144 தடை உத்தரவால் விற்பனை முடக்கம்: வேப்பனப்பள்ளியில் டன் கணக்கில் குப்பையில் வீசப்படும் பன்னீர் ரோஜாக்கள்

By செய்திப்பிரிவு

144 தடை உத்தரவால் உள்ளூர் விற்பனை முற்றிலும் முடங்கியுள்ள நிலையில், வேப்பனப்பள்ளி பகுதியில் விற்பனைக்கு அனுப்புவதற்காக பறிக்கப்பட்ட பன்னீர் ரோஜாக்களை விவசாயிகள் குப்பையில் வீசினர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி, வேப்பனப்பள்ளி, காவேரிப்பட்டணம், ஆவல்நத்தம், கொண்டப்பநாயனப்பள்ளி, போச்சம்பள்ளி பகுதிகளில் பரவலாக விவசாயிகள் பன்னீர் ரோஜா சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். இவ்வகை ரோஜாக்கள் கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர் மாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. பன்னீர் ரோஜா சாகுபடியில் பராமரிப்பு செலவு கூடுதலாக இருந்தாலும் சீராக வருவாய் கிடைத்து வந்தது.

இந்நிலையில், தற்போது கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் 144 தடை உத்தரவு அமலாக்கப்பட்டுள்ளது. இதனால் மலர் விற்பனை முற்றிலும் முடங்கியுள்ள நிலையில், வெளியூர்களுக்கு அனுப்புவதற்காக பறிக்கப்பட்ட பன்னீர் ரோஜா மலர்களை, விவசாயிகள் பலர் குப்பையில் கொட்டிவிட்டனர். மேலும் சிலர், பன்னீர் ரோஜா மலர்களை தோட்டத்திலேயே பறிக்காமல் விட்டுள்ளனர்.

இதுதொடர்பாக பன்னீர் ரோஜா மலர் சாகுபடியில் ஈடுபட்டுள்ள மலர் விவசாயி சரவணன் கூறும்போது, ‘‘சென்ட் ரோஜா எனப்படும் பன்னீர் ரோஜா மற்றும் பட்டன் ரோஜா சாகுபடியால் விவசாயிகளுக்கு ஓரளவு நிரந்தர வருமானம் கிடைத்து வந்தது. தற்போது 144 தடை உத்தரவால் உள்ளூர் விற்பனையும், வெளி மாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்புவதும் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. 144 தடை உத்தரவு அமலுக்கு வரும் வரை, நாள்தோறும் குறைந்தது 50 டன் அளவு பல்வேறு மாவட்டங்களுக்கும் பன்னீர் ரோஜாப்பூக்களை விற்பனைக்கு அனுப்பி வந்தோம். தற்போது தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், ஏற்கெனவே பறிக்கப்பட்ட பூக்களை குப்பையில் வீசி விட்டோம். பலர் பூக்களை பறிக்காமலேயே தோட்டத்தில் விட்டுள்ளனர்.

மேலும், வாசனை திரவிய தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வைக்கலாம் என்று நினைத்து மலர்களை பறித்து உலர வைத்தோம். ஆனால், வாசனை திரவிய தொழிற்சாலைகளில் மலர் கொள்முதலை நிறுத்திவிட்டனர்.

இதனால் எங்களது வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, அரசு தோட்டக்கலைத்துறை மூலம் கணக்கெடுப்பு நடத்தி, ரோஜா மலர் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

22 mins ago

தமிழகம்

7 mins ago

வாழ்வியல்

31 mins ago

தமிழகம்

47 mins ago

ஆன்மிகம்

5 mins ago

கருத்துப் பேழை

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

உலகம்

1 hour ago

சினிமா

2 hours ago

வலைஞர் பக்கம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்