தமிழக முதல்வரின் கோரிக்கைகளை ஏற்று பிரதமர் உடனே நிதி வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன்

By செய்திப்பிரிவு

தமிழக முதல்வர் கேட்டுக்கொண்டதற்கு ஏற்ப மத்திய அரசு நிதியை வழங்க வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, ஜி.கே.வாசன் இன்று (ஏப்.29) வெளியிட்ட அறிக்கையில், "தமிழகத்தில் கரோனா தாக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்பில் இருந்து தமிழக மக்களை படிப்படியாக மீட்க வேண்டும் என்பதற்காக தமிழக முதல்வர் பிரதமருக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ள கருத்துகளும், கோரிக்கைகளும் தமிழக மக்களுக்குப் பலன் தர பிரதமர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குறிப்பாக, கரோனா தடுப்பு உபகரணங்களை வாங்குவதற்கு 1,000 கோடி ரூபாயை உடனடியாக வழங்கவும், 10 ஆயிரம் பிசிஆர் பரிசோதனை கருவிகளை அனுப்பவும், மத்திய அரசின் திட்டத்துக்குக் கீழ் வரும் பயனாளிகள் உள்பட அனைத்து ரேஷன் அட்டைதாரருக்கும் இலவசமாக உணவு தானியங்களை வழங்கும் வகையில் கூடுதலாக அவற்றை தமிழகத்துக்கு வழங்கவும், அரிசி கொள்முதலை ஊக்குவிக்கும் வகையில் சிஎம்ஆர் என்ற நெல் அரவை மானியத் தொகை ரூ.1,321 கோடியை வழங்கவும் தமிழக முதல்வர் பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

மேலும், விவசாயப் பொருள்கள் உற்பத்தியாளர்கள் சங்கங்களுக்கு போக்குவரத்துக் கட்டணத்தில் மானியம் வழங்க ஆவன செய்யவும், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் பயனாளிகளுக்கு நேரடியாக பணம் அளிக்க அனுமதிக்கவும், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய வங்கிக் கடனுக்கான வட்டியை 6 மாதங்களுக்கு ரத்து செய்யவும், ஜிஎஸ்டி வருமான வரி செலுத்த 6 மாத கால அவகாசம் அளிக்கவும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளையும், கருத்துகளையும் தமிழக முதல்வர் பிரதமருக்குக் கடிதம் மூலம் அனுப்பி வைத்திருக்கிறார். இதனையெல்லாம் பிரதமர் கனிவோடு பரிசீலனை செய்து நிறைவேற்ற வேண்டும்.

காரணம் 2 முறை ஊரடங்கை அமல்படுத்தி நடைமுறையில் இருப்பினும் நோய்த் தடுப்புக்காக தமிழக அரசு சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற வேளையில் இன்னும் பல நடவடிக்கைகளை விரைவுபடுத்தவும், பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிடவும் அதிக நிதி தேவைப்படுகிறது.

இப்போதைய பொருளாதார நெருக்கடியான சூழலில் தமிழக அரசுக்கும் வருவாய் என்பது மிகவும் குறைவு. இருக்கின்ற நிதியை வைத்துக்கொண்டு தமிழக மக்களுக்கு உதவிகள் செய்து வருகின்ற வேளையில் மத்திய அரசு தமிழகத்துக்குத் தேவையான நிதியை காலக்கெடுவுக்குள் வழங்கினால் பேருதவியாக இருக்கும்.

அதாவது, கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் நோய்த் தடுப்புக்கும், பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பொருளாதார ரீதியாக உதவிடுவதற்கும் மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டிய அவசியமும், அவசரமும், கட்டாயமும் இப்போது ஏற்பட்டுள்ளது.

எனவே பிரதமர்- தமிழக முதல்வரின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு நிதியை உடனே வழங்கவும், கோரிக்கைகளை படிப்படியாக விரைவில் நிறைவேற்றி தமிழக மக்கள் நலன் காக்கவும் வேண்டும்" என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 mins ago

வாழ்வியல்

11 mins ago

தமிழகம்

27 mins ago

கருத்துப் பேழை

49 mins ago

விளையாட்டு

53 mins ago

இந்தியா

57 mins ago

உலகம்

1 hour ago

சினிமா

1 hour ago

வலைஞர் பக்கம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்