தமிழகத்தில் இந்த ஆண்டு பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என்பதால், 75 சதவீத கல்விக் கட்டணத்தில் மீதமுள்ள 35 சதவீதக் கட்டணத்தை வசூலித்துக் கொள்ளலாம் என்று தனியார் பள்ளிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதனை 2021 பிப்ரவரி 28-ம் தேதிக்குள் வசூலிக்கலாம் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கரோனா பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக பள்ளிகள் கட்டணம் வசூலிக்கக் கூடாது எனத் தமிழக அரசு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து தனியார் பள்ளிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், கடந்த ஆண்டு வசூலிக்கப்பட்ட கட்டணத்தில் 75 சதவீதத்தை வசூலித்துக் கொள்ளலாம் எனவும், அதில் 40 சதவீதக் கட்டணத்தை செப்டம்பர் 30-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் எனவும், மீதத் தொகையைப் பள்ளிகள் திறந்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு வசூலிக்கலாம் எனவும் கடந்த ஜூலை 17-ம் தேதி உத்தரவு பிறப்பித்தது.
மேலும், பள்ளிகள் எப்பொழுது திறக்கப்படும் என இதுவரை எந்த அறிவிப்பும் இல்லாததால், 35 சதவீதக் கட்டணத்தை வசூலித்துக் கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் எனவும், தொடர்ச்சியாக ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதால் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான ஊதியம் உள்ளிட்ட இதர செலவுகளைச் சமாளிக்க சிரமம் ஏற்பட்டுள்ளதாகத் தனியார் பள்ளிகள் தரப்பில் முறையிடப்பட்டிருந்தது.
இதையடுத்து, தமிழகத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் பள்ளிகள் திறக்க வாய்ப்புள்ளதா என அரசிடம் விளக்கம் பெற்று தெரிவிக்குமாறு பள்ளிக் கல்வித்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் இன்று (நவ.18) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, பள்ளிகள் திறப்பு குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
நீதிமன்றம் உத்தரவிட்டும் பல பள்ளிகள் 40 சதவீதக் கட்டணம் கூட இதுவரை முழுமையாக வசூலிக்கவில்லை எனவும், 6 லட்சம் மாணவர்கள், மாற்றுச் சான்று இல்லாமல் அரசுப் பள்ளிகளுக்குச் சென்றுவிட்டதாகவும் தனியார் பள்ளிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், ஆன்லைன் மூலம் வகுப்புகளும், தேர்வுகளும் நடத்தப்பட்டு வரும் நிலையில், சில மாணவர்கள் முதல் தவணைக் கட்டணமான 40 சதவீதக் கட்டணத்தைச் செலுத்தவில்லை என்றாலும் அவர்களைத் தொடர்ந்து வகுப்புகளில் சேர்த்துப் பாடங்கள் நடத்தப்படுவதாகவும் விளக்கமளிக்கப்பட்டது.
இதனைப் பதிவு செய்த நீதிபதி, தனியார் பள்ளிகள் விடுத்த கோரிக்கையை ஏற்று 75% கட்டணத்தில் மீதமுள்ள 35 சதவீதக் கட்டணத்தை 2021 பிப்ரவரி 28-ம் தேதிக்குள் வசூலிக்கலாம் எனத் தனியார் பள்ளிகளுக்கு அனுமதியளித்து உத்தரவிட்டார்.
இந்தத் தொகையை தவணை முறையில் வசூலிப்பது குறித்து பள்ளிகள் முடிவு செய்து கொள்ளலாம் எனவும் நீதிபதி தெரிவித்தார்.
முதல் தவணையான 40 சதவீதக் கட்டணத்தையும், 2019-20-ம் கல்வியாண்டில் செலுத்த வேண்டிய நிலுவைக் கட்டணத்தையும் செலுத்தாத மாணவர்கள், மீதமுள்ள 35 சதவீதக் கட்டணத்தையும் சேர்த்துச் செலுத்த வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும், முழுக் கட்டணத்தை வசூலித்ததாக தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு எதிரான புகார்கள் குறித்து மாவட்டக் கல்வி அதிகாரிகள் விசாரித்து நவம்பர் 27-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால், பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் எனவும் எச்சரித்து விசாரணையை மார்ச் 1 ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.
முக்கிய செய்திகள்
சினிமா
11 mins ago
இணைப்பிதழ்கள்
5 hours ago
தமிழகம்
5 mins ago
சினிமா
16 mins ago
சினிமா
19 mins ago
வலைஞர் பக்கம்
23 mins ago
சினிமா
28 mins ago
சினிமா
33 mins ago
இந்தியா
41 mins ago
க்ரைம்
38 mins ago
இந்தியா
44 mins ago
தமிழகம்
1 hour ago