் சென்று சிறைபட்ட சீதையைப் போல, தமிழகத் தாய்மார்களை ஏமாற்றுவதற்காக ஒரு மாய வலையை திமுக வீசிக் கொண்டிருக்கிறது. சித்ரவதையில சிக்கித் தவித்த சீதையை மீட்டெடுத்த அனுமனைப் போல, தமிழர்களைக் காப்பாற்ற, தாய்மார்களைக் காப்பாற்ற, ஜெயலலிதாவின் விசுவாசத்தொண்டர்களாகிய நாங்கள் இருக்கிறோம். உங்களுக்காக உண்மையாக உழைக்க இருக்கிறோம். எல்லா மதங்களுக்கும் அரணாக நாங்கள் இருக்கிறோம்.

இத்தேர்தல் நீதிக்கும், அநீதிக்கும் நடைபெறும் போர்க்களம். தர்மத்துக்கும், அதர்மத்துக்கும் நடைபெறும் யுத்தம். இதில் நீதிவெல்ல வேண்டும். தர்மம் வெல்லவேண்டும். அந்த வெற்றியை விசுவாசத் தொண்டர்கள்தான் பெற்றுத் தர வேண்டும். வாக்குப் பதிவுநாளன்று வாக்காளர்கள் அனைவரும் காலை 7 மணியில் இருந்தேவாக்குச் சாவடிகளுக்குச் சென்றுவாக்களிக்க செய்திட வேண்டும். வாக்குப்பதிவு நிறைவடைந்து அதை சீலிட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு சென்று சேர்க்கும் வரையிலும் மிகவும் கவனமாகவும், விழிப்புடனும் இருக்க வேண்டும்.

அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு இரட்டை இலை, தாமரை, மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டுகிறோம். அள்ளிக் கொடுக்கும் ஆட்சி தொடரட்டும், நல்லதைச் செய்யும் நல்லாட்சி தொடரட்டும்.

இவ்வாறு ஓபிஎஸ், இபிஎஸ் கேட்டுக் கொண்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

12 mins ago

வாழ்வியல்

21 mins ago

தமிழகம்

37 mins ago

கருத்துப் பேழை

59 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

உலகம்

1 hour ago

சினிமா

2 hours ago

வலைஞர் பக்கம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்