தமிழகத்தில் பள்ளி - கல்லூரிகளைத் திறப்பது குறித்து இதுவரை எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை; உயர் நீதிமன்றத்தில் கல்வித்துறை தகவல்

By ஆர்.பாலசரவணக்குமார்

தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளைத் திறப்பது குறித்து இதுவரை எந்த ஒரு முடிவும் அரசு எடுக்கவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா பரவல் காரணமாக மார்ச் மாத இறுதியில் 10-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தேர்ச்சி என தமிழக அரசு அறிவித்தது.

காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் வருகைப்பதிவின் அடிப்படையில் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு, மதிப்பெண் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

ஆனால், பள்ளிகளில் படிக்காமல் நேரடியாக பத்தாம் வகுப்புக்குத் தேர்வு எழுத ஹால் டிக்கெட் பெற்றிருந்த தனித்தேர்வர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கக் கோரி, கோவையைச் சேர்ந்த வருண்குமார் என்ற தனித்தேர்வரின் தந்தை பொறியாளர் எஸ்.பாலசுப்ரமணியன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், 11-ம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கையும், பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கையும் ஆகஸ்ட் 24-ல் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தனித் தேர்வர்களை தேர்ச்சி பெற்றதாக அறிவிக்காமல் பாரபட்சம் காட்டுவதால், அவர்கள் ஓராண்டை இழக்க நேரிடும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

தனித்தேர்வர்களின் முடிவுகளை வெளியிடும் வரை, மேல்நிலைப் பள்ளி மாணவர் சேர்க்கையையும், பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையையும் தள்ளி வைக்க வேண்டும் எனவும், தனித்தேர்வர்களையும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவித்து, மதிப்பெண் பட்டியலை வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மேல்நிலை வகுப்புகள் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகள், எப்போது தொடங்கப்பட உள்ளன என்பது குறித்து அரசு பதிலளிக்குமாறு உத்தரவிட்டிருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு இன்று (ஆக.25) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, கல்வித்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முனுசாமி, தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்பது தொடர்பாக அரசு இதுவரை எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லை என்று தெரிவித்தார்.

தனித் தேர்வைப் பொறுத்தவரை நடத்தி முடிக்கப்பட்ட இரண்டு வாரத்தில் அதன் முடிவுகள் வெளியிடப்படும் என்றும் உறுதியளித்தார். இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

28 mins ago

க்ரைம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

4 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

6 hours ago

சினிமா

6 hours ago

கல்வி

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

சினிமா

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்