தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மழைநீர் தேங்கும் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, தமிழக கூடுதல் தலைமைச் செயலாளரும், வருவாய் நிர்வாக ஆணையருமான பணீந்திரரெட்டி தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வடகிழக்கு பருவழை தொடர்பான ஆய்வு கூட்டம் பணீந்திரரெட்டி தலைமையில் இன்று நடைபெற்றது.
கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வருவாய்) விஷ்ணுசந்திரன், மாநகராட்சி ஆணையர் வீ.ப.ஜெயசீலன், தூத்துக்குடி சார் ஆட்சியர் சிம்ரோன் ஜீத் சிங் காலோன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திரரெட்டி பேசும்போது, தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை மூலம் ஆண்டுதோறும் 65 சதவிதம் மழையானது பெறப்படுகிறது. இந்த மழையை பேரிடராக கருதாமல் மழைநீரை சேமிக்க வேண்டும். உள்ளாட்சி நிர்வாகங்கள் கரோனா தொற்று காலத்தில் மிக சிறப்பாக செயல்பட்டன. அதுபோல கூடுதல் மழை பொழிவு போதும் மழை வெள்ள பாதிப்புகள் ஏற்படாமல் சிறப்பாக செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.
மாவட்டத்தில் உள்ள ஏரிகள், குளங்களுக்கான நீர்வரத்து குறித்தும், அவைகளின் பாதுகாப்பு குறித்தும் ஆய்வு செய்த வருவாய் நிர்வாக ஆணையர், தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
பின்னர் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மழைநீர் பாதித்த பகுதிகளையும், மழைநீரை வெளியேற்றும் பணிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி தபால் தந்தி காலனி, பிரையண்ட் நகர், லூர்தம்மாள்புரம் உள்ளிட்ட இடங்களை நேரில் பார்வையிட்டு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
தொடர்ந்து வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திரரெட்டி செய்தியாளர்களிடம் கூறியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரே நாளில் பெய்த கன மழையில் தூத்துக்குடி மாநகராட்சி, காயல்பட்டினம், விளாத்திக்குளம் பகுதியில் ஒருசில இடங்களில் பாதிப்பு ஏற்பட்டது. அதற்கு மாவட்ட நிர்வாகமும், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகமும் இணைந்து செயல்பட்டு உடனடி தீர்வு காணப்பட்டது.
அனைத்து துறைகளும் பேரிடர் காலங்களை சமாளிக்க ஆயத்த நிலையில் இருக்கின்றன. எந்தவிதமான மழை வந்தாலும் அதை எதிர்கொள்வதற்கு எல்லா துறைகளும் இணைந்து செயல்படுவதற்கு ஆயத்த நிலையில் இருக்கின்றன.
பேரிடர் காலங்களில் பொதுமக்களை தங்க வைக்க தேவையான இடங்கள் தயார் நிலையில் இருக்கின்றன. முக்கிய அலுவலர்கள் அங்கு சென்று அடிப்படை வசதிகள் உள்ளதா என ஆய்வு செய்திருக்கிறார்கள். ஒரு வேளை பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை வந்தால் பொதுமக்களுக்கு தக்க நேரத்தில் தகவலை தெரிவித்து அவர்களுக்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும்.
மாநகராட்சி பகுதியில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்ற துரிதமாகவும், தேவையான அளவுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மற்ற நகராட்சி மற்றும் கிராம பகுதிகளிலும் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தூத்துக்குடி மாநகராட்சியில் மழைநீர் தேங்கும் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண மழைநீர் வடிகால் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இன்னும் 4 அல்லது 5 மாதங்களில் இந்த பணிகள் நிறைவடையும். அப்போது மழைநீர் தேங்கும் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். அடுத்த மழை காலத்தில் இந்த பிரச்சினை இருக்காது என எதிர்பார்க்கிறோம்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இதுவரை 22 சதவீதம் குறைவாக பெய்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உபரியாக மழை பெய்துள்ளது. தமிழகத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட சில இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. அதனை அகற்றும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது என்றார் அவர்.
ஆய்வுக் கூட்டத்தில் உதவி ஆட்சியர் (பயிற்சி) பிரித்திவிராஜ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா, வருவாய் கோட்டாட்சியர்கள் விஜயா (கோவில்பட்டி), தனப்ரியா (திருச்செந்தூர்), சுகாதார பணிகள் துணை இயக்குநர்கள் கிருஷ்ணலீலா, அனிதா, மாநகராட்சி நல அலுவலர் அருண்குமார், மாநகராட்சி தலைமை பொறியாளர் சேர்மக்கனி, பொதுப்பணித்துறை (நீர்வள ஆதார அமைப்பு) செயற்பொறியாளர்கள் பத்மா, அண்ணாத்துரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
இந்தியா
3 hours ago
விளையாட்டு
5 hours ago
சினிமா
5 hours ago
சுற்றுச்சூழல்
5 hours ago
விளையாட்டு
7 hours ago
இந்தியா
9 hours ago
வலைஞர் பக்கம்
9 hours ago
இந்தியா
10 hours ago
தமிழகம்
10 hours ago
இந்தியா
10 hours ago
தமிழகம்
11 hours ago